தடுப்பூசி போட்டாச்சுன்னு மெத்தனமா இருக்க கூடாது.. ஆய்வில் முக்கிய எச்சரிக்கை
டெல்லி: கொரோனா பெருந்தொற்றால் பதட்டத்தில் இருந்த உலக நாடுகள் பலவும் தற்போதுதான் நிம்மதிப் பெருமூச்சை விட்டிருக்கின்றன. இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் பரவல் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகாலம், மக்களின் வாழ்க்கையை கபாளீகரம் செய்து விட்டது என்றே கூறலாம்.
தற்போதுள்ள சூழலில் கொரோனா வைரஸ் ஆல்பா, டெல்டா, டெல்டா ப்ளஸ் என மூன்று திரிபுகளாக உருமாறி தற்போது வரை மக்களை அச்சத்தில் வைத்திருந்தாலும் பரவல் குறைவு காரணமாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில் மக்களுக்கு தடுப்பூசி வழங்க மத்திய மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதுவரை 110 கோடி தடுப்பூசிகளுக்கு மேல் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் தற்போது வெளிவந்திருக்கும் ஆய்வு முடிவுகள் மக்களின் அடிவயிற்றில் புளியைக் கரைப்பது போல் உள்ளது.
ஆம், தடுப்பூசிகளை முழுமையாக எடுத்துக் கொண்டிருந்தாலும், கொரோனா டெல்டா வகை வைரஸ் மக்களை தாக்க வாய்ப்புள்ளது என்பதே அது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் இயங்கி வரும் ஐ.என்.எஸ்.ஏ.சி.ஓ.ஜி. அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில், தேசிய நோய் கட்டுப்பாட்டு ஆய்வு மையம் ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில், இந்தியாவில் கண்டறியப்பட்ட 'டெல்டா வைர'ஸின் மரபணு வரிசையில் 'K417N' எனும் புதிய திரிபு (Mutation) ஏற்பட்டுள்ளது.
Recommended Video
இந்த வைரஸ் நம் உடல் செல்களுக்குள் 'ஏசிஇ2' புரத ஏற்பிகளுடன் இணைந்து நுழையும் கூர்ப்புரதங்களில் (Spike proteins) இந்த மாற்றங்களைச் செய்துள்ளது. இந்த வகை கொரோனா டெல்டா வைரஸ் தடுப்பூசிகளிடமிருந்தும்கூடத் தப்பித்துவிடும் அளவுக்கு வீரியமிக்கதாகக் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே தடுப்பூசி போட்டிருந்தாலும் மக்கள் தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல் போன்ற வழக்கமான நடைமுறைகளை மேற்கொள்வதே கொரோனா டெல்டாவிலிந்து தப்ப ஏதுவாக இருக்குமென ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications