டெல்லியில் நீதிபதிக்கே இப்படியொரு நிலையா? வென்டிலேட்டர் கிடைக்காமல் திண்டாடும் மாஜிஸ்திரேட்
டெல்லி: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ள நீதிபதி ஒருவருக்கு வென்டிலேட்டர் சிகிச்சை கிடைக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் கொரோனா பரவலின் 2ஆம் அலை மிக மோசமாக உள்ளது. இதனால் அம்மாநிலத்திலுள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் ஏற்கனவே நிரம்பிவிட்டன. கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர் சிகிச்சை போதுமானதாக இல்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நீதிபதி ஒருவருக்கே டெல்லியில் வென்டிலேட்டர் சிகிச்சை கிடைக்காமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது டெல்லி தீஸ் ஹஜாரி நீதிமன்ற வளாகத்தில் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டாக உள்ளவர் நுபுர் குப்தா.
அவருக்குக் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது. 32 வயதான அவர், டெல்லியிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவரது உடல்நிலை மோசமாகத் தொடங்கியது.
மூச்சுத் திணறல் ஏற்படுவதைத் தவிர்க்க அவருக்கு வென்டிலேட்டர் சிகிச்சை உதவி தேவைப்பட்டது. இருந்தாலும் பெண் நீதிபதிக்கு வென்டிலேட்டர் கிடைக்கவில்லை என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
'டெல்லி கொரோனா' செயலியிலுள்ள தகவலின்படி, மாநிலத்திலுள்ள 1,657 வென்டிலெட்டர் வசதி கொண்ட ஐசியு படுக்கைகளில் தற்போது 5 படுக்கைகள் மட்டுமே காலியாகவுள்ளன. தலைநகரில் நேற்று மட்டும் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா கண்டறியப்பட்டது.
வரும் காலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால், நிலைமை மோசமாவதைத் தடுக்க டெல்லி அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications