கொரோனாவுக்கு நோ என்ட்... புதிய வேரியண்ட்கள் நிறைய உருவாகும் - எச்சரிக்கும் டெட்ராஸ் அதேனோம்
கொரோனாவை முடிவுக்கு கொண்டு வரும் விஷயத்தில், நாம் அனைவரும் மிக முக்கியமான தருணத்தில் இருக்கிறோம். அதனால் அலட்சியம் வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி டெட்ராஸ் அதேனோம் கூறியுள்ளார்.
டெல்லி: ஓமிக்ரான் வேரியண்ட் கொரோனாதான் அனைத்திலும் கடைசி கொரோனா வேரியண்ட் ஆக இருக்குமென நினைக்கவேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி டெட்ராஸ் அதேனோம் கூறியுள்ளார். இந்த கொரோனா பெருந்தொற்றின் இறுதி ஆட்டத்தில்தான் நாம் இப்போது இருக்கிறோமென நினைப்பது தவறு என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
கடந்த 2ஆண்டுகாலமாக கொரோனாவின் பிடியில் உலக மக்கள் சிக்கிக்கொண்டுள்ளனர். கொரோனா முதல் அலையில் அதிகம் பாதிக்கப்பட்டது அமெரிக்கா. கொத்து கொத்தாக பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். 2020 ஆம் ஆண்டில் டெல்டா வைரஸ் தீவிரமடைந்தது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையில் தீவிரமாக வீசியதால் அதிகம் பாதிப்பு ஏற்பட்டது. பல லட்சம் பேர் தினசரியும் பாதிக்கப்பட்டனர்.
தமிழ்நாட்டில் சற்றே குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு! முடிவுக்கு வருகிறதா 3ஆம் அலை? முழு தகவல்
கொரோனாவுக்கு எதிராக ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. பல கோடி பேர் தற்போது தடுப்பூசி செலுத்திக்கொண்டு உள்ளனர். டெல்டா கொரோனா தொற்று படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. இந்த சூழலில் ஓமிக்ரான் வைரஸ் பரவத் தொடங்கியது. இந்தியாவில் தினசரி பாதிப்பு 3 லட்சமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஓமிக்ரானுடன் கொரோனா முடிவுக்கு வந்து விட வாய்ப்பு உள்ளதாக பலரும் நிம்மதி பெருமூச்சு விட்டு வரும் நிலையில் கொரோனாவுக்கு முடிவே இல்லை என்று கூறி அதிர்ச்சி அளித்துள்ளார். உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி டெட்ராஸ் அதேனோம்.
கொரோனா பெருந்தொற்று
ஜெனிவாவில் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய டெட்ராஸ் அதேனோம், கொரோனா பெருந்தொற்று நோயானது, தனது மூன்றாவது ஆண்டுக்குள் நுழைகிறது. இது நமக்கெல்லாம் மிகவும் முக்கியமான தருணம் என்று கூறினார். அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட்டு கொரோனாவை முடிவுக்கு கொண்டு வர உழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
முடிவுக்கு கொண்டு வருவோம்
இனியும் கொரோனா தொடர்கதையாக நாம் அனுமதிக்க கூடாது. கொரோனாவை ஒழிப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளும் நம்மிடையே உள்ளன. ஆகவே கொரோனாவை முடிவுக்கு கொண்டு வரும் விஷயத்தில், நாம் அனைவரும் மிக முக்கியமான தருணத்தில் இருக்கிறோம். அதனால் அலட்சியம் வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஓமிக்ரான் பரவல்
அதிக பரவும் தன்மை கொண்டு இருக்கும் ஓமிக்ரான் வேரியண்ட் கொரோனாதான் அனைத்திலும் கடைசி கொரோனா வேரியண்ட் ஆக இருக்குமென நினைக்கவேண்டாம். அப்படி நினைத்தால், அதுவே ஆபத்துக்கு வழிவகுக்கும். ஆகவே இந்த கொரோனா பெருந்தொற்றின் இறுதி ஆட்டத்தில்தான் நாம் இப்போது இருக்கிறோமென நினைப்பது தவறு.
அதிகரிக்க வாய்ப்பு
கடந்த 9 வாரங்களுக்கு முன்னர்தான் ஓமிக்ரான் வேரியண்ட் உறுதிசெய்யப்பட்டிருந்தது. இந்த குறுகிய காலத்துக்குள் கிட்டத்தட்ட 80 மில்லியன் புதிய கொரோனா தொற்றாளர்கள் உறுதிசெய்யப்பட்டிருக்கிறார்கள். 80 மில்லியன் என்பது, 2020ஆம் ஆண்டு பதிவான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது என குறிப்பிட்டுள்ளார். இன்னும் புதிது புதிதாக பல கொரோனா வேரியண்ட்கள் உருவாக வாய்ப்பிருக்கிறது என்றும் எச்சரித்தார்.
பி.1.640.2 புதிய கொரோனா
இப்போதே பி.1.640.2 என்ற புதிய வேரியண்ட் பரவத்தொடங்கிவிட்டது. இது 46 வேரியண்ட்களைக் கொண்டது. 46 என்பது, ஒமிக்ரானை விட அதிக பிறழ்வாகும். புதிய உருமாறிய IHU கொரோனா வேரியண்ட் பரவி வருவதால் மக்கள் மத்தியில் கூடுதல் கவனம் தேவை என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஒருவேளை, கொரோனா பரிசோதனையை துரிதப்படுத்துவது மற்றும் தடுப்பூசி பயன்பாட்டை அதிகரிப்பது போன்றவற்றை அனைத்து நாடுகளும் சரியாக முயன்றால், நம்மால் இந்த இக்கட்டான நிலையை கடக்க முடியும் என்றும் டெட்ராஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்கு முடிவே இல்லையா
கடந்த 2019ஆம் ஆண்டு இறுதி முதல் கொரோனா வைரஸ் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றனர். ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, டெல்டா பிளஸ், ஓமிக்ரான் என பல வேரியண்ட்கள் பரவி மக்களை பாதித்து வருகிறது. ஓமிக்ரான்தான் கடைசி வேரியண்ட் என்று நினைத்த நிலையில் கொரோனாவுக்கு முடிவே இல்லை என்று கூறி எச்சரித்துள்ளார் டெட்ராஸ் அதேனோம்.