கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை...எதிர்கட்சியினர் பீதி கிளப்பாதீர்கள்- அமைச்சர் ஹர்ஷ்வர்தன்
கோவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்தத் தவறியதை அரசியலாக்கியதற்காக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் புதன்கிழமை கடுமையாக சாடியுள்ளார்.
டெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை எங்கும் ஏற்படவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் கூறியுள்ளார். எதிர்கட்சியினர் ஆளும் சில மாநிலங்களில் அரசுகள் தங்கள் தோல்வியை மறைப்பதற்காக, மக்களிடம் கொரோனா பீதியை ஏற்படுத்தி வருவதாகவும் ஹர்ஷ்வர்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1.28 கோடியை கடந்துள்ளது. ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மகாராஷ்டிரா மாநில அரசு கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என கூடுதல் தடுப்பூசிகளை மத்திய அரசிடம் கோரியிருந்தது. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடுகள் நிலவுவதாக பெரும் வதந்தி பரவியது.
இந்த நிலையில் இதனை மறுத்துள்ள மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன், கொரோனா பரவலை கட்டுப்படுத்த மகாராஷ்டிர அரசு தவறியுள்ளது என மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் குற்றசாட்டு கூறியுள்ளார். தடுப்பூசி பற்றாக்குறை குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்று குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஒட்டுமொத்த அளவில் நாங்கள் ஏற்கனவே 8 கோடி 30 லட்சம் பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தியுள்ளோம். நேற்று ஒரே நாளில் மட்டும் 43 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது தடுப்பூசி திட்டத்தின் மிகப்பெரிய வெற்றியாகும். கொரோனா தடுப்பூசிக்காக பதிவு செய்பவர்களுக்கு தடையற்ற எளிதான வழிமுறை உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் கூறியுள்ளார்.
ராமாயணத்தில் உயிர் காக்கும் சஞ்சீவி மூலிகையை கொண்டுருவந்து லட்சுமணின் உயிரை காப்பதற்காக அனுமான் இமயமலையில் இருந்து பல மைல் தூரத்திற்கு சஞ்சீவி மலையை பெயர்த்து தூக்கிக் கொண்டுவந்தார். ஆனால் நாங்கள் சஞ்சீவி மூலிகை போன்ற உயிர் காக்கும் கொரோனா தடுப்பூசிகளை அரசு, தனியார் மருத்துவமனைகள் என நாட்டின் பல மையங்களில் உங்களுக்கு கிடைக்கச் செய்துள்ளோம் என ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சியினர் ஆளும் சில மாநிலங்கள் தொற்று பரவலைத் தடுக்காமல், இந்த பிரச்னையை திசைதிருப்பவே தடுப்பூசி பற்றாக்குறை என கூறி வருவதாக தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து தெரிவித்திருந்தார். கடந்த மூன்று நாட்களாக போதுமான தடுப்பூசிகள் இல்லையென அவர் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, தடுப்பூசி பற்றாக்குறை என தெரிவித்திருந்த மாநில அரசுகளுக்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பும் எனவும் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.