என்னாச்சு.. இந்தியாவில் மீண்டும் மெல்ல உயர்ந்த கொரோனா பாதிப்பு.. பாசிட்டிவ் ரேட் 0.51%
டெல்லி: இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளதை கடந்த 24 மணி நேரத்தில் வெளியான பரிசோதனை முடிவுகள் உறுதிபடுத்தி உள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 8,97,904 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 4,575 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. நேற்று 24 மணி நேர கொரோனா பாதிப்பு 3,993 ஆக இருந்த நிலையில் தற்போது 4,500-ஐ தாண்டியுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 145 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 46,962 ஆக உள்ளது. இதுவரை நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,15,355 ஆக உயர்ந்து இருக்கிறது.
கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 7,416 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் 2,986 குறைந்துள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 4,24,13,566 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 0.51% ஆகவும் வாராந்திர பாதிப்பு விகிதம் 0.62% ஆகவும் இருக்கிறது. கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 98.69% ஆக உள்ளது. இந்தியாவில் இதுவரை 179.33 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
உலகளவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 லட்சத்தை (6,004,421) தாண்டியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. ஒட்டுமொத்தமாக உலக அளவில் 44,65,11,318 பேர் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 6,004,421 பேர் நோய் பாதிப்பிலிருந்து மீள முடியாமல் உயிரிழந்துள்ளனர்.
இதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 7.8 கோடியாக உள்ளது. இதில் 9,51,348 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் உள்ளன.