முரண்பாடு... கொரோனா பலி 8 மடங்கு அதிகரிப்பு... உலக சுகாதார நிறுவன கணக்கீட்டுக்கு இந்தியா எதிர்ப்பு
டெல்லி: உலக சுகாதார அமைப்பின் கணக்கீட்டின்படி 2021 முடிவில் இந்தியாவில் கொரோனாவால் 40 லட்சம் பேர் இறந்ததாகவும், இது மத்திய அரசு கூறும் பலி எண்ணிககையை விட 8 மடங்கு அதிகம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை கட்டுரை வெளியிட்டுள்ளதோடு, இந்த விபரங்களை வெளியிட இந்தியா எதிர்ப்பதாக கூறியுள்ளது. இதற்கு மறுப்பு தெரிவித்த இந்தியா உரிய முறையில் விளக்கமும் அளித்துள்ளது.
2019 இறுதியில் சீனாவில் கொரோனா பரவ துவங்கியது. அங்கிருந்து படிப்படியாக பிற நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஒட்டுமொத்தமாக முடக்கி போட்டது.
இந்தியாவில் 3 அலைகளாக கொரோனா கோரத்தாண்டவம் ஆடியது. இதில் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். கொத்து கொத்தாக மக்கள் பலியாகினர்.

உலக சுகாதார அமைப்பு கணக்கீடு
கொரோனா பாதிப்பு, பலி குறித்து ஒவ்வொரு நாடுகளும் தகவல்கள் வெளியிட்டுள்ளன. இருப்பினும் சில நாடுகளில் உண்மை மறைக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இதற்கிடையே தான் ஒட்டுமொத்த உலகிலும் கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கிட உலக சுகாதார அமைப்பு முடிவு செய்தது. அதன்படி கொரோனா தொற்றோடு இறந்தவர்களின் இறப்பு விகிதம் மற்றும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் இறப்பு விகிதம் என 2 முறைகளின் அடிப்படையில் ஒவ்வொரு நாட்டிலும் ஏற்பட்ட பலி கணக்கிடப்பட்டு வருகிறது.

நியூயார்க் டைம்ஸ் கட்டுரை
இந்நிலையில் தான் அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் ஏப்ரல் 16ல் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டது. அதற்கு உலகில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையை உண்மையாக கண்டறியும் உலக சுகாதார அமைப்பின் முயற்சியை இந்தியா தடுப்பதாக தலைப்பிடப்பட்டு இருந்தது.

இந்திய பலி 8 மடங்கு அதிகரிப்பு
அதில், ‛‛உலக சுகாதார அமைப்பின் கணக்கீட்டின்படி 2021ம் ஆண்டின் முடிவில் உலகம் முழுவதும் கொரோனாவால் ஒரு கோடியே 50 லட்சம் பேர் இறந்திருக்கலாம். இது அதிகாரப்பூர்வமாக காட்டப்பட்டுள்ள இறப்பு எண்ணிக்கையை விட 2 மடங்கு அதிகமாகும். இந்தியாவில் கொரோனாவால் 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியானதாக கூறினாலும் அங்கு 40 லட்சம் வரை மக்கள் இறந்திருக்கலாம். இது இந்தியா கணக்கில் காட்டியதை ஒப்பிடும்போது 8 மடங்கு அதிகமாக இருக்கும். இதை வெளியிட இந்தியா ஆட்சேபனை தெரிவித்துள்ளது'' என்பன போன்ற விபரங்கள் அந்த கட்டுரையில் இடம்பெற்றிருந்தன.

இந்தியா விளக்கம்
இதற்கு இந்திய சுகாதார அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் அதுதொடர்பான விளக்கத்தையும் அளித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாது: ‛‛இந்த விவகாரத்தில் உலக சுகாதார அமைப்புடன், இந்திய சுகாதார அமைச்சகம் தொடர்ந்து தகவல்களை பரிமாறி வருகிறது. இந்தியாவின் புவியியல் அமைப்பு முற்றிலும் மாறுபட்டது. மக்கள் தொகையும் அதிகமுள்ள நாடாக இந்தியா உள்ளது. எனவே சிறிய மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஏற்பட்ட இறப்பை கணக்கிட பயன்படுத்தும் முறையை இந்தியாவுக்கு பயன்படுத்துவது பொருத்தமாக இருக்காது.

சரியாக இருக்காது
உலக சுகாதார அமைப்பின் கணக்கீட்டு முறையில் துனிசியா போன்ற மக்கள்தொகை குறைவாக உள்ள நாட்டுக்கு பொருந்தாலாம். ஆனால் 1.3 பில்லியன் (130 கோடி ) மக்கள் தொகை கொண்ட நாட்டுக்கு இது சரியாக இருக்காது. மேலும் இந்த கணக்கீட்டு முறை சரியானதாக இருக்கும் என்பதற்கான நம்பிக்கையையும், தர்க்க ரீதியிலான விளக்கத்தையும் உலக சுகாதார அமைப்பு பகிர்ந்து கொள்ளவில்லை.

துல்லியத்தன்மை கேள்விக்குறி
இந்தியாவுக்கான கணக்கீடு என்பது 18 மாநிலங்களில் உள்ள சரிபார்க்கப்படாத கொரோனா இறப்பு தொடர்பான தரவின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் காலநிலையே பெருமளவு மாறும் நிலையில் 18 மாநில தரவின் அடிப்படையில் இந்தியாவின் இறப்பு விகிதத்தை கணக்கீடுவது என்பது துல்லியத்தன்மையை கேள்விக்குறியாக்குவதுடன், கொரோனாவால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையையும் முரண்பாடாக காட்டலாம். இது தவறானதாக இருக்கும். இதனால் தான் துல்லியமான கணக்கீடு தொடர்பான முறையை பகிர்ந்து கொரோனா பலியை கணக்கீடலாம் என இந்தியா வலியுறுத்தி உள்ளது'' என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications