'2டோஸ் தடுப்பூசி போட்டாலும்.. கொரோனா பாதிப்பு நிச்சயம் ஏற்படும்,ஆனால்..' ஆய்வாளர்களின் புது விளக்கம்
டெல்லி: இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மத்தியில் கொரோனா பாதிப்பு அதிகரித்திருந்தாலும்கூட, இது கவலையளிக்கும் வகையில் இல்லை என்றே பிரிட்டன் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் ஒவ்வொரு நாட்டிலும் அலை அலையாகத் தாக்கி வருகிறது, ஐரோப்பிய நாடுகளில் ஆல்பா கொரோனாவால் இரண்டாம் அலை ஏற்பட்டது என்றால், இப்போது டெல்டா கொரோனாவால் 3ஆம் அலை ஏற்படத் தொடங்கியுள்ளது.
தற்போதைய சூழலில் தடுப்பூசிகள் மட்டுமே கொரோனா வேக்சினுக்கு எதிராக ஒரே ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது. அனைத்து நாடுகளும் தடுப்பூசி பணிகளை வேகப்படுத்தியுள்ளது.

வேக்சின் எடுத்துக் கொண்டாலும் கொரோனா
இருப்பினும், கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ் போட்டுக் கொண்டவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படுவது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தடுப்பூசி போட்டாலும் வைரஸ் பாதிப்பு ஏற்படும் என்றால் ஏன் வேக்சின் போட வேண்டும் என்றும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். குறிப்பாகப் பிரிட்டன் நாட்டில் தற்போது கொரோனாவால் மருத்துவமனைகளில் அட்மிட் ஆகியுள்ளவர்களில் சுமார் 40% பேர் ஏற்கனவே வேக்சின் எடுத்துக் கொண்டவர்கள் ஆகும்.

ஆபத்து இல்லை
இது பார்ப்பதற்கு அதிகம் போலத் தோன்றினாலும் உண்மையில் இது ஆபத்தானது இல்லை எனப் பிரிட்டன் நாட்டின் தலைமை அறிவியல் ஆலோசகர் சர் பேட்ரிக் வலன்ஸ் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு அதிகரிக்க பல்வேறு காரணங்கள் உள்ளன என்றும் தடுப்பூசி அதிகம் செலுத்தப்படுவதன் மூலம் உயிரிழப்புகள் கணிசமாகக் குறைவதாகவும் அவர் தெரிவித்தார்.

தடுப்பூசிகள்
கொரோனா என்றில்லை எந்தவொரு நோய் பரவலுக்கும் உருவாக்கப்படும் தடுப்பூசியும் 100% பலன் அளிக்காது. இருப்பினும், தடுப்பூசிகளால் ஆண்டுதோறும் பல லட்சம் மக்களின் உயிர் காக்கப்படுகிறது. கொரோனா தடுப்பூசிகளும் இப்போது அதையே தான் செய்து வருகின்றன. இப்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள போதும் முந்தைய அலைகளுடன் ஒப்பிடும்போது வேக்சின் பணிகளால் வைரஸ் பாதிப்பு எந்தளவு குறைந்துள்ளது என்பது தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும்.

குறைந்துள்ளன
கடந்த டிசம்பர் மாதம் பிரிட்டன் நாட்டில் ஆல்பா கொரோனாவால் 2ஆம் அலை ஏற்பட்ட சமயத்தில் தினசரி 3800 பேர் மருத்துவமனைகளில் அட்மிட் ஆகினர். ஆனால், இப்போது டெல்டா கொரோனா வேகமாகப் பரவினாலும்கூட தினசரி 700 பேர் வரை மட்டுமே மருத்துவமனைகளில் அட்மிட் ஆகின்றனர். உயிரிழப்புகளும் கணிசமாகக் குறைந்துள்ளன. வேக்சின் பணிகளால் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றம் இது.

என்ன காரணங்கள்
அதேபோல அனைத்து நாடுகளிலும் முதலில் ஆபத்தான கட்டத்தில் இருக்கும் நபர்களுக்கே முதலில் வேக்சின் அளிக்கப்பட்டது. அதாவது, கொரோனாவால் எளிதில் உயிரிழக்கலாம் என்றிருந்த முதியவர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கே முதலில் வேக்சின் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இவர்களில் குறிப்பிட்ட பிரிவினருக்குத் தடுப்பூசி எடுத்துக் கொண்ட பிறகும், தீவிரமில்லாத கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும்கூட உயிரிழக்கும் ஆபத்தைத் தடுப்பூசிகள் பெரியளவில் குறைக்கின்றன.

டெல்டா கொரோனா
உலக நாடுகளில் வேகமாகப் பரவி வரும் டெல்டா கொரோனா எதிராக தடுப்பூசிகளின் செயல்திறன் சற்றே குறைகிறது. என்றாலும்கூட, டெல்டா கொரோனாவால் ஏற்படும் symptomatic கொரோனா பாதிப்புகளை 79% வரையிலும் மருத்துவமனைகளில் அட்மிட் ஆவதை 96% வரையிலும் வேக்சின்கள் கட்டுப்படுத்துகின்றன. சுருங்கச் சொல்ல வேண்டும் என்றால் வேக்சின் போட்டுக் கொள்ளவில்லை என்றால் கொரோனா பாதிப்புகளும் உயிரிழப்புகளும் இதைவிடப் பல மடங்கு அதிகமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications