டெல்லியில் தொடர் போராட்டம்-உச்சநீதிமன்ற வழக்கில் தங்களது வாதங்களையும் கேட்க கோருகிறது விவசாய சங்கம்!
டெல்லி: மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 16-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே விவசாய சட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் தங்களது வாதங்களையும் கேட்க கோரி விவசாய சங்கங்கள் மனுத் தாக்கல் செய்துள்ளன.
மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களால் வாழ்வாதாரம் நாசமாகும் என்பதால் விவசாயிகள் 16 நாட்களாக டெல்லியில் கொட்டும் பனியிலும் கடும் குளிரிலும் இடைவிடாமல் போராடி வருகின்றனர். இதனையடுத்து மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து தோல்வியை ஏற்படுத்தின.
ஒருகட்டத்தில் விவசாய சட்டங்களில் திருத்தம் கொண்டுவரலாம் என மத்திய அரசு கருதியது. இது தொடர்பான வரைவு அறிக்கையை விவசாய சங்கங்களுக்கும் மத்திய அரசு அனுப்பியது. ஆனால் இதனை விவசாய சங்கப் பிரதிநிதிகள் நிராகரித்துவிட்டனர். தங்களைப் பொறுத்தவரை விவசாய சட்டங்களை முழுமையாக வாபஸ் பெற வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருக்கிறோம் என்றனர்.
ஆனால் மத்திய அரசோ, ஒருபோதும் விவசாய சட்டங்களை திரும்பப் பெற முடியாது என திட்டவட்டமாக கூறியது. இதனையடுத்து ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையை முடக்குவது, நாடு தழுவிய போராட்டம் என அடுத்த கட்டங்களை நோக்கி விவசாயிகள் போராட்டம் நகர்ந்து கொண்டிருக்கிறது.
மேலும் திமுக எம்.பி. திருச்சி சிவா உட்பட 6 பேர் விவசாய சட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கடந்த அக்டோபர் 12-ந் தேதி மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இவ்வழக்கின் விசாரணை டிசம்பர் இறுதியில் நடைபெற உள்ளது.
இந்த வழக்கில் தங்களது வாதங்களையும் கேட்க அனுமதி கோரி போராடும் விவசாய சங்கங்களின் ஒன்றான பிகேயூ மனுத் தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.