தலைநகரில் தரமான திட்டம்.. டெல்லி அரசு தொடங்கும் இ ஸ்கூட்டர் சேவை! இனி நோ டென்சன் - இத்தனை வசதிகளா?
டெல்லியில் உள்ள இ ஸ்கூட்டர் சேவையை தொடங்க இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்து இருக்கிறார்.
டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள 250 இடங்களில் இ ஸ்கூட்டர் சேவையை தொடங்க இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்து இருக்கிறார். இதற்காக 1500 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அடுத்த ஆண்டில் 250 இடங்களில் வைக்க டெல்லி மாநில அரசு முடிவு செய்து இருக்கிறது.
டெல்லியில் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் புகை மாசும் பெருகி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அம்மாநில ஆம் ஆத்மி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக ஆட், ஈவன் எண் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது,
இந்த திட்டம் ஓரளவு கைகொடுத்தாலும் மக்கள் இதை முறையாக கடைபிடிக்கவில்லை. அதிகளவிலான வாகன பயன்பாட்டை தவிர்க்க பொதுபோக்குவரத்தை பயன்படுத்த அம்மாநில அரசு மக்களை வலியுறுத்தி வருகிறது.

இ ஸ்கூட்டர் சேவை
இந்த நிலையில் அடுத்த ஆண்டிற்குள் டெல்லியில் உள்ள 250 இடங்களில் 1,500 எலெக்ரிக் ஸ்கூட்டர்களை கொண்டு இ ஸ்கூட்டர் சேவையை தொடங்க இருப்பதாக டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்து உள்ளார். இந்த வாகனங்களை நிறுத்துவதற்காக துவாரகாவில் பார்க்கிங் தளங்களை அமைக்க அம்மாநில அரசு முடிவு செய்து இருக்கிறது.

சார்ஜிங் மையங்கள்
பேருந்து நிலையங்கள் மற்றும் சுரங்க நடைபாதைகளுக்கு அருகே இ ஸ்கூட்டர்கள் நிறுத்தப்படும் எனவும், 100 சதுர கிலோ மீட்டருக்கு உட்பட்ட பகுதியில் பரிமாரிப்பு மற்றும் பைக்குகளுக்கு சார்ஜ் செய்யும் 10 மையங்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு தேவையான இடங்கள் தேர்வு செய்யப்படும் என அம்மாநில அரசு கூறி இருக்கிறது.

பயன்படுத்துவது எப்படி?
பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் செல்ல பயன்படுத்தும் இண்டெக்ரேட்டட் கார்டுகளை பயன்படுத்தி இந்த இ ஸ்கூட்டர்களை பயன்படுத்தலாம். ஒரு இடத்தில் எடுக்கும் இ ஸ்கூட்டரை தான் சென்று சேர வேண்டிய இடத்திற்கு அருகே உள்ள இ ஸ்கூட்டர் நிறுத்தும் இடத்தில் விட்டுவிடலாம். இந்த இ ஸ்கூட்டரில் கியூ ஆர் கோடு, புளூடூத், ஹெல்மெட் ஆகியவை இருக்கும்.

வேகம், எடை
அதேபோல் மாற்றப்படக்கூடிய பேட்டரிகளும் அதில் இடம்பெற்று இருக்கும். அதிபட்சம் 60 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த இ ஸ்கூட்டரில் பயணிக்க முடியும். இந்த இ ஸ்கூட்டர்கள் 150 கிலோ எடையை சுமந்து செல்லும். ஜிபிஆர்எஸ் வசதியுடன் கூடிய ஜிபிஎஸ் இருப்பதால் இதை எளிதில் திருடிச்செல்ல முடியாது. அப்படி சென்றாலும் அது இருக்கும் இடத்தை கண்டுபிடித்துவிடலாம்.

விரும்பி இடத்துக்கு செல்லலாம்
டியூப் இல்லாத டயர்கள், ஹைட்ராலிக் சஸ்பென்சன், பேட்டரி மேனேஜ்மெண்ட் வசதி, பிஎல்டிசி மோட்டார் கொண்ட இந்த வாகனம் முழுமையாக சார்ஜ் ஆக 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும். இதன் மூலம் டெல்லிக்கு செல்லும் மக்கள் பேருந்துகள், ரயில்களுக்கு காத்திருக்காமல் தாங்கள் விரும்பிய பகுதிக்கு பைக்கில் சென்று வரலாம்.

சைக்கிள் சேவை
சென்னையில் இதுபோல் சைக்கிள் சேவை செயல்பாட்டில் இருந்து வருகிறது. பலரும் இதனை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் டெல்லியில் இதே பாணியில் இ ஸ்கூட்டர் சேவை அமல்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்து இருப்பது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இருக்கிறது. ஆனால், இதற்கான நிதி, கட்டண விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications