பயம் தான் மக்களை கட்டுப்படுத்தும்... ஊரடங்கால் கொரோனாவை வென்ற டெல்லி!
டெல்லி: முழு ஊரடங்கு கொரோனா பரவலை குறைக்க நிச்சயமாக உதவும் என்பதற்கு நல்ல உதாரணமாக இருக்கிறது டெல்லி. டெல்லியில் கடந்த மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது 25000 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இப்போது 2500ஆக குறைந்துள்ளது. வீட்டிற்குள்ளேயே இருந்து மக்கள் கொடுத்து ஒத்துழைப்பு தான் டெல்லி கொரோனாவை வெல்ல காரணமாகி உள்ளது,
அரசுக்கு மக்கள் ஒத்துழைப்பு தந்தால் கொரோனாவை சாத்தியம் என்பதற்கு டெல்லி நல்ல உதாரணம். சுடுகாட்டில் எரிந்த பிணங்களை பார்த்தும், மருத்துவமனையில் இடம் கிடைக்காது என்ற நிலையை பார்த்தும் பயந்து போன போன மக்கள், அடைத்த கதவை திறக்கவில்லை. தேவையின்றி வெளியில் சுற்றவில்லை.
4380 வாகனங்கள் ரெடி.. தினமும் வீடுகளுக்கே வரும் காய்கறி, பழங்கள்.. தமிழக அரசு ஏற்பாடு.. முழு விபரம்
டெல்லி எப்படி கொரோனாவை வெற்றிகரமாக மீண்டு வந்துள்ளது. அதற்கு என்ன காரணம், அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? டெல்லியை பார்த்து நாம் கற்க வேண்டிய பாடம் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழக நிலவரம்
கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியா முழுவதும் கடந்த மார்ச் இறுதியில் இருந்து வேகமாக பரவ தொடங்கியது. தமிழகத்திலும் அப்போது தான் பரவ தொடங்கியது. தமிழகத்தில் மொத்த ஊர்களிலும் சேர்த்து 8 ஆயிரம் 10 ஆயிரம் என்கிற நிலை இருந்த சமயத்தில், சென்னை போன்ற பரப்பளவு உள்ள நகரமான டெல்லியில் 25 ஆயிரம் என்கிற அளவுக்கு பாதிப்பு ஏற்பட தொடங்கியது. உயிரிழப்பும் 500 என்கிற அளவிற்கு தினசரி இருந்தது.
சண்டை போட்ட கெஜ்ரிவால்
சுடுகாட்டில் பிணங்கள் மொத்தம் மொத்தமாக எரிக்கப்பட்டது. இது ஒரு புறம் எனில் மருத்துவமனையில் ஆக்சிஜன் கிடைக்காமல் பலர் இறந்தார்கள். டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆக்சிஜன் கேட்டு மத்திய அரசிடம் தினமும் சண்டை போட்டுக்கொண்டிருந்தார். டெல்லி உயர்நீதிமன்றமும் மத்திய அரசை ஆக்சிஜன் தர சொல்லி கடுமையான உத்தரவுகளை பிறப்பித்து கொண்டிருந்தது. மக்களோ ஆக்சிஜன் கிடைக்காமல், படுக்கைகள் கிடைக்காமல் அவதிப்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
பேருந்து, மெட்ரோ நிறுத்தம்
இப்படியான சூழல் உருவாக தொடங்கும் முன்பே அதாவது கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பே டெல்லியில் கடும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் இயக்கம், ஆட்டோ, டாக்ஸி இயக்கம் முற்றிலும் நிறுத்தப்பட்டது மருத்துவ சேவை, விமான நிலையங்களுக்கு செல்வதற்கு மட்டும் சில டாக்ஸி சேவைகள் இயக்கப்பட்டன.
வீடுகளில் முடக்கம்
இன்னொரு பக்கம் மருத்துவமனைகளில் இடம் இல்லை என்பதை உணர்ந்த மக்கள், பயந்து போய் வீடுகளில் முடங்கி கொண்டனர். காற்றிலும் கொரோனா பரவும் என்பதை அறிந்த மக்கள் பால்கனியில் கூட நிற்கவில்லை. அடைத்த கதவு திறக்கவில்லை. அந்த அளவிற்கு மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை.
இலவச ரேஷன்
கொரோனா மெல்ல மெல்ல டெல்லியில் குறைய தொடங்கியது. ஆனாலும் ஊரடங்கை முதல்வர் கெஜ்ரிவால் தொடர்ந்து நீடித்து வந்தார். காய்கறி கடைகள், மளிகை கடைகள், ஓட்டல்கள் கட்டுப்பாடுகளுடன் இயங்க இன்று வரை அனுமதி இருக்கிறது. கொரோனா ஊரங்கால் பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பினருக்கு நிவாரண உதவியும் கெஜ்ரிவால் அறிவித்தார். ரேஷனில் இலவசமாக உணவுப்பொருட்களும் அளித்தார். மறுபக்கம் தேவையான ஆக்சிஜனை போராடி பெற்றார்.. படிப்படியாக மக்கள் குணமாகினர். உயிரிழப்பும் குறைந்தது
ஊரடங்கு நீடிப்பு
பயம் காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியதால் கொரோனா பரவல் வேகமாக குறைந்தது. இப்போது தினசரி 2500 என்கிற அளவில் குறைந்துள்ளது. ஆனாலும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீடித்துள்ளார். இந்த வார ஊரடங்கற்குப் பிறகு நிலைமை தொடர்ந்து கட்டுக்குள் இருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
போக்குவரத்து போலீஸ்
மக்கள் அளித்த ஒத்துழைப்பு காரணமாகவே கொரோனா பரவல் இங்கு குறைந்துள்ளது. நம்ம ஊரைப் போல் போலீசார் அடித்து பயமுறுத்தி எல்லாம் டெல்லியில் மக்களிடம் கொரோனா ஊரடங்கை கட்டுப்படுத்தவில்லை. டெல்லியில் போக்குவரத்து போலீசார் கெடுபிடியாக நடந்து கொள்வார்கள். எப்படி என்றால் எல்லா பக்கமும் டெல்லியில் கேமரா இருக்கிறது. அத்துடன போலீசாரும் யாரிடமும் சண்டை போடுவதில்லை. விதிகளை மீறி வாகனங்களில் வெளியே வந்தால், யாராக இருந்தாலும் கட்டாயம் அபராதம். அவர்களுக்கு சலான் போடுவார்கள். கொரோனா காரணமாக இல்லை, பொதுவாகவே. போக்குவரத்து போலீசார் டெல்லியில் விதிகளை கடுமையாக கடைபிடிப்பார்கள். இதன் காரணமாக வெளியில் போனாலே அபராதம் அல்லது வாகனம் பறிமுதல் என்ற பயமும் மக்களுக்கு இருந்தது. இதனால் யாரும் வெளியில் தேவையின்றி வரவில்லை. இதனால் தான் கொரோனாவை டெல்லி இன்று வென்றுள்ளது.
ஒத்துழைப்பு வேண்டும்
தமிழகத்திலும் போலீசார் அடித்து பயமுறுத்தாமல், அபராதம் விதிப்பது, வாகனத்தை பறிமுதல் செய்வதை கடுமையாக நடைமுறைப்படுத்தினாலே மக்கள் வெளியில் செல்ல மாட்டார்கள் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. இதேபோல் மக்களும் சூழ்நிலையை உணர்ந்து வெளியில் செல்லாமல் தவிர்த்து அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் நிச்சயம் கொரோனாவை வெல்ல முடியும். ஆனால் துரதிஷ்டவமாக இன்று கூட்டம் கூட்டமாக மக்கள் சென்று பொருட்க்ளை வாங்குவது எங்கே போய் முடியும் என்பது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.