டெல்லி - துபாய் விமானம் அவசர அவசரமாக கராச்சியில் தரையிறக்கம்.. பதறிப்போன பயணிகள் - என்ன நடந்தது?
கராச்சி : தலைநகர் டெல்லியில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் பாகிஸ்தானின் கராச்சி நகரத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லியில் இருந்து துபாய் சென்ற ஸ்பைஸ்ஜெட் எஸ்ஜி-11 விமானம் தொழில்நுட்பக் கோளாறால் பாகிஸ்தானின் கராச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் திடீரென தரை இறக்கப்பட்ட நிலையில், விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் சாதாரணமாகத்தான் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் கோளாறு ஏற்பட்டதாக எந்த புகாரும் இல்லை. ஸ்பைஸ்ஜெட் விமானம், இன்டிகேட்டர் லைட் செயலிழந்ததால், கராச்சிக்கு திருப்பி விடப்பட்டது என ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், கராச்சியில் விமானம் தரையிறக்கப்பட்டதும், பயணிகளுக்கு குளிர்பானம் வழங்கப்பட்டது. பயணிகளை துபாய்க்கு அழைத்துச் செல்லும் மாற்று விமானம் கராச்சிக்கு அனுப்பப்படுள்ளது என ஸ்பைஸ்ஜெட் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமையன்று டெல்லியில் இருந்து ஜபல்பூருக்குச் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் திடீரென்று புகை கிளம்பியதால் விமானம் அவசர அவசரமாக மீண்டும் டெல்லிக்கே திரும்பியது குறிப்பிடத்தக்கது. விமானம் 5000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் திடீரென புகை கிளம்பியதால் உடனடியாக டெல்லியில் தரையிறக்கப்பட்டது.