'மேஜிக் புல்லட் எதுவும் இல்லை..' 2 டோஸ் வேக்சின் போட்டவர்களையும்.. விடாமல் தாக்கும் டெல்டா கொரோனா
டெல்லி: உலக நாடுகள் ஊரடங்கில் கட்டுப்பாடுகளை அறிவிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தடுப்பூசியின் 2 டோஸ்களை எடுத்துக் கொண்டவர்களைக்கூட டெல்டா கொரோனா தாக்குவது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
கடந்த 1.5 ஆண்டுகளாகவே உலக நாடுகளைத் திணற வைத்துக் கொண்டிருப்பது கொரோனா வைரஸ் தான். வேறு எந்த தொற்றுக்கும் இல்லாத வகையில் வெறும் சில மாதங்களில் கொரோனா வேக்சின் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து வேக்சின் பணிகளை உலக நாடுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. அப்படி மக்கள் தொகையில் கணிசமான நபர்களுக்கு வேக்சின் போட்ட நாடுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்து வருகின்றன.
4வது அலை.. கதற விடும் கொரோனா.. அதிபருக்கு எதிராக கொந்தளித்த மக்கள்.. பிரான்சில் வெடித்தது கலவரம்..!
கொரோனா வேக்சின்
இருப்பினும், கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை எடுத்துக் கொண்டவர்களுக்கும் டெல்டா கொரோனா பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் டெல்டா கொரோனாவால் ஏற்படும் தீவிர பாதிப்பு, உயிரிழப்புகள் ஆகியவற்றைத் தடுப்பூசிகள் தடுக்கின்றன. வேக்சின் போட்டவர்கள் மத்தியிலேயே வைரஸ் பாதிப்பு பரவும் விகிதம் வேகமாக உள்ளது என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வேகமாகப் பரவுகிறது
டெல்டா கொரோனா வைரஸ் இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்டது. இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை ஏற்பட டெல்டா கொரோனா ஒரு முக்கிய காரணமாகும். டெல்டா கொரோனா மோசமான பாதிப்புகளை அதிகம் ஏற்படுத்துவதில்லை என்றாலும்கூட இதுவரை கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ்களில் டெல்டா கொரோனா தான் வேகமாகப் பரவக்கூடியது.
கொரோனா வழிகாட்டுதல்கள்
மேலும், மற்ற உருமாறிய கொரோனா வகைகளைக் காட்டிலும் டெல்டா கொரோனா, தடுப்பூசி போட்டவர்களை அதிகம் பாதிக்கிறது. டெல்டா கொரோனா பரவல் விகிதம் குறித்துக் கூடுதல் தகவல்கள் கிடைக்கும் வரை வேக்சின் போட்டவர்களும், பொது இடங்களில் மாஸ்க் அணிவது தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
உலக நாடுகள்
குறிப்பாக பிரிட்டன் நாட்டில் வெள்ளிக்கிழமை 3692 பேர் டெல்டா கொரோனாவால் மருத்துவமனைகளில் அனுமதியாகியுள்ளனர். அவர்களில் 58.3% பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள், 22% இரண்டு டோஸ் வேக்சினை போட்டுக் கொண்டவர்கள். அதேபோல சிங்கப்பூர் நாட்டிலும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் மூன்றில் இரண்டு பேர் வேக்சின் போட்டவர்கள் ஆகும்.
டெல்டா பாதிப்பு
சீனாவில் டெல்டா கொரோனா பற்றி ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில் சீனாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைக் காட்டிலும் டெல்டா கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் நாசி பகுதியில் 1000 மடங்கு வைரஸை அதிகம் சுமந்து செல்வது தெரிய வந்துள்ளது. அதேபோல பிரிட்டன் நாட்டில் முதலில் கண்டறியப்பட்ட ஆல்பா கொரோனா வகையை விட டெல்டா கொரோனா சுமார் 50% வரை வேகமாகப் பரவுவதாகப் பிரிட்டன் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்
Recommended Video
மேஜிக் புல்லட் இல்லை
இது குறித்து இஸ்ரேலிய பல்கலைக்கழக பொதுச் சுகாதார இயக்குநர் நாடவ் டேவிடோவிட்ச் கூறுகையில், "அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும் ஒரு மேஜிக் புல்லட் வேண்டும் என்ற மனநிலை நமக்கு இருந்தது. ஆனால் அந்த எண்ணத்தை கொரோனா பாதிப்பு உடைத்து வருகிறது. அதேநேரம் வேக்சின் போட்டவர்களுக்குத் தீவிர கொரோனா பாதிப்பு ஏற்படுவதில்லை. அதேபோல கொரோனா பரவல் விகிதமும் குறைவாக உள்ளது. கொரோனா பரவலைக் குறைக்கத் தடுப்பூசி மிகவும் முக்கியம் என்பதையே இது உணர்த்துகிறது" என்றார்.
இரண்டு டோஸ் வேக்சின்
அதாவது ஒருவர் கொரோனா வேக்சின் போட்ட பிறகும், அவர் டெல்டா கொரோனாவால் பாதிக்கப்படும் ஆபத்து அதிகமாகவே உள்ளது. ஆனால், இதனால் அவருக்குத் தீவிர பாதிப்போ அல்லது உயிரிழப்புகளை ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு. அதேபோல வேக்சின் எடுத்துக் கொண்டவர்கள் மூலம் கொரோனா பரவல் விகிதம் குறைவாகவே உள்ளது. எனவே முடிந்தவரை அனைவரும் இரண்டு டோஸ் வேக்சின்களை செலுத்திக் கொள்ள வேண்டும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.