பாதகமான உத்தரவு பிறப்பித்தால் நீதிபதிகளை அவமதிக்கிறார்கள்; சிபிஐ எங்களுக்கு உதவவில்லை- தலைமை நீதிபதி
டெல்லி: எதிர்மறையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் நீதித்துறையை சமூக வலைத்தளங்களில் அவமதிக்கும் "புதிய போக்கு" உருவாகியுள்ளது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கவலை தெரிவித்துள்ளார்.
சிபிஐ, உளவுத்துறை மற்றும் பிற விசாரணை அமைப்புகள் நீதித்துறைக்கு உதவுவதில்லை என்றும் தலைமை நீதிபதி என்வி ரமணா தெரிவித்துள்ளார்.
நீதிபதிகள் பல முறை மனதளவில் நெருக்கடிக்கு உட்படுத்தப்படுவதாகவும், மாஃபியாக்கள் அல்லது பிரபல நபர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் அச்சுறுத்தப்படுவதாகவும், ஆனால் சிபிஐ அல்லது காவல்துறையிடம் புகார்கள் அளித்தாலும் எந்த பலனும் கிடைப்பதில்லை என்றும் தலைமை நீதிபதி கூறியுள்ளார்.

நீதிபதிகள் உடல்ரீதியாக தாக்கப்படுவது மட்டுமல்லாமல், வாட்ஸ்அப்பில் மிரட்டல் செய்திகளை அனுப்புவதன் மூலமும், சமூக ஊடக பதிவுகள் போன்றவற்றின் மூலமும் மனதளவில் தாக்கப்படுகிறார்கள். சில சம்பவங்களில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது என்றும் தலைமை நீதிபதி ரமணா தெரிவித்தார்.
உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவிட்ட சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு கடந்த ஆண்டு ஆந்திர உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இவ்வாறு தலைமை நீதிபதி குறிப்பிட்டார.
ஒன்று அல்லது இரண்டு விஷயங்களில், நீதிமன்றங்கள் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டன. ஆனால் இதை தடுத்து நிறுத்த சிபிஐ எதுவும் செய்யவில்லை. இதை சொல்ல வருத்தமாக உள்ளது. சிபிஐ அணுகுமுறையில் சில மாற்றங்களை நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் எந்த மாற்றமும் இல்லை. எதிர்மறையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் நீதிபதிகளை அவமதிக்கும் "புதிய டிரெண்ட்" ஏற்பட்டு இருக்கிறது.
நமது நாட்டில் இது ஒரு புதிய போக்கு. பாதகமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், நீதித்துறை அவமதிக்கப்படுகிறது. இதுபற்றி நீதிபதிகள் புகார் செய்தாலும் நடவடிக்கை இல்லை. சிபிஐ, உளவுத்துறை போன்றவை இதை தடுத்து நிறுத்துவதில் நீதித்துறைக்கு உதவவில்லை என்று தலைமை நீதிபதி மேலும் கூறினார்.
ஜார்கண்ட் மாநிலத்தின் தன்பாத் செஷன்ஸ் கோர்ட் நீதிபதியாக இருந்தவர் உத்தம் ஆனந்த். கடந்த வாரம் புதன்கிழமை காலை 5 மணியளவில் வீட்டிலிருந்து சுமார் அரை கி.மீ தூரத்தில் ஜாகிங் செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு டெம்போ சாலையில் டர்ன் எடுத்து வந்து நீதிபதி மீது மோதியது. இந்த காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
நீதிபதி ரத்த வெள்ளத்தில் சாலையில் விழுந்து கிடந்தார். பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
நீதிபதி யார் என்பது பல மணிநேரங்கள் அடையாளம் தெரியாமல் இருந்துள்ளது. ஆனால், அவரது குடும்பத்தினர் நீதிபதியை காணவில்லை என போலீசில் புகாரை அளித்த பிறகுதான் போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது நீதிபதி உத்தம் ஆனந்த் என்பதை அறிந்து கொண்டனர்.
தன்பாத்தில் நடந்த மாஃபியா கொலைகள் தொடர்பான பல வழக்குகளை நீதிபதி விசாரித்து வந்தார். சமீபத்தில் இரண்டு மாஃபியா ரவுடிகளின் ஜாமீன் மனுவை நிராகரித்தார்.
இந்த கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே, தலைமை நீதிபதி என்வி ராமண்ணா தலைமையிலான பெஞ்ச் தானாக முன் வந்து வழக்குப் பதிவு செய்து இந்த வழக்கை விசாரிக்க ஆரம்பித்துள்ளது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோதுதான் தலைமை நீதிபதி தனது அதிருப்தியை இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் விசாரணையை கையில் எடுத்துள்ள சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார் தலைமை நீதிபதி.
முன்னதாக, இந்த வழக்கின் ஸ்டேடஸ் அறிக்கையை தாக்கல் செய்த ஜார்கண்ட் அரசு, விசாரணையை சிபிஐ -யிடம் ஒப்படைத்ததாகக் கூறியுள்ளது. "சிபிஐ குழு இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கை எடுத்துக்கொண்டது. மாநில காவல்துறையால் சேகரிக்கப்பட்ட அறிக்கைகளின் நகலை அவர்களிடம் சமர்ப்பித்துள்ளோம். ஆதாரங்களும் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிபிஐ தடயவியல் குழுவுடன் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்த உள்ளது. ஆட்டோ ரிக்ஷா உரிமையாளரின் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது." என்று தெரிவித்தது.












Click it and Unblock the Notifications