அடுத்த சில மணி நேரங்களில் திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீடு அறிவிப்பு.. திருநாவுக்கரசர் அதிரடி பேட்டி
டெல்லி: திமுக மற்றும் காங்கிரஸ் நடுவேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவடைந்து விட்டதாகவும், எப்போதுவேண்டுமானாலும் அறிவிப்பு வெளியாகும் என்றும் காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
டெல்லியில் இன்று ராகுல்காந்தி தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன், திருநாவுக்கரசர், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் பேசிய திருநாவுக்கரசர் கூறியதாவது: பாஜகவுடன் அதிமுக அமைக்கும் கூட்டணி மூழ்கும் கப்பல் போன்றது. பாமக அதிமுக நடுவே ஏற்பட்டுள்ளது ஒரு கட்டாயத் திருமணம். திமுகவும், காங்கிரசும் அத்தை மகள், மாமன் மகன் போன்ற நீண்ட கால நட்பில் இருக்கக்கூடிய ஒரு உறவு. எனவே இந்த கூட்டணியை இறுதி செய்வதில் எங்களுக்கு எந்த அவசரமும் கிடையாது. எனவேதான் அவர்களைப் போல நாங்கள் அவசரப்பட்டு எதையும் அறிவிக்கவில்லை.
புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி தான் வெற்றி பெறும். காங்கிரஸ் மற்றும் திமுக இரு கட்சிகளும் ஏற்கனவே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நிறைவு செய்து விட்டோம்.
இன்றோ, நாளையோ அல்லது அடுத்த சில மணித்துளிகளில் கூட தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பு வெளியாகலாம். எங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் கிடையாது. சுமூகமாக எல்லாம் சென்று கொண்டு உள்ளது. வெகு வெகு சீக்கிரமாக இறுதி முடிவை நாங்கள் அறிப்போம். இவ்வாறு திருநாவுக்கரசர் தெரிவித்தார்.