தேவையில்லை.. 3 டோஸ் கொரோனா தடுப்பூசி போதும்.. நிபுணர்கள் சொல்வது இதுதான்
சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவுக்கு 4வது டோஸ் அவசியமா? என்பது குறித்து ஆய்வாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிராக இந்தியாவில் மூன்று தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வயதானவர்கள் மூன்று டோஸ்களையும் செலுத்திக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ள நிலையில் நான்காவது டோஸ் தேவையா? என்கிற கேள்வி பரவலாக எழுந்திருக்கிறது. இதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் இயக்குநர் டாக்டர் ராமன் கங்காகேத்கர் விரிவாக பதிலளித்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் தொடங்கிய கொரோனா தொற்று பாதிப்பானது 2020-2021ம் ஆண்டுகளில் உலகம் முழுவதும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. தற்போதுவரை சுமார் 70 கோடி பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல 67 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மட்டுமல்லாது இந்த வைரஸ் ஏற்படுத்திய பொருளாதார பாதிப்பிலிருந்து மீண்டு வர உலக நாடுகள் பல இப்போதும் போராடிக்கொண்டு இருக்கின்றன.
இந்த பாதிப்புக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகள் உயிரிழப்பு எண்ணிக்கையை வெகுவாக குறைத்திருக்கிறது. இருப்பினும் மரபணு மாறிய கொரோனா வைரஸ்கள் அவ்வப்போது புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. உதாரணமாக முதல் கோவிட் தொற்றுக்கு கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி ஒமிக்ரான் கொரோனா வைரஸை எதிர்த்து போரிடுவதில் சற்று பின்தங்கியது. இருப்பினும் இந்த தடுப்பூசிகளால் உயிரிழப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
அடப்பாவமே.. ஒன்னா, ரெண்டா.. தேங்கிப்போன 50 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள்.. காலாவதியாகப் போகுதாம்!
புதிய பாதிப்பு
இந்நிலையில், சீனா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் ஒமிக்ரான் கொரோனா வைரஸின் மாறுபாடான பி.எஃப்-7 தற்போது வேகமாக பரவி வருகிறது. சீனாவில் மட்டும் இந்த வைரஸ் பாதிப்பால் வெறும் 6 நாட்களில் சுமார் 13 ஆயிரம் பேர் வரை பலியாகியுள்ளனர். இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. சீனாவில் ஏறத்தாழ 90.9% பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை எடுத்துக்கொண்டுள்ளனர். இருப்பினும் இந்த உயிரிழப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதால் நான்காவது டோஸ் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டுமா? என்று மக்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
ஊக்குவிப்பு
இதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) முன்னாள் இயக்குனர் டாக்டர் ராமன் கங்காகேத்கர் விரிவாக பதிலளித்துள்ளார். நேற்று(ஜன.25) புனே இன்டர்நேஷனல் சென்டர் சார்பில் 'Braving a Viral Storm: India's COVID-19 Vaccine Story' எனும் புத்தகத்தின் மீதான விவாதம் ஒன்று நடத்தப்பட்டது. இந்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று கலந்துரையாடிய ராமன் கங்காகேத்கர், "நாம் தற்போது வரை கொரோனா தொற்றுக்கு எதிராக மூன்று தடுப்பூசிகளை பெற்றிருக்கிறோம். அப்படியெனில் தொற்றுக்கு எதிராக நம்முடைய டி-செல்லை (T-cell) மூன்று முறை ஊக்கப்படுத்தியுள்ளோம் என்று அர்த்தம்.
கவலை வேண்டாம்
தற்போது உள்ள கொரோனா வைரஸ், நான்காவது தடுப்பூசி செலுத்தும் அளவுக்கு ஒன்றும் தீவிரமடையவில்லை. எனவே நான்காவது தடுப்பூசிக்கு இன்னும் நேரம் இருக்கிறது. எனவே வயதானவர்கள் இணை நோய் உள்ளவர்கள் தடுப்பூசிகளை முறையாக செலுத்திக்கொள்ள வேண்டும். தற்போது உள்ள SARS-COV2 குடும்பத்திலிருந்து மாறுபட்ட வைரஸ் பாதிப்பு வந்தால் மட்டுமே நாம் நான்காவது தடுப்பூசி குறித்து யோசிக்க வேண்டும். இது குறித்து ஆய்வாளர்கள் மரபணு மாற்றத்தை கண்காணித்து வருகின்றனர். எனவே தற்போதைக்கு கவலைப்பட தேவையில்லை" என்று கூறியுள்ளார்.
ஆய்வு
இந்தியாவை பொறுத்த அளவில் இரண்டு டோஸ்களை சுமார் 69.9% மக்கள் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அதேபோல 4.4 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். 5.3 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களை விட எடுத்துக்கொள்ளாதவர்கள் உயிரிழப்பதற்கான அபாயம் அதிகம் இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.