நாம தோற்கல.. எதிரணி ஜெயிச்சிட்டாங்க.. ‛‛மீம்’’ போட்டு நிர்மலா சீதாராமனை கலாய்த்து தள்ளிய சு.சாமி
டெல்லி: இந்திய ரூபாயின் மதிப்பு சரிவதாக பார்க்கவில்லை. அமெரிக்க டாலரின் மதிப்பு தான் உயர்ந்து வருகிறது என நிர்மலா சீதாராமன் கூறிய நிலையில் அவரது போட்டோவுடன் கூடிய மீம்ஸை பகிர்ந்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கிண்டல் செய்துள்ளார்.
இந்தியாவின் பொருளாதார நிலைமை நாள்தோறும் மோசமான நிலைக்கு சென்று வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
இதற்கு மத்தியில் தான் தற்போது அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்து வருகிறது.

அமெரிக்காவில் நிர்மலா சீதாராமன்
அதன்படி ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு என்பது ரூ.82.42 என்ற அளவில் உள்ளது. இந்த வீழ்ச்சிக்கு உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கை, கச்சா எண்ணெய் விலை உயர்வு, கொரோனா கால இடர்பாடுகள், பங்கு சந்தையில் அந்நிய முதலீடுகளை வெளியேற்றியது உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பை வலுப்படுத்த ரிசர்வ் வங்கி முயற்சி மேற்கொண்டு வந்தாலும் கூட அது இன்னும் பலன் அளிக்கவில்லை. இந்நிலையில் தான் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் மாநாடு அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். பின்னர் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

நிர்மலா சீதாராமன் விளக்கம்
இந்த வேளையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நிர்மலா சீதாராமன், ‛‛இந்திய ரூபாயின் மதிப்பு சரிவதாக நான் பார்க்கவில்லை. அமெரிக்க டாலரின் மதிப்பு தான் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பிற நாட்டு பணத்தை ஒப்பிடும்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வலுவாக உள்ளது. வளர்ந்து வரும் சந்தை நாடுகளின் பணத்துடன் ஒப்பிடும்போது இந்திய ரூபாய் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்திய பொருளாதாரத்தின் அடித்தளம், அந்நிய செலாவணி கையிருப்பும் சிறப்பாக உள்ளதால் பணவீக்கம் நிர்வகிக்கும் அளவிலேய இருக்கிறது'' என்று விளக்கம் அளித்தார்.

எதிர்க்கட்சிகள் - நெட்டிசன்கள் கருத்து
இந்நிலையில் தான் நிர்மலா சீதாராமனின் இந்த கருத்து தற்போது விவாதத்துக்கு உள்ளாகி உள்ளது. அதாவது இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைவதை சரிசெய்வதை விட்டு விட்டு அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்கிறது என ஒரு நிதி அமைச்சர் கூறலாமா?. மேலும் தற்போதைய சூழலில் அமெரிக்கா டாலரின் மதிப்பு உயர்ந்தாலும், இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ந்தாலும் பாதிப்பு என்னவோ இந்தியாவுக்கு தான். இதனை சரிசெய்ய நடவடிக்கை வேண்டும். மாறாக நிதி அமைச்சரிடம் இருந்து இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்கவில்லை என எதிர்க்கட்சியினர் மற்றும் நெட்டிசன்கள் இணையதளதங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

மீம்ஸ் போட்ட சுப்பிரமணியன் சுவாமி
இந்த வரிசையில் தான் தற்போது பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி இணைந்துள்ளார். இவரும் தன் பங்கிற்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கலாய்த்து தள்ளியுள்ளார். இதுதொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் நிர்மலா சீதாராமனின் போட்டோவுடன் உள்ள மீம்ஸை பகிர்ந்துள்ளார். அதில், ‛‛நாம் தோற்கவில்லை.. எதிரணி ஜெயித்துவிட்டது'' என எழுதப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி இந்த பதிவில், ‛‛வாழ்த்துகள்.. ஜேஎன்யூ எப்போதும் தோற்பது இல்லை'' எனக்கூறி அவர் படித்த பல்கலைக்கழகத்தை குறிப்பிட்டு சுப்பிரமணியசாமி கிண்டல் செய்துள்ளார்.

முதல் முறையல்ல
சுப்பிரமணிய சாமி, நிதி அமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமனை கலாய்ப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் கலாய்த்துள்ளார். கடந்த ஆகஸ்ட்டில் நிர்மலா சீதாராமன், ‛‛உலகிலேயே அதிவேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா உள்ளது. கொரோனா, ரஷ்யா- உக்ரைன் போர் உள்ளிட்ட சூழலிலும் 7 சதவீதத்திற்குள் பணவீக்கத்தை அரசு கட்டுப்படுத்தியுள்ளது. பொருளாதார மந்த நிலையோ, தேக்க நிலையோ ஏற்படும் என்ற கேள்விக்கே இடமில்லை'' என கூறியிருந்தார். அப்போது குறுக்கே புகுந்த சுப்பிரமணியன் சுவாமி, ‛‛இந்திய பொருளாதாரம் மந்த நிலையில் சிக்கிக்கொள்ளும் என்ற கேள்விக்கே இடமில்லை'' என்று மத்திய நிதியமைச்சர் கூறியதாக இன்று ஊடக செய்திகள் கூறுகின்றன. அவர் சொல்வது சரிதான். ஏனென்றால் கடந்த ஆண்டே இந்திய பொருளாதாரம் மந்த நிலையை சந்தித்துவிட்டது. எனவே தற்போது இந்திய பொருளாதாரம் மந்தநிலையை நோக்கி செல்வது குறித்த கேள்வி எழவே இல்லலை '' என விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications