எளிதாக வாழ்க்கை நடத்துவதை போல.. இந்தியாவில் ஈஸியாக நீதி கிடைப்பது முக்கியம்- பிரதமர் மோடி பேச்சு
டெல்லி: ‛‛இந்தியாவில் எளிதாக வாழ்வது, எளிதாக தொழில் துவங்குவது எவ்வளவு முக்கியமோ அதேபோல் எளிதாக நீதி கிடைப்பதும் முக்கியமாகும்'' என பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
டெல்லியில் அனைத்திந்திய மாவட்ட சட்ட சேவைகள் வழங்குநர்களின் முதல் கூட்டத்தின் துவக்க நாள் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா, நீதிபதிகள் யுயு லலித், டிஒய் சந்திரசூட், சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டார். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

நீதி தான் முக்கியம்
அனைத்து சமூக மக்களுக்கு நீதி என்பது முக்கியமானது. இதனால் அனைவருக்கும் நீதி வழங்குவது முக்கிய பொறுப்பாக உள்ளது. சிறைகளில் பல விசாரணை கைதிகள் சட்ட உதவிக்காக காத்திருக்கின்றனர். விசாரணை கைதிகளுக்கு சட்ட உதவி வழங்கும் பொறுப்பை மாவட்ட சட்ட சேவைகள் அதிகாரிகள் ஏற்க முன்வர வேண்டும். மேலும் நீதித்துறையின் உள்கட்டமைப்பு மிகவும் முக்கியமானதாக உள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் நாட்டின் நீதித்துறை உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான பணிகள் வேகமாக செய்யப்பட்டுள்ளன.

மக்களுக்கு எளிதாக நீதி கிடைக்கனும்
இ- நீதிமன்ற திட்டத்தின் கீழ் இந்தியாவில் மெய்நிகர் நீதிமன்றங்கள் தொடங்கப்படுகின்றன. மேலும், போக்குவரத்து விதிமீறல் போன்ற குற்றங்களுக்காக 24 மணி நேர நீதிமன்றங்கள் செயல்பட தொடங்கியுள்ளன. நீதிமன்றங்களில் வீடியோ கான்பரன்சிங் வசதி இருக்கும் வகையில் உள்கட்டமைப்பு விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மக்களுக்கு நீதி கிடைப்பது எளிதாக இருக்க வேண்டும். இந்தியாவில் நீதி என்பது எவ்வளவு எளிதானதாக இருக்க வேண்டும் என்றால் வாழ்வதுபோல், ஒரு தொழில் செய்வதுபோல் எளிதாக இருத்தல் அவசியம். ஏனென்றால் இந்தியாவில் எளிதாக வாழ்வது, எளிதாக தொழில் துவங்குவது எவ்வளவு முக்கியமோ அதேபோல் எளிதாக நீதி கிடைப்பதும் முக்கியமாகும்'' என பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.' என்றார்.

தலைமை நீதிபதி பேச்சு
முன்னதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா பேசினார். அப்போது அவர் "நமது தேசத்தின் பலமே நம் நாட்டின் இளைஞர்கள் தான். உலகில் வாழும் இளைஞர்களில் ஐந்தில் ஒருவர் இந்தியாவில் தான் வசிக்கிறார். இருப்பினும் நம் இளைஞர்கள் மத்தியில் திறன்வாய்ந்த பணியாளர்களின் பலம் குறைவாக உள்ளது. வெறும் 3 சதவீத இளைஞர்களே திறன்மிகு பணியாளர்களாக தேர்ந்து உள்ளனர். நாட்டில் திறன்சார் பயிற்சிகளை ஊக்குவித்து இந்த இடைவெளியை நாம் சீர் செய்ய வேண்டும்.

விழிப்புணர்வு வேண்டும்
சட்ட உதவிகள் இருப்பது கூட தெரியாமல் நிறைய இளைஞர்கள் தவிக்கின்றனர். சட்ட விதிகள் குறித்து நிறைய பேருக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. இதனால் சட்ட விழிப்புணர்வுக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இத்தகைய சூழலிலும் கூட இன்று நாம் மக்களின் வாசலுக்கே சென்று நீதியை கொண்டு சேர்க்கிறோம் என்றால் அதற்கு உற்சாகம் மிக்க வழக்கறிஞர்கள், தேர்ந்த நீதிபதிகளுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்'' என்றார்.












Click it and Unblock the Notifications