70 தொகுதிகள்.. 3 முக்கிய கட்சிகள்.. தலைநகர் யாருக்கு? டெல்லி சட்டசபைக்கு நாளை தேர்தல்!
டெல்லி: டெல்லி சட்டசபைக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. 70 தொகுதிகளுக்கும் காலை 7 மணிக்கு வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கிறது.
டெல்லியில், ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். 5 ஆண்டுகள் ஆட்சி நிறைவடையும் நிலையில், மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி 8ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஜனவரி 14ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.
இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் இடையே, போட்டி நிலவி வருகிறது. மூன்று கட்சிகளின் முக்கிய தலைவர்களும் தீவிர பரப்புரை செய்து வந்தனர்.
இந்த நிலையில்தான், நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. ஆட்சி யாருக்கு என்பதை, 1.46 கோடி வாக்காளர்கள் தீர்மானிக்க உள்ளனர். வாக்கு எண்ணிக்கை வரும் 11ம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறும்.
தேர்தல் ஆணையம் மற்றும் பிற அமைப்புகள் வாக்கெடுப்பை சீராக நடத்துவதை உறுதி செய்ய விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளன. 70 சட்டமன்ற இடங்களுக்கு மொத்தம், 672 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். புது டெல்லி சட்டசபை தொகுதியில் இருந்து அதிகபட்சம் 28 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர், குறைந்தது நான்கு பேர் படேல் நகர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து போட்டியிடுகின்றனர்.
வாக்காளர்கள் வாக்களிக்க 13,750 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கெடுப்பை சீராக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று தேர்தல் அதிகாரி டாக்டர் ரன்பீர் சிங் தெரிவித்தார். வாக்காளர்களின் வசதிக்காக தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் ஆணையம் செய்துள்ளதுடன், வாக்காளர்கள் தங்கள் உரிமையைப் பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தல்: ஆம் ஆத்மிக்கு புகழாரம் சூட்டிய சிவசேனா- கடுப்பில் காங்கிரஸ்
தேர்தல் நேர்மையாகவும், அச்சமின்றியும் நடத்தப்படுவதை உறுதி செய்வதற்காக டெல்லி காவல்துறை விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. வாக்குப்பதிவு வளாகங்களின் பாதுகாப்பிற்காக சுமார் 40,000 போலீசார் மற்றும் மத்திய ஆயுத போலீஸ் படைகளின் பல பிரிவுகள் நிறுத்தப்பட்டுள்ளன. டெல்லி காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், முக்கியமான ஓட்டுச் சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களின் பாதுகாப்பை அதிகரிக்க கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
நிலையான கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் பறக்கும் படைகளும் நிறுத்தப்பட்டுள்ளன, இவ்வாறு அவர் கூறினார். டெல்லி மெட்ரோ ரயிலின் சேவைகள் நாளை அதிகாலை 4 மணி முதல், இயக்கப்பட தொடங்கும்.