பிஃஎப்ஐ தடை.. முஸ்லிம் இளைஞர்களை கைது செய்ய வாய்ப்பு இருக்கு.. அசாதுதீன் ஒவைசி ட்வீட்
டெல்லி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீதான தடை தன்னிச்சையானது என்றும், இனி அந்த அமைப்பின் பெயரை சொல்லி பல முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் அகில இந்திய மஜ்லிஜ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.
கடந்த 22 ஆம் தேதி நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் (பிஎஃப்ஐ) அலுவலகங்களில் சோதனை செய்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முக்கிய நிர்வாகிகள் பலரை கைது செய்தனர்.
இதனை கண்டித்து அந்த அமைப்பினர் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதில் சில இடங்களில் வன்முறைகளும் வெடித்தன.

அதிரடி சோதனை - கைது
இந்நிலையில், பிஎஃப்ஐ நிர்வாகிகளின் வீடுகளில் நேற்று மீண்டும் காவல்துறை சோதனை நடத்தியது. உத்தரப்பிரதேசம், குஜராத், கர்நாடகா, அசாம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் பி.எஃப்.ஐ. நிர்வாகிகள் வீடுகளில் காவல்துறை சோதனை மேற்கொண்டது. நேற்று நடைபெற்ற சோதனைக்கு பின்னர் நாடு முழுவதும் 250-க்கும் மேற்பட்டோரை காவல்துறை கைது செய்தது.

5 ஆண்டுகள் தடை
இதன் தொடர்ச்சியாக, நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகளை சட்டவிரோதமானவை என அறிவித்த மத்திய உள்துறை அமைச்சகம், அதற்கு 5 ஆண்டுகள் தடை விதித்து இன்று உத்தரவிட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அதே சமயத்தில், பாஜக தலைவர்களும், நிர்வாகிகளும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பிஎஃப்ஐ அமைப்பை எதிர்த்தவன் - ஒவைசி
இந்நிலையில், பிஎஃப்ஐ மீதான தடைக்கு அசாதுதீன் ஒவைசி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: பிஎஃப்ஐ அமைப்பை நான் எப்போதும் ஆதரித்தவன் இல்லை. அதை எதிர்த்துதான் வந்திருக்கிறேன். அந்த அமைப்பின் அணுகுமுறையில் எனக்கு உடன்பாடு கிடையாது. நான் என்றுமே ஜனநாயக அணுகுமுறைக்குதான் ஆதரவாக இருப்பேன்.

தடையை ஆதரிக்க மாட்டேன்
அதே நேரத்தில் பிஎஃப்ஐ அமைப்பு மீது சர்வாதிகாரப் போக்கில் மத்திய அரசு விதித்துள்ள இந்த தடையை ஏற்க முடியாது. இந்த நடவடிக்கையை நான் ஆதரிக்க மாட்டேன். பிஎஃப்ஐ மீதான தடையானது, சுதந்திரமாக கருத்து தெரிவிக்கும் ஒவ்வொரு முஸ்லிம் மீதும் விதிக்கப்பட்ட தடையை போன்றது. உண்மையில் இது ஒரு ஃபாசிச அணுகுமுறை. இனி பிஎஃப்ஐ முத்திரையின் கீழ் முஸ்லிம் இளைஞர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications