அயோத்தி வழக்கில் எப்படி தீர்ப்பு வந்தாலும் ஏற்போம்.. இஸ்லாமிய அமைப்பு தலைவர் அர்ஷத் மதானி உறுதி
Recommended Video
டெல்லி: பாபர் மசூதி-ராமர் கோயில் விவகார வழக்கில் வரவிருக்கும் தீர்ப்பு கடவுள் பற்று மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் அல்லாமல் உண்மைகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும் என ஜாமியத் உலாமா-ஐ-ஹிந்த் தலைவர் அர்ஷத் மதானி புதன்கிழமை தெரிவித்தார்.
அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுமாறு நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்த அர்ஷத் மதானி, தீர்ப்பு எங்களுக்கு எதிர்மறையாக இருந்தாலும் தங்கள் அமைப்பு மதிக்கும் என்று தெரிவித்தார்.
அயோத்தில் உள்ள 2.77 ஏக்கர் சர்ச்சைக்குரிய இடம் பாபர் மசூதி அல்லது ராமர் கோயிலுக்கு சொந்தமா என்பது குறித்த மேல்முறையீடு வழக்கு பல ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கை கடந்த சில மாதங்களுக்கு விரைந்து விசாரிக்கப்போவதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
தீர்ப்பு ஒத்திவைப்பு
இதன்படி 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விடுமுறை நாட்கள் தவிர மற்ற நாட்களில் அதாவது 40 நாட்கள் விசாரணை நடத்தியது. இரு தரப்பும் வாதங்களை முன்வைத்தது. இறுதி வாதங்கள் முடிந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பு எப்போது
நவம்பர் 17ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வு பெற உள்ளதால் அதற்குள் தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான் நாட்டின் முஸ்லிம்களின் மிகப்பெரிய அமைப்பான ஜாமியத் உலாமா-ஐ-ஹிந்த் தலைவர் அர்ஷத் மதானி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், நீதியை நேசிக்கும் ஒவ்வொரு நீதிபதியும் இந்த வழக்கில் கடவுள் பற்று மற்றும் நம்பிக்கை அடிப்படையில் அல்லாமல் உண்மைகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பை அளிக்க வேண்டும் என்றார்.
ஆதாரம் கொடுத்துள்ளோம்
"நீதிமன்றத்தில் விவாதம் முடிந்துவிட்டது, இப்போது நாங்கள் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். எங்கள் வழக்கறிஞர் ராஜீவ் தவான் உண்மைகளின் அடிப்படையில் மிகவும் வலுவான வாதத்தை முன்வைத்துள்ளார், மேலும் இந்த முடிவு எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். நாங்கள் மீண்டும் மீண்டும் கூறியுள்ளோம், நாடு நம்முடையது, சட்டம் நம்முடையது, உச்ச நீதிமன்றம் நம்முடையது. நாங்கள் ஆதாரங்களை வழங்கியுள்ளோம். எந்த தீர்ப்பு வழங்கப்பட்டாலும், நாங்கள் அதை மதிக்கிறோம்" என்றும் ஜாமியத் தலைவர் அர்ஷத் மதானி கூறினார். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பு டெல்லியில் முஸ்லீம் மதகுருக்களுடன் ஒரு சந்திப்பை நடத்திய ஒரு நாள் கழித்து மதானி இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.எந்த சூழ்நிலையிலும் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று மதானி வலியுறுத்தினார்.
முக்கிய கூட்டம்
கடந்த செவ்வாய்கிழமை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பு டெல்லியில் முஸ்லீம் மதகுருக்களுடன் நடத்திய சந்திப்பு குறித்து கூட்டம் குறித்து அன்று பேசிய மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி "இன்று ஒரு வரலாற்று சிறப்புமிக்க உரையாடல் நடைபெற்றது, அதில் முஸ்லீம் அறிஞர்கள் மற்றும் மதகுருமார்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், எல்லா சூழ்நிலையிலும் நாட்டில் ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் வலுப்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது" என்றார்