விவசாயிகள் தற்கொலை.. என் உடலை போராட்ட கள எல்லையிலேயே புதைத்து விடுங்கள்.. கடிதத்தில் உருக்கம்
டெல்லி: டெல்லி- காஸியாப்பூர் எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களது போராட்டம் 38 நாளை எட்டிய நிலையில் இதுவரை 6 கட்டங்களாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லையில் போராடி வருகிறார்கள். பேச்சுவார்த்தையில் சுமூக முடிவும் எட்டப்படவில்லை. 3 வேளாண் சட்டங்களும் திரும்ப பெறப்படவில்லை என்பதால் விரக்தியில் இதுவரை 6 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள்.
போராட்டக் களம்
இந்த நிலையில் நேற்றைய தினம் டெல்லி- காஸியாபூர் எல்லையில் போராட்டக் களத்தில் இருந்த விவசாயி காஷ்மீர் சிங். இவர் சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரை சேர்ந்தவர். இவர் போராட்ட களத்தில் உள்ள நடமாடும் கழிவறைக்குச் சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வரவில்லை.
நீண்ட நேரம்
கழிப்பறை கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாததை அடுத்து விவசாயிகள் பதற்றமடைந்தனர். பின்னர் போலீஸார் வரவழைத்து கதவு உடைக்கப்பட்டது. அப்போது நைலான் கயிற்றில் விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்திருந்தது தெரியவந்தது.
தற்கொலை கடிதம்
இதையடுத்து அவரது உடல் இறக்கப்பட்டது. அப்போது அவரது பாக்கெட்டில் தற்கொலை கடிதம் இருந்தது. அதில் எனது இறப்பு வீணாக செல்லக் கூடாது. எனது உடலை டெல்லி- உத்தரப்பிரதேச எல்லையில்தான் புதைக்க வேண்டும் என உருக்கமான கடிதத்தை எழுதியுள்ளார்.
சோகமயம்
வேளாண் சட்டங்களை நீக்கக் கோரி விவசாயிகள் சார்பில் நாளை மறுநாள் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இதில் சுமூக முடிவுகள் எட்டப்படுமா என விவசாயிகள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளார்கள். விவசாயிகள் தற்கொலையால் அந்த பகுதியே சோக மயமாக காட்சியளிக்கிறது.