உச்சக்கட்ட போராட்டம்.. ஆயிரக்கணக்கில் டெல்லியில் குவியும் விவசாயிகள்.. இன்று உண்ணாவிரதம்..!
ஜெய்ப்பூர் டெல்லி சாலையில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளனர்
டெல்லி: புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 18-வது நாளை கடந்து தீவிரமாகி வருகிறது.. இதனால், டெல்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் தெரிவித்திருந்த நிலையில், அங்கு உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது... ஆனால், அவர்களின் வாக்குறுதிகளை ஏற்க விவசாய சங்கங்கள் தயாராக இல்லாததால், பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது... எனினும், தங்கள் போராட்டத்தை விரிவுபடுத்தவும் விவசாய சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.
அந்தவகையில், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தப் போவதாகவும், டெல்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் மறியலில் இன்று ஈடுபடப் போவதாகவும் தெரிவித்திருந்தனர்.
விவசாயிகள்
ஏற்கனவே சிங்கு, திக்ரி, காஜிப்பூர் என டெல்லியின் எல்லை பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளால் தலைநகர் திணறி வருகிறது.. இதில் ஜெய்ப்பூர் - டெல்லி தேசிய நெடுஞ்சாலை எண் 8-ஐ ஆக்கிரமிக்க போவதாக விவசாயிகள் அறிவித்தது.. ஹரியானாவின் குர்கான் வழியாக ஜெய்ப்பூரை அடையும் இந்த சாலை, ராஜஸ்தானில் இருந்து டெல்லியை அடையும் முக்கியமான சாலைகளில் ஒன்றாகும்.
ஆக்கிரமிப்பு
விவசாயிகள் அந்த நெடுஞ்சாலையை ஆக்கிரமித்துவிட்டால் அவர்களை அங்கிருந்து அகற்றுவது சிரமமான காரியம் என்றும், சிங்கு எல்லையைப்போல அந்த இடமும் மற்றொரு போராட்டக் களமாக மாறிவிடும் என்றும் உளவு அமைப்புகள் எச்சரித்திருந்தன. எனவே, டெல்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலை எல்லையில் நேற்று 500-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். கான்கிரீட் தடுப்புகளை கொண்டு சாலைகள் மூடப்பட்டன.
கான்கிரீட் கட்டை
இதனால், விவசாயிகளின் முயற்சி தோல்வியில் முடிந்தது.. அதனால், 2வது முயற்சியாக இன்று நெடுஞ்சாலை முற்றுகையை விவசாயிகள் கையிலெடுத்துள்ளனர். இதையடுத்து ஜெய்ப்பூர்-டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் அரியானா எல்லையில் விவசாயிகள் முன்னேறுவதை தடுக்க கூடுதல் கான்கிரீட் கட்டைகளும் அடுக்கப்பட்டு உள்ளன.
உண்ணாவிரதம்
எனினும், சாலையில் போக்குவரத்தும் பாதிக்கப்படாமல் இருக்கிறது என்பதையும் போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர்.. இதைதவிர அதேபோல, ரயில் போக்குவரத்தையும் முடக்க திட்டமிட்டுள்ள விவசாய சங்க தலைவர்கள், காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் இருக்கவும் முடிவு செய்துள்ளனர். மேலும் அனைத்து மாவட்ட முக்கிய நகரங்களிலும் நாடு தழுவிய போராட்டங்கள் நடத்தப்பட இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டுகிறது.