டெல்லியில் தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம் - பிப்ரவரி 2 வரை இணையதள சேவை துண்டிப்பு
டெல்லியில் சிங்கு, காசிபூர் மற்றும் டிக்ரி எல்லைப் பகுதிகளில் பிப்ரவரி 2 ஆம் தேதி காலை11 மணி வரை இணைய சேவை முடக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
டெல்லி: டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் சிங்கு, காசிபூர் மற்றும் டிக்ரி ஆகிய டெல்லியின் எல்லைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 2 ஆம் தேதி காலை 11 மணி வரை இணைய சேவை முடக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேச விவசாயிகள் டெல்லி எல்லைகளில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாயிகளின் போராட்டம் 70வது நாளை எட்டப்போகிறது.
மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் 11 தடவை பேச்சுவார்த்தை நடைபெற்றும் எந்த முடிவும் எட்டப்படாததால் விவசாயிகள் போராட்டம் நீடித்தப்படி உள்ளது.
விவசாயிகள் கடந்த 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணியை நடத்தினார்கள். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட காவலர்கள் காயமடைந்தனர். வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
இதுதொடர்பாக டெல்லி காவல்துறையினர் வழக்குகள் பதிவு செய்து விவசாய சங்க தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறார்கள். இது விவசாயிகளை மேலும் ஆத்திரமடைய செய்துள்ளது. இதனால் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
விவசாயிகளை எல்லையில் இருந்து காலி செய்யுமாறு போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள். ஆனால் ஒரு அங்குலம் கூட நகர மாட்டோம் என்று பாரதிய கிஷான் யூனியனின் செய்தி தொடர்பாளர் ராகேஷ் திகைட் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அதோடு விவசாயிகள் மேலும் திரண்டு வருமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனையேற்று பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேச மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை நோக்கி புறப்பட்டு உள்ளனர். பல லட்சம் பேர் திரண்டு வருவதால் காசிப்பூர் எல்லைப் பகுதிகளில் போராட்டம் நடத்தும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. எல்லை பகுதிகளில் தண்ணீர், மின்சார வினியோகம் போன்ற அடிப்படை வசதிகள் தடை செய்யப்பட்ட நிலையிலும் அசராமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மகாத்மா காந்தியின் நினைவு தினத்தன்று விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வன்னியர் இடஒதுக்கீடு- சத்திரியர்களின் குணத்தை வெளிப்படுத்தும் வகையில் போராட்டம்.. ராமதாஸ் எச்சரிக்கை
இதனையடுத்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் சிங்கு, காசிப்பூர் மற்றும் டிக்ரி பகுதிகளில் 31ஆம் தேதி இரவு 11 மணி வரை இணையதள சேவைகளை முடக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. அந்த உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
https://twitter.com/ANI/status/1356143842819362823
விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் டெல்லி புறநகரில் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலையே காணப்படுகிறது. இந்த நிலையில், டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் சிங்கு, காசிபூர் மற்றும் டிக்ரி ஆகிய டெல்லியின் எல்லைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 2 ஆம் தேதி காலை 11 மணி வரை இணைய சேவை முடக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. எத்தனை தடைகள் விதித்தாலும் வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே டெல்லி - ஹரியானாவை இணைக்கும் சிங்கு பகுதியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளின் போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையிலும் ட்ராக்டர்கள் மூலம் டெல்லிக்குள் செல்வதை தடுக்கும் வகையிலும் அங்குள்ள முக்கிய சாலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் 5 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. மேலும் சாலையில் பல இடங்களில் கான்கிரீட் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
சிங்கு எல்லையில் பேசிய விவசாயிகள் காவல்துறையினர் தடுப்புகளை அகற்றி சாலையில் செல்ல அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டனர். சாலைகளை மூடுவதன் மூலம் உள்ளூர் மக்களைத் துன்புறுத்துவதை நிறுத்துங்கள். எங்களுக்கு உள்ளூர் மக்களின் முழு ஆதரவும் உள்ளது. நீங்கள் தடுப்புகளை அகற்றவில்லை என்றால், உள்ளூர்வாசிகள் கிளர்ச்சி செய்யத் தொடங்குவார்கள். நாங்கள் இங்கிருந்து செல்லமாட்டோம். காவல்துறையினர் தான் சாலைகளை மூடியுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.