டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா! ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு!
டெல்லி: இந்தியா வருகை தந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா டெல்லியில் பிரதமர் மோடியை இன்று சந்தித்தார். முன்னதாக ஜனாதிபதி மாளிகையில் சம்பிரதாய முறைப்படி ஷேக் ஹசீனாவுக்கு முப்படை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
4 நாட்கள் பயணமாக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா நேற்று டெல்லி வருகை தந்தார்.வங்கதேச அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், வர்த்தக பிரநிதிகள் குழுவும் இந்தியா வருகை தந்துள்ளது. டெல்லியில் மத்திய ரயில்வே மற்றும் ஜவுளித்துறை இணையமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை நேற்று வரவேற்றார்.
கச்சத்தீவை மீட்கக் கோரி மனு.. நிலுவை வழக்குடன் சேர்த்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு
ஜெய்சங்கருடன் சந்திப்பு
இதனைத் தொடர்ந்து டெல்லியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை ஷேக் ஹசீனா சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது மியான்மர் ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் விவகாரம், எல்லை தாண்டிய ஊடுருவல் சம்பவங்கள் உள்ளிட்டவை குறித்து இருவரும் விவாதித்தனர்.
பிரதமர் மோடி வரவேற்பு
இதனைத் தொடர்ந்து டெல்லி ஜனாதிபதி மாளிகையில் ஷேக் ஹசீனாவை பிரதமர் மோடி வரவேற்றார். அப்போது ஷேக் ஹசீனாவுக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் ஷேக் ஹசீனா, இருதரப்பு உறவுகள், வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
இரு தேசமும் நட்பு நாடுகள்
முன்னதாக செய்தியாளர்களிடம் ஷேக் ஹசீனா பேசியதாவது: இந்தியா எங்களது நட்பு நாடு. இந்தியாவுக்கு நான் வருகை தரும் பயணங்கள் மகிழ்ச்சியைத் தரக் கூடியது. வங்கதேசத்தின் விடுதலைக்கான இந்தியாவின் பங்களிப்பை நாங்கள் எப்போதும் நினைவுகூருவோம். இந்தியாவும் வங்கதேசம் நல்லுறவுடன் உள்ளன. இருநாடுகளும் பரஸ்பரம் ஒத்துழைப்பை வழங்கி வருகின்றன. வங்கதேச மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுதல், பொருளாதார மேம்பாடு ஆகியவை குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். இருநாடுகளும் இணைந்து செயல்படுவதன் மூலம் தெற்காசியாவும் மேம்பாடு அடையும் என்பதில் உறுதியாக உள்ளோம். இவ்வாறு ஷேக் ஹசீனா கூறினார்.
6 ஒப்பந்தங்கள்
பின்னர் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஷேக் ஹசீனா மரியாதை செலுத்தினார். ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ஆகியோரையும் ஷேக் ஹசீனா சந்தித்து பேசினார். ஷேக் ஹசீனாவின் இந்த பயணத்தின் போது இருதரப்பு வர்த்தகம், நதிநீர் பங்கீடு உள்ளிட்ட 6 முக்கிய ஒப்பந்தங்கள், இரு நாடுகளிடையே கையெழுத்தாக உள்ளது.