இலவசங்கள் தொடர்பாக மத்திய அரசு அனைத்து கட்சிக் கூட்டத்தை ஏன் கூட்டக் கூடாது? : உச்சநீதிமன்றம்
டெல்லி: அரசியல் கட்சிகள் இலவசங்கள் தொடர்பாக வாக்குறுதிகள் வழங்குவது குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு ஏன் அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டக் கூடாது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அரசியல் கட்சிகளின் இலவசங்கள் தொடர்பான அறிவிப்புகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பாஜகவின் அஸ்வினி உபாத்யாய் பொதுநலன் வழக்கைத் தொடர்ந்தார். இவ்வழக்கில் தொடர்ச்சியாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இவ்வழக்கில் ஆம் ஆத்மி, திமுகவும் தங்களை இணைத்துக் கொண்டுள்ளன.
இலவசங்கள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஹிமா கோலி, சிடி ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நேற்று விசாரித்தது. அப்போது தலைமை நீதிபதி என்.வி.ரமணா, தேர்தல் கால இலவச வாக்குறுதிகள் நாட்டின் பொருளாதாரத்தை அழித்துவிடும். இதைத் தடுக்க வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்த முடிவை எடுக்க வேண்டும். அரசியல் கட்சிகள்தான் இத்தகைய வாக்குறுதிகளை அளித்தும் வருகின்றன.
இலவசங்கள் குறித்த வாக்குறுதிகள் என்பது மிக முக்கியமான பிரச்சனை. இது தொடர்பாக விவாதிக்க வேண்டியதும் அவசியம். இதனைத் தடுப்பது தொடர்பாக மத்திய அரசு ஏன் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டக் கூடாது? என்றார். அப்போது குறுக்கிட்ட மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இலவசங்களை அனைத்து அரசியல் கட்சிகளும்தான் அறிவிக்கின்றன. அப்படி அறிவிப்பதை உரிமையாகவும் கருதுகின்றன என்றார்.
இலவசங்கள் தொடர்பாக வல்லுநர் குழு அமைக்க மத்திய அரசு யோசனை! 3 நீதிபதிகள் பெஞ்சுக்கு மாற்றம்!!
இந்த விசாரணையின் போது மனுதாரர் அஸ்வினி பாத்யாய் தரப்பு வழக்கறிஞர் விகாஸ் சிங் கூறுகையில், இலவசங்கள் தொடர்பாக ஆராய ஒரு குழுவை அமைக்கலாம் எனில் ஓய்வு பெற்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதாவை நியமிக்கலாம் என்றார். ஆனால் அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி என்.வி.ரமணா, பணியில் இருந்து ஓய்வு பெறுபவர் அல்லது ஓய்வு பெற இருப்பவருக்கு இங்கே மரியாதை இல்லை என்றார்.
இலவசத்தை அறிவிச்சு தான் ஆட்சியையே பிடிக்குறாங்க! உச்சநீதிமன்றத்தில் அனல் பறந்த வாத விவாதம்! பின்னணி!
இந்த வழக்கில் தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பாக ஆஜரான பிரசாந்த் பூஷண், இலவசங்களுக்கு எதிராக வாதிட்டார். அப்போது, இலவசங்கள் விவகாரத்தில் 3 விஷயங்களுக்கு தடை விதிக்கலாம். அதாவது அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் வாக்குறுதிகளை வழங்குவதற்கு தடை விதிக்கலாம். தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்னர் தருகிற வாக்குறுதிகளுக்கு தடை விதிக்கலாம். பொதுவான கொள்கைகளுக்கு எதிரான வாக்குறுதிகளுக்கும் தடை விதிக்கலாம் என்றார்.