மின் விசிறி, மொபைல் ரீசார்ஜ்.. எந்தெந்த கடைகளை திறக்கலாம்.. சில தளர்வுகளை அறிவித்தது மத்திய அரசு
டெல்லி: மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு அறிவித்துள்ள நிலையில் அதில் சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் கூடுதலாக தற்போது மின் விசிறி விற்பனை நிலையங்கள், மொபைல் ரீசார்ஜ் கடைகள், புத்தக கடைகள் இயங்கலாம் என்று அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் இந்தியாவில் சமூக பரவலாக மாறுவதை தடுப்பதற்காக மத்திய அரசு நாடு தழுவிய ஊரடங்கை கடந்த மார்ச் 24ம் தேதி நள்ளிரவு முதல் அறிவித்தது. ஏப்ரல் 14ம் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா பரவும் வேகம் அதிகரித்த காரணத்தால் மேலும் 19 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதன்படி வரும் மே 3ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனினும் தற்போது மத்திய அரசு ஊரடங்கு அறிவித்திருந்தாலும் நோய் தொற்றின் தாக்கம் குறைந்த பகுதிகளில் சில தளர்வுகளை அறிவிக்கலாம் என்று ஏற்கனவே அறிவித்தது. இதையடுத்து மாநில அரசுகள் ஊரடங்கு தளர்வு விஷயத்தில் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி முடிவுகளை எடுத்து அறிவித்து வருகின்றன.
இந்நிலையில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக சில தளர்வுகளை மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. இதன்படி கல்வி சம்பந்தமான புத்தகம் விற்கும் கடைகளை திறக்கலாம். இதேபோல் மின் விசிறி விற்கும் கடைகள் திறக்கலாம். மேலும் மூத்த குடிமக்களுக்கு (முதியவர்களுக்கு) உதவி செய்யும் சேவைகளை திறக்கலாம். செல்போன் ரீசார்ஜ் செய்யும் கடைகளை திறக்கலாம், நகர் புறங்களில் உணவுப்பொருட்களை அரைக்கும் மாவு தயாரிக்கும் நிறுவனங்கள் இயங்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும் தேன், பால், பருப்பு தயாரிப்பு மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்கள், விவசாயம் தொடர்பான வேலைகள் போன்றவற்றையும் செய்யலாம் என்று மத்திய அரசு கூறியிருந்தது. எனினும் சமூக இடைவெளியை மக்கள் இந்த இடங்களில் எல்லாம், அரசு அறிவுறுத்திய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிப்பதுடன் சமூக இடைவெளியை உறுதியுடன் கடைபிடிக்க வேண்டியது கட்டாயம் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.