இந்தியாவில் கொரோனாவால் 37 லட்சம் பேர் பலி? பரபரப்பை கிளப்பிய புதிய தகவல்! மத்திய அரசு சொல்வது என்ன
டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக 37 லட்சம் பேர் வரை உயிரிழந்து இருக்கலாம் என்று சமீபத்தில் வெளியான ஆய்வு அறிக்கை குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாகவே உலக நாடுகளை அலறவிட்டுக் கொண்டு இருப்பது கொரோனா வைரஸ் தான். வல்லரசு நாடுகள் முதல் பின்தங்கிய நாடுகள் வரை அனைத்து நாடுகளும் கொரோனா வைரசால் மிக மோசமான பாதிப்பை எதிர்கொண்டு உள்ளன.
இதில் இந்தியாவும் விதிவிலக்கு இல்லை. குறிப்பாக, கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஏற்பட்ட டெல்டா கொரோனா அலை காரணமாக இந்தியா மிக மோசமான பாதிப்பை எதிர்கொண்டது.

உயிரிழப்புகள்
டெல்டா, ஓமிக்ரான் அலைகள் முடிந்து இப்போது தான் இந்தியா மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. மத்திய அரசின் அதிகாரப்பூர்வ தகவலின்படி கடந்த நவ. மாதம் வரை இந்தியாவில் 4.6 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்தியாவில் கொரோனா பாதிப்பும் சரி, உயிரிழப்பும் சரி சரியாக கணக்கிடப்படுவதில்லை என்று குற்றச்சாட்டுப் பரவலாக இருந்து வருகிறது. இருப்பினும், இது போன்ற குற்றச்சாட்டுகளை மத்திய அரசு தொடர்ந்து மறுத்தே வருகிறது.

37 லட்சம் பேர்
இந்தச் சூழலில் கொரோனா உயிரிழப்புகள் குறித்து புதிய ஆய்வு அறிக்கை ஒன்று வெளியானது. பிரஸ் இன்ஃபர்மேஷன் பீரோ வெளியிட்டுள்ள செய்தியின்படி, நவம்பர் 2021 வரை கொரோனா காரணமாக இந்தியாவில் 32 லட்சம் முதல் 37 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளதாகக் கூறப்பட்டு இருந்தது. இது இந்தியாவின் அதிகாரப்பூர்வ கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையான 4.6 லட்சத்தை விடப் பல மடங்கு அதிகம் ஆகும். கொரோனா உயிரிழப்புகள் குறித்த இந்த தகவல்கள் தவறானவை என்றும் உண்மை தகவல்களின் அடிப்படையில் இல்லை என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

மத்திய அரசு
கொரோனா உயிரிழப்புகள் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் அரசின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை விட அதிக பேர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இந்த அறிக்கைகள் முற்றிலும் தவறானவை. இவை ஊகமான தகவல் தானே தவிர, உண்மைகளை அடிப்படையாகக் கொண்டவை அல்ல. இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகளைக் கண்காணிக்கவும் இது தொடர்பாகப் புகாரளிக்கவும் வலுவான ஒரு அமைப்பு உள்ளது வெளிப்படையான முறையில் நாட்டில் கொரோனா உயிரிழப்புகள் கணக்கிடப்படுகிறது

ஏன் தவறானது
சர்வதேச நாடுகள் ஒப்புக்கொள்ளும் வகையில் கொரோனா உயிரிழப்புகளை வகைப்படுத்த இந்திய அரசு ஒரு விரிவான வரையறையைக் கொண்டுள்ளது, இது மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. அதைத் தான் அனைத்து மாநிலங்களும் பின்பற்றுகின்றன. ஊடகங்களில் வெளியான ஆய்வில் கேரள மக்கள்தொகை, இந்திய ரயில்வே ஊழியர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள், கர்நாடக பள்ளி ஆசிரியர்கள் என நான்கு தரப்பின் மக்கள்தொகைகளை மட்டும் கணக்கில் வைத்து உயிரிழப்புகள் கணக்கிடப்பட்டு உள்ளது.

இந்தியாவின் தரவுகள் துல்லியமானவை
இதுபோல சிறிய வரையறுக்கப்பட்ட தரவுகளை எடுத்து ஒட்டுமொத்த நாட்டிற்கான உயிரிழப்புகளை அனுமானங்கள் அடிப்படையில் கணக்கிடுவதை எச்சரிக்கையுடன் செய்ய வேண்டும். எனவே தான் இந்த ஆய்வு முடிவுகள் தவறானவை எனக் கூறுகிறோம். இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுவதால், உயிரிழப்பு தரவுகளை இந்தியா துல்லியமாகக் கணக்கிட்டு வருகிறது. இதை நாட்டின் உச்ச நீதிமன்றமும் கண்காணித்து வருகிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications