வெறுப்பு... வன்முறை... நமது அன்பான நாட்டை பலவீனப்படுத்துகின்றன - ராகுல்காந்தி வேதனை
சகோதரத்துவம், அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் செங்கற்களால் முன்னேற்றத்திற்கான பாதை அமைக்கப்பட்டுள்ளது என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.
டெல்லி: வெறுப்பு, வன்முறை மற்றும் ஒதுக்கிவைத்தல் ஆகியவை நமது அன்புக்குரிய நாட்டை பலவீனப்படுத்துகின்றன என்று ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ராமர் பிறந்தநாளைக் கொண்டாடும் ராம நவமி நாளில் 4 மாநிலங்களில் நடந்த மோதலில் ஒருவர் பலியாகியுள்ளார், பலர் படுகாயமடைந்துள்ளனர். இதனையொட்டி ட்விட்டரில் கருத்து கூறியுள்ளார் ராகுல்காந்தி.
மத்திய பிரதேசத்தில் கார்கோன் பகுதியில் நேற்று ராம நவமியை ஒட்டி ஊர்வலம் நடந்தது. இதில் தலப் சவுக் பகுதியில் தொடங்கிய ஊர்வலம் முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் பகுதியின் வழியாக சென்றபோது அங்குள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
சத்தமாக ஒலிப்பெருக்கிகளை இசைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் மோதல் வெடித்ததாகத் தெரிகிறது. இதனையடுத்து இருதரப்பினரும் மோதிக் கொள்ள காவல்துறையினர் அங்கு விரைந்தனர்.

கல்வீச்சு ஊர்வலம் ரத்து
போலீஸ் வாகனங்களுக்கு தீ வைப்பு, கல் வீச்சு போன்ற சம்பவங்கள் நடந்தன. ஊர்வலம் பாதியிலேயே தடைப்பட்டது. அப்பகுதியில் 4 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. கோயில் ஒன்று சூறையாடப்பட்டது. இதனையடுத்து தலப் சவுக் பகுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

குஜராத் வன்முறை
குஜராத் மாநிலத்தில் ஆனந்த் மாவட்டத்தில் கம்பத், சபர்கந்த் மாவட்டங்களில் ராம நவமி ஊர்வலங்களில் மோதல் வெடித்தது. கல்வீச்சு சம்பவங்கள், தீ வைப்பு சம்பவங்கள் நடந்தன. மோதலில் ஈடுபட்டவர்களை போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசிக் கலைத்தனர். இதில் கம்பத் பகுதியில் 65 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் மீட்கப்பட்டது.

மோதல் போலீஸ் குவிப்பு
மேற்கு வங்கத்தில் ஹவுரா மாவட்டத்தில் சிவ்பூர் பகுதியில் மோதல் ஏற்பட்டதால், போலீஸார் அங்குக் குவிக்கப்பட்டு பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன. ஜார்க்கண்ட் மாநிலம் லோஹர்டகா பகுதியில் ராம நவமி ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர். இவர்களில் 3 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். லோஹர்டக் பகுதி முழுமையும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

ஜேஎன்யு விடுதி வன்முறை
ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக விடுதியில் அசைவ உணவை, அகில பாரத வித்தியார்த்தி பரிஷத் அமைப்பினர் வலுகட்டாயமாக தடை செய்வதாக, இடதுசாரி மாணவ அமைப்புகள் வளாகத்தில் போர்கோடி உயர்த்தினர். அதேபோல இடதுசாரி மாணவ அமைப்பினர் ராம நவமியை முன்னிட்டு பூஜை செய்யும் நிகழ்வை நடத்தவோ அல்லது ஹோமம் வளர்க்கவோ இடையூறு செய்தவாத ஏவிபிவி குற்றஞ்சாட்டியுள்ளனர். இதன்காரணமாக இரு தரப்பினருக்கும் பல்கலை வளாகத்தில் நேற்று மோதல் வலுத்து, வன்முறையாக மாறியது.

அமைதி நல்லிணக்கம்
ராமர் பிறந்தநாளைக் கொண்டாடும் ராம நவமி நாளில் 4 மாநிலங்களில் நடந்த மோதலில் ஒருவர் பலியாகியுள்ளார், பலர் படுகாயமடைந்துள்ளனர். இதனிடையே இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, வெறுப்பு, வன்முறை மற்றும் ஒதுக்கிவைத்தல் ஆகியவை நமது அன்புக்குரிய நாட்டை பலவீனப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். சகோதரத்துவம், அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் செங்கற்களால் முன்னேற்றத்திற்கான பாதை அமைக்கப்பட்டுள்ளது. நீதியான, அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவைப் பாதுகாக்க ஒன்றுபடுவோம் என்றும் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications