ரிஷப் பண்ட் கார் விபத்து: ரியல் காரணமே இதுதான்.. உத்தரகாண்ட் முதல்வர் வெளியிட்ட முக்கிய தகவல்
டெல்லி: கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை கார் விபத்தில் சிக்கினார். விபத்தில் நல்வாய்ப்பாக பெரிய அளவில் காயங்கள் இன்றி ரிஷப் பண்ட் உயிர்தப்பினார். காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரிஷப் பண்ட்டை உத்தரகாண்ட் முதல்வர் சந்தித்து நலம் விசாரித்தார். பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த போதுதான் ரிஷப் பண்ட் கார் விபத்துக்குள்ளானதற்கான காரணம் குறித்து பேசினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவர் ரிஷப் பண்ட். விக்கெட் கீப்பரும் அதிரடி பேட்ஸ்மானுமான ரிஷப் பண்ட் புத்தாண்டு தினத்தை கொண்டாடுவதற்காக டெல்லியில் இருந்து தனது சொந்த மாநிலமான உத்தரகாண்டிற்கு சொகுசு காரில் புறப்பட்டார்.
வெள்ளிக்கிழமை அதிகாலை ரிஷ்ப் பண்ட் கார் விபத்தில் சிக்கியது. சாலையின் நடுவே இருந்த டிவைடரில் கார் மோதியது. மோதிய வேகத்தில் கார் தீ பிடித்து எரிந்தது.
ரிஷப் பண்டிற்கு பிளாஸ்டிக் சர்ஜரி.. புருவத்தில் ஏற்பட்ட வெட்டுக்காயம்.. முக்கிய நிர்வாகி தகவல்!
தக்க நேரத்தில் உதவியதால்..
ரிஷப் பண்ட் தூக்க கலக்கத்தில் இருந்ததால் கார் விபத்துள்ளானதாக முதலில் தகவல் வெளியானது. ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கி காரில் இருந்து வெளிவர முடியாமல் தவித்த போது அந்த வழியாக வந்த அரசுப்பேருந்தின் ஓட்டுநர் சுஷில் ஓடிச்சென்று உதவி செய்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விபத்தில் உருக்குலைந்த கார் தீ பிடித்தது. எனவே தக்க நேரத்தில் உதவிய பேருந்து ஒட்டுநருக்கு பல்வேறு தரப்பிலும் பாரட்டுக்கள் குவிந்து வருகின்றன.
தூக்க கலக்கத்தில் இருந்தாரா?
விபத்தில் காயம் அடைந்த ரிஷப் பண்ட் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது ஒருபுறம் இருக்க விபத்துக்கான காரணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. போலீசாரும் இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். முதலில் ரிஷப் பண்ட் மதுபோதையில் இருந்து இருக்கலாம் என்று சிலர் கூறினர். ஆனால், போலீசார் இதை திட்டவட்டமாக மறுத்ததோடு 200 கி.மீட்டர் தொலைவுக்கு டெல்லியில் இருந்து ரிஷப் பண்ட் தானே காரை ஒட்டி வந்துள்ளார்.
புது தகவலை வெளியிட்ட உத்தரகாண்ட் முதல்வர்
மதுபோதையில் இருந்தால் இவ்வளவு தூரம் எப்படி ஓட்டிச்செல்ல முடியும் என்று கேள்வி எழுப்பியிருந்தனர். ரிஷப் பண்ட் தூக்க கலக்கத்தில் இருந்ததால் கார் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படும் நிலையில், உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இந்த விபத்து தொடர்பாக புது தகவலை வெளியிட்டுள்ளர். ரிஷப் பண்ட் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு சென்று நேரில் சென்ற உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, ரிஷப் பண்ட்டை சந்தித்து நலம் விசாரித்தார்.
உத்தரகாண்ட் முதல்வர் பேட்டி
அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அதன்பிறகு செய்தியாளர்களுக்க்கு பேட்டி அளித்த உத்தரகாண்ட் முதல்வர் கூறும் போது, "சாலையில் திடீரென ஒரு பள்ளம் அல்லது ஏதோ கருப்பாக தென்பட்டது. அதை தவிர்ப்பதற்காக காரை திருப்பிய போது கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பில் மோதியதாக ரிஷப் பண்ட் தன்னிடம் கூறினார்" என்றார். முன்னதாக டெல்லி கிரிக்கெட் சங்க இயக்குனர் ஷ்யாம் சர்மாவும், இதே தகவலை தெரிவித்து இருந்தார்.
உத்தரகாண்ட் முதல்வர் உறுதி
மருத்துவமனையில் ரிஷப் பண்ட் குடும்ப உறுப்பினர்களிடமும் பேசிய உத்தரகாண்ட் முதல்வர், சிகிச்சைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாநில அரசு வழங்கும் என்று உறுதி அளித்தார். குளிர்காலம் என்பதால் வடமாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் சில அடி தூரத்திற்கு மட்டுமே எதிரில் என்ன இருக்கிறது என்பது கண்ணுக்கு புலப்படும். இதனால் வாகன ஓட்டிகளுக்கு 10 அடி தொலைவில் என்ன இருக்கிறது என்பது கூட தெரியாது.
பனிப்பொழிவு தான் விபத்துக்கு காரணமா
இந்த கடுமையான பனிப்பொழிவு கூட விபத்துக்கு ஒரு காரணமாக இருந்து இருக்கலாம் என்று சிலர் சொல்கின்றனர். எனினும் ரிஷப் பண்ட் கார் விபத்துக்குள்ளானதற்கான காரணம் குறித்து தொடர்ந்து மாறுபட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன. போலீசார் விசாரணை முடிவிற்கு பிறகே உண்மையான காரணங்கள் தெரிய வரும்.