கொரோனா வைரஸ் சோதனை.. யாருக்கெல்லாம் கட்டாயம்? கட்டணம் எவ்வளவு?
டெல்லி: கொரோனாவுக்கான சோதனை எப்படி செய்யப்படுகிறது. அதன் நம்பகத்தன்மை என்ன, யாருக்கெல்லாம் சோதனை செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Recommended Video
சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுகானிலிருந்து 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அறியப்படாத சுவாச நோய் பரவுவதை உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. இது தோன்றியதிலிருந்து சீனாவில் மற்ற மாகாணங்களுக்கும் 151 நாடுகளுக்கும் இது வேகமாக பரவியது. நோய் பாதித்தவர் தும்மும் போதும் இருமும் போதும் வரும் சளித் துளிகளாலும் அந்த நோயாளியுடன் நீண்ட தொடர்பு இருந்தாலும் நோய் பரவுகிறது.
தற்போது இந்தியாவில் வேறு மாநிலங்கள், நாடுகளிலிருந்து வரும் மக்களிடம் இருந்து மட்டுமே பரவியது. அத்துடன் நோயாளிகளுடன் தொடர்பின் மூலமும் கோவிட் 19 தொற்றி வந்தது.
சோதனைக்கான நோக்கங்ள் என்னவென்றால் சுகாதாரத்தை மேம்படுத்துவதன் மூலம் கோவிட் 19 நோய் தொற்றை கட்டுப்படுத்தலாம். அனைவருக்கும் கோவிட் 19 டெஸ்டிங் மற்றும் நம்பகமான சோதனைகளை இலவசமாக அளிக்கலாம். பாகுபாடான சோதனையை தவிர்ப்பதற்கும் பயத்தை குறைப்பதற்கும் நாட்டில் உள்ள சோதனைக்கான வசதிகளை அதிகரிக்க வேண்டும்.
கோவிட் 19-க்கான இலவசமாக கிடைக்கும் சோதனையை தேவைப்படும் தனிப்பட்ட நபர்கள் செய்து கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் தங்கு தடையின்றி சோதனை செய்ய வாரந்தோறும் சோதனை கூடங்களை அதிகரிக்கப்படுகிறது. தற்போது முதல் கட்டமாக கொரோனா சோதனைக்கு ஆகும் செலவு இந்திய மதிப்பில் 1500 ஆகும். கூடுதல் சோதனைகளுக்கு ரூ 3000 ஆகும்.
சோதனைக் கூடங்களை விரிவுப்படுத்த மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சிலுக்கு கீழ் வராத சிஎஸ்ஐஆர், டிபிடி, டிஆர்டிஓ, அரசு மருத்துவமனைகள் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. அது மட்டுமல்லாமல் உயர்தரமான தனியார் பரிசோதனை கூடங்களுடனும் மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சில் இணைந்து செயல்படுகிறது.
நடத்தப்படும் சோதனைகள் குறிப்பிட்ட காலகட்டத்தில் அப்டேட் செய்யப்படுகிறது. பரிசோதனை யுத்திகள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா தலைமையிலான உயர் நிலை குழுவினரால் மறுஆய்வு செய்யப்படுகிறது.
யாருக்கெல்லாம் சோதனை செய்ய வேண்டும்?
1. அறிகுறி இல்லாவிட்டாலும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் 14 நாட்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட வேண்டும். அவர்களுக்கு காய்ச்சல், மூச்சுத்திணறல், சளி, இருமல் இருந்தால் மட்டுமே சோதனை நடத்தப்படும். ஒரு வேளை சோதனையில் கொரோனா இருப்பது உறுதியானால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவர்.
2. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் 14 நாட்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட வேண்டும். அவர்களுக்கும் காய்ச்சல், மூச்சுத்திணறல், சளி, இருமல் இருந்தால் மட்டுமே சோதனை நடத்தப்படும். ஒரு வேளை சோதனையில் கொரோனா இருப்பது உறுதியானால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவர்.
3. நுரையீரல் குறைபாடுள்ளவர்கள், கடும் சுவாச நோயாளிகளை பராமரிக்கும் சுகாதாரத் துறை அதிகாரிகள் மேற்கண்ட அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை செய்ய வேண்டும்.
பரிசோதனை கூடத்தில் செய்யப்படும் சோதனைகள் கைத்தேர்ந்த நிபுணர்களால் மட்டுமே செய்யப்பட வேண்டும். தனியார் டெஸ்டிங் பரிசோதனை கூடங்கள் தாங்கள் செய்யும் சோதனை குறித்த அறிக்கைகளை உடனடியாக இந்திய அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும். அது போல் தனியார் பரிசோதனை கூடங்கள் கோவிட் 19 சோதனையை இலவசமாக செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.