ஆக்ஸ்போர்ட் வேக்சினுக்கு அனுமதி.. ஆனால் இந்தியாவில் சீரம் தயாரிக்கும் அதே தடுப்பூசிக்கு அனுமதி இல்லை
டெல்லி: இந்தியாவில் தயாரிக்கப்படும் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியான கோவிஷீல்டுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி அளிக்காததால், இந்தியர்கள் அங்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக விரைவில் தீர்வு காணப்படும் என சீரம் நிறுவனத்தின் ஆதார் பூனவல்லா உறுதி அளித்துள்ளார்.
Recommended Video
இந்தியாவில் தடுப்பூசி பணிகளுக்காக கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் வி ஆகிய வேக்சின்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் உற்பத்தி போதுமானதாக இல்லை. இதனால் சீரம் நிறுவனம் உற்பத்தி செய்யும் கோவிஷீல்டு தடுப்பூசியையே பெரும்பாலானோர் எடுத்துக் கொள்கின்றனர்.

கோவிஷீல்டு தடுப்பூசி
மேலும், கோவாக்சின் தடுப்பூசிக்கு சுமார் 10 நாடுகள் மட்டுமே அனுமதி அளித்துள்ளது. இதனால் வெளிநாடுகளுக்குச் செல்ல இருப்பவர்கள் கோவிஷீல்டு தடுப்பூசியையே எடுத்துக் கொள்கிறார்கள். பிரிட்டனைச் சேர்ந்த ஆகஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய கொரோனா தடுப்பூசியைத் தான், கோவிஷீல்டு என்ற பெயரில் புனேவை சேர்ந்த சீரம் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது.

ஐரோப்பிய ஒன்றியம்
இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் டிஜிட்டல் கோவிட் சான்றிதழ் என்ற முறையை அறிமுகப்படுத்துகிறது. கொரோனா வேக்சின் எடுத்துக் கொண்டவர்கள், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் ஆகியோருக்கு இந்த சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழை வைத்திருப்பவர்கள் ஐரோப்பிய நாடுகளில் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி பயணம் செய்யலாம்,

நான்கு தடுப்பூசிகள்
இதற்காக ஐரோப்பிய ஒன்றியம் நான்கு வேக்சின்களுக்கு அனுமதி அளித்துள்ளது. அமெரிக்காவின் பைசர், மாடர்னா, ஜான்சன் ஆகிய வேக்சின்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் அளிக்கப்படும் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியான Vaxzervria இந்தப் பட்டியலில் உள்ளது. ஆனால், சீரம் தயாரிக்கும் கோவிஷீல்டு இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.

கோவிஷீல்டு இல்லை
இதனால் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசியான கோவிஷீல்டை எடுத்துக் கொண்டவர்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து சீரம் நிறுவனத்தின் ஆதார் பூனவல்லா தனது ட்விட்டரில், "கோவிஷீல்டை எடுத்துக் கொண்ட இந்தியர்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு மேற்கொள்ளும் பயணத்தில் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள்.

ஆதார் பூனவல்லா உறுதி
இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி உரியவர்களிடம் வலியுறுத்தியுள்ளேன். இந்த விஷயத்தில் மிக விரைவில் தீர்வு காணப்படும் என நம்புகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே, கோவிஷீல்டு வேக்சினை பல நாடுகள் ஏற்கவில்லை. ஸ்புட்னிக் வி வேக்சினையும் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் ஏற்காமல் இருந்ததால், வெளிநாடு செல்பவர்களுக்கு ஒரே தீர்வாக கோவிஷீல்டே இருந்தது. தற்போது அதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications