இரட்டை இலை சின்னம் கேட்ட எடப்பாடிக்கு பின்னடைவு.. டர்னிங் பாயிண்ட்டான ஓபிஎஸ்ஸின் ஒற்றை பாயிண்ட்! செம
உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு கை ஓங்கியிருக்க காரணமாக இருந்த அந்த ஒரு முக்கிய பாயிண்ட் எது?
டெல்லி: உச்சநீதிமன்றத்தில் இரட்டை இலை யாருக்கு என்ற தீர்ப்பில் எடப்பாடிக்கு பின்னடைவையும் ஓபிஎஸ்ஸுக்கு மகிழ்ச்சியையும் தந்த அந்த ஒற்றை பாயிண்ட் எது என தெரியுமா?
அதிமுக பொதுக் குழு தொடர்பான வழக்கின் தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதாவது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி தரப்பும் சரி, பன்னீர் செல்வம் தரப்பும் சரி தனித்தனியாக வேட்பாளர்களை நியமித்தனர்.
இந்த நிலையில் இப்படி போட்டி வேட்பாளர்களை இரு அணிகளுமே அறிவித்துவிட்டதால் இரட்டை இலை சின்னம் கிடைக்குமா இல்லை முடங்குமா என்பது குறித்து கேள்வி எழுந்தது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனுவை தாக்கல் செய்தனர்.
அதிமுக பிரச்சினையில் தலையிடவில்லை..ஒரே வேட்பாளர் இரட்டை இலை.. பாஜகவின் முடிவு சொன்ன அண்ணாமலை
பொதுக் குழு
அதில் கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக் குழுவின் அடிப்படையில் தங்கள் அணிக்குதான் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்தார். இந்த வழக்கு தொடர்பாக அடுத்த 3 நாட்களுக்குள் தேர்தல் ஆணையம் மற்றும் ஓபிஎஸ் தரப்பு பதில் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்தது.
இடைக்கால பொதுச் செயலாளர்
இந்த நிலையில் தன்னை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரிய எடப்பாடி பழனிச்சாமி மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஓபிஎஸ் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இடைக்கால மனுவில் தீர்ப்பு வழங்கினால் அது பொதுக் குழு தொடர்பான தீர்ப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்திருந்தார்.
தேர்தல் ஆணையம்
இதனிடையே தேர்தல் ஆணையம் அளித்த பதில் மனுவில் கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக் குழு கூட்ட தீர்மானத்தை தேர்தல் ஆணையம் இதுவரை ஏற்கவில்லை. தற்போதைய சூழலில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க இயலாது. இரட்டை இலை சின்னம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கோரிக்கை குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவெடுப்பார் என தெரிவித்திருந்தார்.
இரட்டை இலை
இந்த நிலையில் இரட்டை இலை தொடர்பான வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இரட்டைஇலை சின்னம் முடக்கப்பட்டதா என நீதிபதிகள் தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பினர். அதற்கு இல்லை என அவர்கள் பதில் அளித்தனர். அதிமுக வழக்குகள் நிலுவையில் இருப்பதால் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்
இந்த நிலையில் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை வெற்றி பெற வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம். வேட்பாளர் படிவத்தில் நான் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கையெழுத்திட தயார். ஆனால் எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளர் என்ற ரீதியில் கையெழுத்திட வேண்டும். அப்படி கையெழுத்திட்டால் நாங்கள் நிறுத்திய வேட்பாளர் செந்தில் முருகனை வாபஸ் வாங்கிக் கொள்கிறோம் என தெரிவித்தார்.
யோசனை
இதை கேட்ட நீதிபதிகள் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் கூறும் யோசனை நன்றாக இருக்கிறது, இரு தரப்பினரும் பேசி முடிவெடுக்க வேண்டியதுதானே, அப்படிப்பட்ட சூழல்தான் இருக்கிறது என நீதிபதிகள் தெரிவித்தனர். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு மறுப்பு தெரிவிக்கின்றனர். இதனால் நீதிபதிகள் கோபமடைந்து நீதிமன்றம் கூறும் யோசனையை ஏற்க வேண்டும். இல்லாவிட்டால் உத்தரவு பிறப்பிக்கும் நிலை ஏற்படும் என எச்சரித்தனர். ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வேட்பாளரை அறிமுகப்படுத்தும் போதிலிருந்தே ஓபிஎஸ் பொது வேட்பாளரை தான் வலியுறுத்தி வந்தார். இந்த பாயிண்ட்தான் உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாகவும் எடப்பாடிக்கு பாதகமாகவும் தீர்ப்பு வர காரணமாயிற்று!
இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக ஓபிஎஸ் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக் குழு கூட்டத்தை கூட்டி வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முடிவுகளை எடுக்கலாம். மேலும் இடைத்தேர்தல் வேட்பாளரை இறுதி செய்ய மட்டும் ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகிய 3 பேரையும் கட்சியிலிருந்து நீக்கப்படவில்லை என கருத வேண்டும். வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டதும் அதன் முடிவு அவைத் தலைவரால் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும். வேட்பாளரை தேர்வு செய்யும் பொதுக் குழு முடிவிற்கு கையெழுத்து பெற ஓபிஎஸ் தரப்புக்கு அனுப்பலாம். அதில் கையெழுத்திடுவது குறித்து ஓபிஎஸ் முடிவு எடுப்பார். இந்த ஆலோசனைகள் இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஓபிஎஸ் தரப்பு வாதம்
இந்த நிலையில் ஓபிஎஸ் தரப்பு தங்களது வேட்பாளர் செந்தில் முருகனை வாபஸ் பெற வைப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது. அது போல் பொதுக் குழுவை கூட்டுவதற்கான அழைப்பு ஓபிஎஸ் தரப்புக்கும் அளிக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவர் அறிமுகப்படுத்தப்படுவார் என்றே தெரிகிறது. ஆரம்பத்திலிருந்தே தன் பக்கம் நியாயம் இருக்கிறது என எடப்பாடி தரப்பின் கிண்டல், கேலிகளை பொருட்படுத்தாமல் தனி பாதையில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் பயணித்து வந்தார். அவரது பொறுமைக்கு கிடைத்த இடைக்கால நிவாரணமாகவே இது கருதப்படுவதாக ஓபிஎஸ் தரப்பினர் தெரிவித்தனர். ஓபிஎஸ் அவ்வப்போது கூறும் தர்மம் வென்றுவிட்டது என ஓபிஎஸ் தரப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர். பொதுக் குழு 7 ஆம் தேதிக்குள் கூட்ட வேண்டும். அதற்குள்ளாக பொது வேட்பாளர் அறிவிக்கப்பட வேண்டும். கே எஸ் தென்னரசு வேட்பாளராவாரா இல்லை அவரும் வாபஸ் பெறப்படுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கடந்த ஆண்டு ஜூன் முதல் அதிமுகவில் கூச்சல், குழப்பம் நிலவி வந்த நிலையில் தற்போது 6 மாதம் கழித்து இரு அணிகளும் இணைந்து செயலாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது.