இந்தியாவில் பசி அதிகரிக்கவில்லை.. மாறாக பிற நாடுகளில் பசியை உணரவில்லை என சொல்வாங்க.. கலாய்த்த ராகுல்
டெல்லி: உலக பட்டினிக்குறியீட்டில் இந்தியா பின் தங்கி இருப்பது குறித்து பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டில், பொதுமக்களிடம் யதார்த்தத்தை மறைத்து இந்தியாவை பலவீனப்படுத்த இன்னும் எவ்வளவு காலத்திற்கு பாஜகவும் ஆர்.எஸ்.எஸும் பணியாற்றும்? என்று பதிவிட்டுள்ளார்.
சர்வதேச பட்டினி குறியீடு பட்டியல் நேற்று வெளியானது. இந்த பட்டியலில் இந்தியா 107-வது இடத்திற்கு பின் தள்ளப்பட்டது.
இந்தியா கடந்த ஆண்டை விட 6 இடங்கள் பின் தங்கியிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்தது. இந்தப் பட்டியலில் கடந்த ஆண்டு இந்தியா 101-வது இடத்தில் இருந்தது.

அளவீடு தவறானது
இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் 99-வது இடத்திலும், பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை 64-வது இடத்திலும் நேபாளம் 81-வது இடத்திலும் உள்ளது. ஆசிய நாடுகளில் இந்தியாவுக்கும் கீழே ஆப்கானிஸ்தான் மட்டுமே உள்ளது. சர்வதேச பட்டினிக் குறியீடு பட்டியலில் இந்தியா பின் தங்கியது அரசியல் ரீதியிலான விமர்சனங்களுக்கும் வழி வகுத்தது. ஆனால், உலக பட்டினிக் குறியீடு குறித்த அளவீடு தவறானது என்று இந்தியா மறுப்பு தெரிவித்து இருந்தது.

ராகுல் காந்தி ட்விட்
இந்த நிலையில், உலக பட்டினிக் குறியீடு பட்டியலில் இந்தியா பின் தங்கியிருப்பதை சுட்டிக்காட்டி மத்திய அரசை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். ராகுல் காந்தி தனது ட்விட்டரில் வெளியிட்டு இருக்கும் பதிவில், ''உலக பட்டினிக் குறியீடு பட்டியலில் இடம் பெற்றுள்ள 121 நாடுகளில் இந்தியா 107-வது இடம் பெற்றுள்ளது. இந்தியாவில் பட்டினி அதிகரிக்கவில்லை. மாறாக, பிற நாடுகளில் மக்கள் பசி எடுப்பதாக உணர்வதில்லை என்று பிரதமர் மோடியும் அவரது அமைச்சர்களும் சொல்லப்போகிறார்கள்.

இன்னும் எவ்வளவு காலத்திற்கு
பொதுமக்களிடம் யதார்த்தத்தை மறைத்து இந்தியாவை பலவீனப்படுத்த இன்னும் எவ்வளவு காலத்திற்கு பாஜகவும் ஆர்.எஸ்.எஸும் பணியாற்றும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக இன்று காலை நிர்மலா சீதாரமன், இந்திய ரூபாயின் மதிப்பு சரியவில்லை என்றும் அமெரிக்க டாலர் மதிப்பு உயர்கிறது என்று பேசியிருந்தார். நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சை வைத்து பட்டினிக் குறியீடு விவகாரத்தில் மத்திய அரசை ராகுல் காந்தி விமர்சித்து இருப்பதாக தெரிகிறது.

ப சிதம்பரம்
முன்னதாக இது குறித்து ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள தனது ட்விட் பதிவில், 'ஊட்டச்சத்து இன்மை, பட்டினி, குழந்தைகள் போதிய வளர்ச்சியின்மை ஆகிய உண்மையான பிரச்சினைகளுக்கு மாண்பு மிகு பிரதமர் மோடி எப்போது தீர்வு காணப்போகிறார்? இந்தியாவில் 22.4 கோடி மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருப்பதாக கருதப்பட்டுள்ளது. 121 நாடுகள் கொண்ட உலக பட்டினிக் குறியீடு பட்டியலில் 107 வது என்ற கடைநிலை வரிசையில் இந்தியா உள்ளது.

வெறுப்பை பரப்புவது
மோடி அரசின் 8 ஆண்டு கால ஆட்சியில் அதாவது 2014- முதல் இந்தியா தொடர்ந்து பின் தங்கி வருகிறது. 19.3 சதவீத குழந்தைகள் போதிய எடையின்மை இன்றியும் 35.5 சதவீத குழந்தைகள் போதிய வளர்ச்சி இன்றியும் உள்ளனர். இந்துத்துவா, இந்தியை திணிப்பது, வெறுப்பை பரப்புவது பசிக்கான மருந்து கிடையாது என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச பட்டினி குறியீடு
ஊட்டச்சத்து குறைபாடு, 5-வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகள் சத்துணவு குறைபாட்டால் தங்கள் உயர்த்துக்கு ஏற்ற எடை இல்லாமல் இருப்பது, வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாமல் இருப்பது, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தை உயிரிழப்புகள் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாக கொண்டு சர்வதேச பட்டினி குறியீடு பட்டியல் தயார் செய்யப்பட்டு ஆண்டுதோறும் வெளியாகிறது. அயர்லாந்தைச் சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் அமைப்பு மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ப் ஆகிய இரு அமைப்புகளும் வெளியிட்டது.












Click it and Unblock the Notifications