பற்றி எரிந்த கார்! உள்ளே தவித்த பண்ட் ! தக்க நேரத்தில் ஓடி வந்த உதவிய பஸ் டிரைவர்! வெளியான புது தகவல்
டெல்லி: இந்திய நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் ஓட்டி வந்த கார், இன்று அதிகாலை விபத்தில் சிக்கியது. இதனிடையே ரிஷப் பண்ட்டை காப்ப உதவி ஒருவர் அதிகாலை நேரத்தில் என்ன நடந்தது என்பது குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் வங்கதேச தொடர் நடந்து முடிந்த நிலையில், இந்திய நட்சத்திர வீரர்களில் ஒருவரான ரிஷப் பண்ட் உத்தரகண்ட் சென்றிருந்தார். அங்கு ப்ரோமோஷன் பணிகள் முடிந்த பிறகு, அவர் தனது சொகுசு காரில் டெல்லிக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
இப்போது வட இந்தியாவில் கடுமையான குளிர்காலம் நிலவுகிறது. இந்த காலகட்டத்தில் அங்குப் பனிமூட்டமும் அதிகமாக இருக்கும். அதுவும் அதிகாலை நேரம் என்றால் சொல்லவே வேண்டாம்.

கார் விபத்து
இன்றும் அதே போலத் தான் இருந்துள்ளது. பண்ட் தனது பென்ஸ் காரை அதிவேகமாக ஓட்டிவந்த நிலையில், எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. மேலும், பனி மூட்டத்தால் வழி தெரியாமல், எதிரே இருந்த டிவைடரில் அவரது கார் மோதியுள்ளது. கார் தீப்பிடித்த நிலையில், ஜன்னலை உடைத்துக் கொண்டு பண்ட் வெளியே வந்துள்ளார். இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ள அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நல்வாய்ப்பாக அவருக்கு மோசமான பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

ரிஷப் பந்த்
இதற்கிடையே விபத்து நடந்த சமயத்தில் என்ன நடந்தது என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. விபத்து நடந்த உடன் அங்கே அருகே இருந்த பேருந்து ஓட்டுநரான சுஷில் என்பவரே உடனடியாக அங்குச் சென்றுள்ளார். ரிஷ்ப் பண்டை காரில் இருந்து வெளியேற உதவியதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், விபத்தில் படுகாயமடைந்த பண்ட் நொண்டியபடியே வந்த ரிஷப் பண்ட் வெளியே வந்துள்ளார். அப்போது அவருக்கு உதவிய சுஷிலை பார்த்து, "நான் தான் ரிஷப் பண்ட்" என்று அவர் வலியுடன் கூறியுள்ளார்.

பஸ் டிரைவர்
ரிஷப் பண்ட்டின் கார் தீப்பிடித்ததை அடுத்து, சுஷில் அங்கு விரைந்து சென்று கார் கண்ணாடியை உடைத்து அவரை காப்பாற்றியுள்ளார். தான் ஹரித்வாரில் இருந்து வந்து கொண்டிருந்ததாகவும் அப்போது தான் இந்த விபத்தை பார்த்ததாகவும் அவர் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், "முதலில் விபத்தில் சிக்கியது யார் என தெரியவில்லை.. இருப்பினும் கார் டிவைடரில் மோதியதைக் கண்டு, உள்ளே சிக்கியவருக்கு உதவ வேண்டும் என்று உடனடியாக எனது வண்டியை நிறுத்திவிட்டு வந்தேன். கண்ணாடியை உடைத்து.. அவரை வெளியே இழுத்தேன்.

காப்பாற்றினேன்
அதன் பின்னர். அவர் கிரிக்கெட் வீரர் பந்த் என்பது தெரிய வந்தது. அவரை பார்த்ததும் எங்களுக்குக் கவலை ஏற்பட்டது. நல்வாய்ப்பாக அவருக்கு மோசமான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை." என்று அவர் தெரிவித்தார். வேகமாக வந்த பந்த்தின் கார் டிவைடரில் மோதியுள்ளது. அதன் பிறகு சுமார் 200 மீட்டர் அது சறுக்கிச் சென்றுள்ளது. இந்தளவுக்கு மோசமான விபத்து ஏற்பட்டாலும் கூட நல்வாய்ப்பாக அவருக்குப் பெரியளவில் காயம் ஏற்படவில்லை.

உத்தரகண்ட் முதல்வர்
பந்த் விரைவில் குணமடைய வேண்டும் என்று பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இதற்கிடையே அவரது சிகிச்சைக்கான முழு செலவையும் தனது அரசே ஏற்கும் என்று உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார். ரிஷப் பந்திற்கு உயர் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் விபத்துகள்
இந்தியாவில் சாலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டும் இந்தியாவில் நாம் 1.53 லட்சம் பேரை விபத்துகளில் இழந்துள்ளோம். சர்வதேச அளவில் அதிக விபத்துகள் ஏற்படும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்தியாவில் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைப்பதும் சவால் மிகுந்த ஒன்றாக மாறியுள்ளது. விபத்தில் சிக்கியவர்களில் பலருக்கும் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் போவது உயிரிழப்புகள் அதிகரிக்க மற்றொரு முக்கிய காரணமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications