கும்பமேளாவில் சிறப்பு போலீசாகவே... மாறிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்.. ஐடி கார்டும் வழங்கப்பட்டது
டேராடூன்: உத்தரகண்ட் மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்தைச் சமாளிக்க உதவும் ஆர்எஸ்எஸ் தன்னார்வலர்களுக்குச் சிறப்புக் காவல் பணியாளர்கள் என்ற ஐடி கார்டு முதல்முறையாக வழங்கப்பட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகா கும்பமேளா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பரவலுக்கு மத்தியிலும் ஏப்ரல் முதல் வாரம் மகா கும்பமேளா தொடங்கியது.
மகா கும்பமேளா நிகழ்வில் லட்சக் கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். இதனால் கும்பமேளா நடைபெறும் இடத்தில் கூட்ட நெரிசலும் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படும்.
கொரோனா தீவிரம்...குஜராத் மருத்துவமனைகளில் வரிசைகட்டி நிற்கும் ஆம்புலன்ஸ்கள் - காரிலேயே இறந்த நோயாளி
கும்பமேளாவில் ஆர்எஸ்எஸ்
இதைச் சரி செய்யும் பணிகளில் அங்குள்ள போலீசார் ஈடுபட்டுள்ளனர். காவல்துறைக்கு உதவும் வகையில் சுமார் 1500க்கும் மேற்பட்ட ஆர்எஸ்எஸ் தன்னார்வலர்களும் கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்துவது, போக்குவரத்தைச் சரி செய்வது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆர்எஸ்எஸ் தன்னார்வலர்களின் உதவி சிறப்பாக உள்ளதாகவும் இதனால் காவல் துறையினரின் பணி எளிதாக இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சிறப்புக் காவல் பணியாளர்கள்
ஆர்எஸ்எஸ் தன்னார்வலர்கள் கும்பமேளாவில் இதுபோன்ற பணிகளில் ஈடுபடுவது வழக்கமான நிகழ்வுதான் என்றாலும் இந்த முறை அவர்களுக்கு சிறப்புக் காவல் பணியாளர்கள் என்ற ஐடி கார்டை போலீசார் வழங்கியுள்ளனர். ஆர்எஸ்எஸ் பணியாளர்களுக்கு இது போன்ற சிறப்புக் காவல் பணியாளர்கள் என்ற ஐடி கார்டு வழங்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். அதேநேரம் ஆர்எஸ்எஸ் தன்னார்வலர் அவர்களுக்கு எவ்வித ஊதியமும் அளிக்கப்படாது என்றும் அவர்கள் தாமாக முன்வந்து இந்த பணியைச் செய்கிறார்கள் என்றும் உத்தரகண்ட் போலீசார் தெரிவித்துள்ளனர்.
போலீசார் கேட்டுக்கொண்டனர்
ஆர்எஸ்எஸ் தன்னார்வலர்களுக்கு ஐடி கார்டு வழங்கும் செயல்முறையைத் தொடங்கியவர் கும்பமேளா ஐ.ஜி. சஞ்சய் குன்ஜியால் என்று உத்தரகண்ட் ஆர்.எஸ்.எஸை சேர்ந்த பிரமுக் சுனில் தெரிவித்தார். மேலும், "கடந்த மார்ச் மாதம் சஞ்சய் குன்ஜியால் எங்களை தொடர்பு கொண்டு, கும்பமேளாவில் ஆர்எஸ்எஸ் தன்னார்வலர்களைச் சிறப்புக் காவல் பணியாளர்களாக பணியாற்ற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்" என்றும் சுனில் கூறினார்.
கொரோனா பாதிப்பு
மகா கும்பமேளா நடைபெறும் ஹரித்துவாரில் நேற்று மட்டும் அங்கு 525 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. கடந்த ஐந்து நாட்களில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கும்பமேளா புதிய கொரோனா ஹாட்ஸ்பாட் உருவெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.