பல இடங்களில் கங்கை நீரை குடிக்க, குளிக்க பயன்படுத்த முடியாது.. வௌியான அதிர்ச்சி தகவல்
டெல்லி: மிகவும் புனிதமானது என கூறப்படும் நதிகளில் மிக முக்கியமான ஒன்றான கங்கை நதியின் நீரை, குடிக்கவோ அல்லது குளிக்கவோ பயன்படுத்த முடியாது. மக்களின் பயன்பாட்டிற்கு கங்கை நதியின் நீர் ஏற்றதல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கங்கை நதியானது நாட்டின் மிக முக்கியமானஆறு . மேலும் இது நாட்டின் தேசிய நதி என அறியப்படுகிறது இமய மலையில் உத்தராகாண்ட் மாநிலத்திலுள்ள கங்கோத்ரியில் தொடங்கும் பாகிரதி நதியானது, தேவப்பிரயாக் எனுமிடத்தில் அலக்நந்தா ஆற்றுடன் கலந்து கங்கையாகிறது.
பின் உத்தரப்பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்கள் வழியாகச் சென்று, ஹூக்லி, பத்மா என இரு ஆறுகளாக பிரிந்து முறையே மேற்குவங்கம், வங்கதேசம் வழியாகச் சென்று மிகப்பெரிய வளமான கழிமுகத்தை உருவாக்கி வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இந்த நதியானது மொத்தம் 2525 கி.மீ ஓடுகிறது. ரிஷிகேஷ், ஹரித்வார், அலகாபாத், வாரணாசி, பட்னா, கொல்கத்தா ஆகியவை கங்கை நதிக்கரையில் அமைந்ததுள்ள முக்கிய நகரங்களாகும்.
இப்படிப்பட்ட தன்மை வாய்ந்த கங்கை நதியின் நீர் மக்களின் பயன்பாட்டிற்கு உகந்தது அல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், உத்தரப்பிரதேசம் - மேற்கு வங்கத்தின் வழியே செல்லும் பெரும்பாலான இடங்களில் உள்ள கங்கை நதி நீர், குடிக்க மற்றும் குளிப்பதற்கு ஏற்றதாக இல்லை என கூறியுள்ளது.
மாசு கட்டுப்பாட்டு வாரியம். மேற்கண்ட மாநிலங்களுக்கிடையே கங்கை நதியையொட்டி 86 நேரடி கண்காணிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டு கங்கை நீரானது ஆய்வுக்குட்படுத்தப்பட்டதாக கூறியுள்ளது. இதில் 8 இடங்களில் மட்டுமே கங்கையின் நீரை சுத்தப்படுத்தி கிருமிகளை நீக்கிவிட்டு பயன்படுத்த முடிந்ததாக கூறியுள்ளது.
மற்ற 78 இடங்களில் நினைத்து பார்க்க கூட முடியாத அளவிற்கு மோசமானன தன்மையுடன் கூடிய பாக்டீரியாக்கள் கலந்து அந்நீர் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளது. மாசுபடுத்தப்பட்ட மற்றும் தகுதியற்ற கங்கை நீரின் பெரும்பகுதி பெரும் தீங்கு விளைவிக்க கூடிய கோலிஃபார்மிக் பாக்டீரியாவுடன் காணப்படுகிறது.
புசாவ்லா-பீகாரில் உள்ள கோமாதி ஆறு, கான்பூர், வாரணாசியில் கோலா காட், ராகேபரில் டால்மா, அலகாபாத்தில் உள்ள சங்கம், பக்சர்,
பாட்னா, பாகல்பூர் உள்ளிட்டவைகளும் இதில் அடக்கம்
கிருமி நீக்கம் செய்த பிறகு குடிப்பதற்காக தகுதியுடைய ஆறு இடங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன கங்கோத்ரியில் உள்ள பகீரதி ருத்ரபிரயாக்,
தேவ்பிரயாக், உத்தரகண்ட்டில் உள்ள ராய்வாலா, ரிஷிகேஷ், பிஜ்னூர் மற்றும் மேற்குவங்கத்தில் உள்ள டயமண்ட் ஹார்பர் உள்ளிட்ட பகுதிகள் ஆகும்
கங்கை நதி பாயும் பகுதிகள் பலவற்றின் கரையோரங்களில் ஆயிரத்திற்கும் அதிகமான தொழிற்சாலைகள் உள்ளதால், அங்கிருந்து கழிவுநீர் கங்கை ஆற்றில் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
ஆற்றின் சுத்திகரிப்புக்கு பல திட்டங்கள் இருந்த போதிலும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதலின் படி அதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்