கல்லூரி மாணவர்கள் தேசிய கொடியுடன் செல்ஃபி எடுக்க வேண்டும்.. யூஜிசி அதிரடி அட்வைஸ்
டெல்லி: வரும் 15ம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், கல்லூரி மாணவர்கள் அனைவரும் தேசிய கொடியுடன் தாங்கள் எடுத்த செல்ஃபியை www.harghartiranga.com எனும் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி)வலியுறுத்தியுள்ளது.
'அம்ருத் மசோத்சவ் ஆஸாதி' என்ற பெயரில் 75-ம் ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டம் நாடு முழுவதிலும் நடைபெற்று வருகிறது. பல்வேறு பகுதிகளில் புதிய நிகழ்ச்சிகள் நடத்துவதிலும், இந்த கொண்டாட்டங்களில் அனைத்து மக்களையும் பங்கேற்க வைப்பதிலும் மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.
இந்நிலையில் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக 'ஹர் கர் திரங்கா' (ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ண கொடி) ஏற்றும் புதிய செயல் திட்டத்தை சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். இந்த செயல் திட்டத்தின்படி கல்லூரி மாணவர்கள் அனைவரும் தேசிய கொடியுடன் எடுத்தசெல்ஃபியை www.harghartiranga.com இணைய தளத்தில் பதிவேற்ற வேண்டும் என்று யுஜிசி வலியுறுத்தியுள்ளது.

சுதந்திர தினம்
உலக அளவில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் நாட்டின் சுதந்திர தினத்தை இதுவரை எந்த நாடும் கொண்டாடவில்லை. இதனை இந்தியா சாதிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, குடிமக்களின் தேச பக்தியை வெளிப்படுத்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று 100 கோடிக்கும் அதிகமான தேசியக் கொடிகள் நாடு முழுவதும் பறக்கவிடப்பட உள்ளன. உலக நாடுகளில் முதல் முறையாக நடத்தப்படும் இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கான தேசியக் கொடிகள், தபால் நிலையங்களிலும், இணையதள சந்தைகளிலும் கிடைக்கும். ஜுலை 22 முதல் அரசு இணையதளங்களில் சுதந்திர தின முத்திரையும், வாசகமும் இடம்பெற உள்ளன.

யுஜிசி
தற்போது இந்த திட்டத்தின் ஒரு அம்சமாக, கல்லூரி மாணவர்கள் தங்கள் செல்ஃபியை இணையத்தில் பதிவேற்ற யுஜிசி வலியுறுத்தியுள்ளது. அதேபோல மாணவர்கள் தங்களின் இருப்பிடத்தையும் இதில் டேக் செய்துகொள்ளலாம் என யுஜிசி தலைவர் எம்.ஜெகதேஷ் குமார் கூறியுள்ளார். இந்த சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான கவுண்டவுன் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதத்தில் குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது என்பதை ஜெகதேஷ் நினைவு கூறினார்.

கடிதம்
சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 15 ஆம் தேதி காலை 9 மணிக்குப் பிறகு நாட்டில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் தேசியக் கொடியை பறக்கவிடுதல் மற்றும் அதனை தயாரிப்பு குறித்த சட்ட விதிகளை மத்திய அரசு தளர்த்துவதாக அறிவித்தது. அதன்படி வீடுகளில் தேசிய கொடியினை 24 மணி நேரமும் பறக்கவிட அனுமதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு உள்துறை செயலாளர் அஜய் பல்லா எழுதியிருந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்திருத்தம்
கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "இந்திய தேசியக் கொடி ஏற்றப்படுதல், பயன்பாடு ஆகியவை கடந்த 2002-ஆம் ஆண்டின் இந்திய தேசியக் கொடி சட்டம் மற்றும் 1977-ஆம் ஆண்டின் தேசிய சின்னங்கள் அவமதிப்பு தடுப்புச் சட்டத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன. தேசியக் கொடியை பொதுமக்களின் வீட்டில் வெளிப்படையாக காட்சிப்படுத்தவும், அதனை பகல் மட்டுமன்றி இரவிலும் பறக்கவிடவும் அனுமதிக்கும் வகையில் இந்திய தேசியக் கொடி சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதேபோல், கைகளால் நூற்கப்பட்ட தேசியக் கொடி மட்டுமன்றி இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட கொடிகளையும் பயன்படுத்தலாம்.

தேசியக்கொடி
பருத்தி, பாலியஸ்டா், கம்பளி, காதி பட்டு ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட கொடிகளாக அவை இருக்கலாம். இதற்குரிய விதிமுறை திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனை பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் அறியும்படி செய்ய வேண்டும்" என்று அஜய் பல்லா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முந்தைய சட்டத்தின்படி தேசிய கொடி சூரியன் உதயமான பின்னர் ஏற்றப்பட வேண்டும் என்றும், சூரியன் மறைவதற்கு முன்னால் கொடியை இறக்கிவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தது. மேலும், கொடி கையால் தயாரிக்கப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications