இந்தியாவில் 1 லட்சத்தை கடந்தது கொரோனா உயிரிழப்பு... 6 மாதங்களை கடந்தும் குறையாத தாக்கம்..!
டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை இரவு நிலவரப்படி ஒரு லட்சத்தை கடந்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் நாட்டில் முதல்நபராக கேரளாவை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து மஹாராஷ்டிரா, டெல்லி, தெலுங்கானா, தமிழ்நாடு என பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா தனது கோர முகத்தை காட்டத்தொடங்கியது. இதனால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் மக்களில்ன் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.
இந்நிலையில் கொரோனா தொற்றால் இந்தியாவில் ஒரு லட்சத்து 873 பேர் இதுவரை உயிரிழந்துள்ளார்கள் என்ற விவரம் வெளிவந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆயிரத்து 69 பேர் நாடு முழுவதும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்கள். அதேபோல் இந்தியா முழுவதும் இதுவரை 64 லட்சத்து 71 ஆயிரத்து 665 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதில் 54 லட்சத்து 24 ஆயிரத்து 901 பேர் கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்துள்ளார்கள்.
தமிழகத்தில் இன்று 5,595 பேருக்கு கொரோனா தொற்று... 67 பேர் மரணம்... 5,603 பேர் டிஸ்சார்ஜ்..!
சுகாதாரத்துறை சார்பில் நாடு முழுவதும் தொடர்ந்து பரிசோதனை அதிகரிக்கப்பட்டு வருகிறது. மக்கள் தொகை அடிப்படையில் மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் இறப்பு விகிதம் மிகவும் குறைவு எனக் கூறப்படுகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தரவுகளின் படி இந்தியாவில் இதுவரை 7 கோடியே 67 லட்சத்து 17 ஆயிரத்து 778 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
இதனிடையே நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், வீடுகளில் தங்கி 9 லட்சத்து 42 ஆயிரத்து 217 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.