இந்தியாவில் ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா எட்டு லட்சத்தை நெருங்கியது
இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,93,802ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 26,506பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லி: இந்தியாவில் கொரோனா ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. தினந்தோறும் 25ஆயிரம் பேர் வரை பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 26,506பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,93,802ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவில் உருவான கொரோனா தனது ஆக்டோபஸ் கரங்களினால் உலகம் முழுவதும் பல நாடுகளில் பரவியுள்ளது. 1.30 கோடி பேரை கொரோனா வைரஸ் தொட்டுப்பார்த்துள்ளது. இதுவரை உலகம் முழுக்க 5.50 லட்சம் பேரின் உயிரை குடித்துள்ளது என்றாலும் 66 லட்சம் பேர்வரைக்கும் நோயுடன் எதிர்த்து போராடி கொரோனாவில் இருந்து மீண்டிருக்கின்றனர் என்பது நம்பிக்கை அளிக்கும் செய்தியாக உள்ளது.
கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நோய் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கின்றனர். பிரேசிலுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 3ஆம் இடம் பிடித்துள்ளது. இங்கு 7,93,802 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகியிருக்கின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 26,506பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒருநாளில் பதிவாகும் உச்சபட்ச எண்ணிக்கை இதுவாகும். அதிகமான பாதிப்பு எண்ணிக்கையை கொண்ட மகாராஷ்டிரா நாட்டிலே பாதிப்பு எண்ணிக்கை அதிகமுள்ள முதல் மாநிலமாக உள்ளது. அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டிலே அதிக உயிரிழப்பை கொண்ட மாநிலமாகவும் உள்ளது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.
நேபாளத்தில் பிரதமர் ஒலியை காப்பாற்ற ஒட்டு போடும் சீனா... மீண்டும் கூட்டம் ஒத்தி வைப்பு!!
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 475 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 21,604 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,95,513 ஆக உள்ளது. அதேபோல், நாடு முழுவதும் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2,76,685 ஆக உள்ளது.
தடுப்பு மருந்து கண்டுபிடிக்காமல் போனால் அடுத்த ஆண்டு இந்தியாவில் ஒரே நாளில் 2.87 லட்சம் பேருக்கு கொரோனா தொற்றும் நிலை ஏற்படும் என்று எச்சரிக்கிறது ஒரு ஆய்வறிக்கை.