இந்தியாவில் புதிதாக 15,102 பேருக்கு கொரோனா பாதிப்பு - பிஎம் கேர்ஸ் திட்டம் நீட்டிப்பு
நாடு முழுவதும் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் இன்றைய தினம் புதிதாக 15,102 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.
டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,102 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 49 நாட்களுக்குப் பின்னர் நேற்று கொரோனா பாதிப்பினால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2 லட்சத்துக்கும் கீழே குறைந்துள்ளது. பி.எம்.கேர்ஸ் திட்டம் இம்மாதம் 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா மூன்றாவது அலை ஓய்ந்து விட்டது. அடுத்தடுத்த வேரியண்டுகள் வந்தாலும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனினும் முழுவதுமாக இயல்பு நிலை திரும்பவில்லை. கொரோனா பாதிப்பினால் இன்னமும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து கொண்டிருப்பதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடைய மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,102 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,28,67,031 பேராக உயர்ந்துள்ளது.நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 31,377 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர். இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 4,21,89,887 பேர் மீண்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 278 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,12,622 ஆகும். 1,64,522 பேர் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பினால் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை நாடு முழுவதும் 175.46 கோடி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் திட்டம் இம்மாதம் 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு பிஎம் கேர்ஸ் திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படுகிறது. அதன்படி, பெற்றோர்களை இழந்த அனைத்துக் குழந்தைகளும் ரூ.5 லட்சம் சுகாதாரக் காப்பீட்டுடன் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பயனாளியாக சேர்க்கப்படுகிறார்கள்.
சுகாதாரக் காப்பீட்டின் மூலம் நல்வாழ்வையும், கல்வியின் மூலம் அதிகாரமளித்தலையும் 23 வயது அடையும்போது நிதியுதவி செய்வதன் மூலம் தற்சார்புக்கு அவர்களைத் தயார் செய்வதையும் இந்தத் திட்டம் மையமாகக் கொண்டுள்ளது. முன்னதாக இது டிசம்பர் 31 2021 வரை மட்டுமே செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்போது இந்தத் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் மேலும் பல குழந்தைகள் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications