கொரோனா தடுப்பூசி..திடீரென அதிகரித்த மக்கள் நம்பிக்கை.. சில நாட்களில் 4 மடங்கு உயர்வு..காரணம் இதுதான்
டெல்லி: இந்தியாவில் தொடக்கத்தில் மிகவும் மந்தமாக நடைபெற்று வந்த கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள், கடந்த சில நாட்களாக நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.
இந்தாண்டு தொடக்கத்தில் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளின் அவசரக்கால பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாட்டில் நடைபெற்று வருகிறது.
ஒரு கோடி சுகதாரா ஊழியர்கள் உட்பட மூன்று கோடி முன்களப் பணியாளர்களுக்கு முதல்கட்டமாக தடுப்பூசி பணிகள் செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. அவர்கள் அனைவருக்கும் அரசு மையங்களில் இலவசமாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
ஆர்வம் இல்லை
இருப்பினும், ஆரம்பத்தில் சில வாரங்களில் கொரோனா தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளப் பொதுமக்கள் பெரியளவில் ஆர்வம் காட்டவில்லை. வீட்டு மருத்துவம் மூலம் கொரோனாவைக் கட்டுப்படுத்திவிட முடியும் என்று பொதுமக்கள் கருதியதாலும் தடுப்பூசி பற்றி நம்பிக்கை ஏற்படாததாலும் தொடக்கத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.
காரணம் என்ன
அதேபோல பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு மூன்றாம்கட்ட சோதனை முடிவுகள் வெளியாவதற்கு முன்னரே ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது. இதை அப்போது எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சித்திருந்தனர். இதன் காரணமாகவும் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள தயக்கம் காட்டினர். இதனால் பல இடங்கள் தடுப்பூசி மையங்களை திறந்து வைத்தும், பல மணி நேரமாக ஆள்கள் எட்டிக்கூடப் பார்க்காத நிலை இருந்தது.
எதிர்க்கட்சிகள் விமர்சனம்
அதேநேரம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் தடுப்பூசி குறித்த மக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில், அந்நாட்டின் பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மக்கள் முன்னிலையில் தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டர். இது அந்நாட்டு மக்களின் நம்பிக்கையை அதிகரித்தது. அதேநேரம் இந்தியாவில் முதல்கட்ட பணிகளின் போது எந்த முக்கிய தலைவர்களும் தடுப்பூசியை எடுத்துக் கொள்ளவில்லை என்பது முக்கிய குற்றச்சாட்டாகப் பார்க்கப்பட்டது.
பிரதமர் மோடி
கடந்த மார்ச் 1ஆம் தேதி இரண்டாம்கட்ட தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டது. அப்போது, முதல் நபராகப் பிரதமர் நரேந்திர மோடி தடுப்பூசியை எடுத்துக்கொண்டார். அதுவும் பெரிதும் சர்ச்சைக்குள்ளான கோவாக்சின் தடுப்பூசியை அவர் எடுத்துக்கொண்டார். இதன் மூலம் அனைத்து விமர்சனங்களுக்கும் பிரதமர் மோடி சத்தமில்லாமல் தனது பாணியில் பதில் அளித்தார்.
நான்கு மடங்கு அதிகரிப்பு
அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி கடந்த மாதம் வரை 50 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தது. ஆனால், இப்போது 2.1 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல தினசரி கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுபவர்களின் எண்ணிக்கையும் சுமார் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.
இதுதான் காரணம்
இதற்கு இரண்டு விஷயங்கள் முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. முதல் காரணம் பிரதமர் நரேந்திர மோடி தடுப்பூசி எடுத்துக்கொண்டது. இது மக்கள் மத்தியில் நம்பகத்தன்மையை அதிகரித்துள்ளது. இதன் காரணமாகப் பலரும் கடந்த நாட்களாக ஆர்வத்துடன் தடுப்பூசிகளை எடுத்துக்கொள்கின்றனர். அதேபோல கோவாக்சின் தடுப்பூசிகளின் முடிவுகளும் வெளியாகியுள்ளது. கோவாக்சின் தடுப்பூசி 81% வரை பலனளிக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதுவும் மக்கள் மத்தியில் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
தனியார் மையங்கள்
அதேபோல தனியார் மையங்களிலும் கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் பல லட்சம் பேரும் எளிதில் கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்ளும் சூழ்நிலை உருவானது. இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகம் பெற இது மற்றொரு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. தற்போது அரசு மையங்களில் தடுப்பூசி இலவசமாகவும் தனியார் மையங்களில் ரூபாய் 250க்கும் கொரோனா தடுப்பூசி விற்பனை செய்யப்படுகிறது.