பிள்ளையார் சுழி.. இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்ததே தமிழர் தான்! யார் தெரியுமா? சுவாரசியம்
இந்தியாவில் முதல் முறையாக மத்திய பட்ஜெட்டை தமிழ்நாட்டை சேர்ந்த ஆர்கே சண்முகம் செட்டி தாக்கல் செய்தார். இதுவரை 75 பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதில் தமிழ்நாட்டை சேர்ந்த 6 பேர் 22 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர்.
டெல்லி: 2023-2024ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில் தான் சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஆர்கே சண்முகம் செட்டி நிதி அமைச்சராக தாக்கல் செய்து இந்தியாவின் வரவு செலவு தொடர்பான விபரங்களை மக்களுக்கு தெரியப்படுத்தும் நிதி நிலை அறிக்கை முறைக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளது வரலாற்று நிகழ்வுகளில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்று முதல் இன்று வரை மத்திய பட்ஜெட்டுக்கும், தமிழ்நாட்டுக்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது. மொத்தம் 26 பேர் நிதி அமைச்சர்களாக 75 முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிலையில் இதில் 6 தமிழர்கள் 22 முறை பட்ஜெட் உரை வாசித்துள்ளார். இன்று இந்தியாவின் 76வது பட்ஜெட் தாக்கலையும் தமிழரான நிர்மலா சீதாராமன் தான தாக்கல் செய்ய உள்ளார். இதன்மூலம் தமிழர்கள் தாக்கல் செய்த பட்ஜெட்டின் எண்ணிக்கை 23 யை தொட்டுள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு சார்பில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு பொது பட்ஜெட், ரயில்வே பட்ஜெட் என 2 பட்ஜெட்டுகள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. 2014ல் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த நடைமுறை மாற்றப்பட்டது. பிற துறைகளுடன் ரயில்வேயையும் சேர்த்த மத்திய நிதியமைச்சர் மட்டுமே பட்ஜெட் தாக்கல் செய்யும் வழக்கம் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் தான் 2023-2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று ஜனாதிபதி திரெளபதி முர்முவின் உரையுடன் துவங்கியது. இன்று காலை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
உச்சகட்ட எதிர்பார்ப்பு.. மோடி 2.O-ன் கடைசி முழு பட்ஜெட்! எப்போது தொடங்கும் நிர்மலா உரை? முழு விவரம்
தமிழர் போட்ட பிள்ளையார் சுழி
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் பதவிக்காலம் 2024ல் முடிவுக்கு வர உள்ளது. இதனால் பிரதமர் நரேந்திர மோடியின் 2.O ஆட்சியின் கடைசி முழு பட்ஜெட் இதுவாக அமைய உள்ளது. மேலும் இந்த ஆண்டு மொத்தம் 9 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் இந்த பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு என்பது எகிறியுள்ளது. இந்நிலையில் தான் மத்திய பட்ஜெட் தொடர்பான பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தமிழர்களுக்கும், மத்திய பட்ஜெட்டுக்கும் இடையே மிகவும் நெருக்கமான தொடர்பு உள்ளது. ஆம், மத்திய பட்ஜெட் தாக்கலுக்கே தமிழர் தான் பிள்ளையார் சுழி போட்டார் என்றால் நம்ப முடிகிறதா?. நம்பித்தான் ஆக வேண்டும். ஏனென்றால் அது தான் உண்மை. அதாவது சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டையே தமிழர் தான் தாக்கல் செய்துள்ளார் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். இதனை சிலர் அறிந்திருந்தாலும் பலர் அறிந்திருக்க மாட்டீர்கள். இவ்வாறு அறியாத பலருக்கும் அந்த தகவல்களை சொல்லும் செய்தி தான் இது. அதுமட்டுமின்றி இந்தியாவில் மொத்தம் எத்தனை பட்ஜெட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், தமிழர்களின் பங்கு என்ன? என்பது பற்றிய விபரங்கள் வருமாறு:
பட்ஜெட்டில் தமிழர்களின் பங்களிப்பு
இந்தியா சுதந்திரம் அடைந்த 1947 முதல் மொத்தம் 29 பேர் நிதியமைச்சராக செயல்பட்டு வந்துள்ளனர். மொத்தம் 75 பட்ஜெட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 76வது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இது தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்யும் 23வது மத்திய பட்ஜெட்டாகும். இதுவரை நிர்மலா சீதாராமனுடன் சேர்த்து 6 பேர் மத்திய நிதி பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் பட்ஜெட்டை சமர்பித்துள்ளனர். ப சிதம்பரம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் 2 முறையும், காங்கிரஸ் கட்சியில் 7 முறையும் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். நிர்மலா சீதாராமன் பாஜகவில் இருந்து பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். மற்றவ 4 பேரும் காங்கிரஸ் கட்சியில் இருந்து பட்ஜெட் தாக்கல் செய்தவர்கள். திராவிட கட்சிகளில் இதுவரை எந்த தமிழர்களும் பட்ஜெட்டை தாக்கல் செய்யவில்லை.
1947 ல் முதல் பட்ஜெட் அறிமுகம் செய்த தமிழர்
இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றி வருகின்றது. அதன்படி சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை கோயம்புத்தூரில் பிறந்த ஆர்கே சண்முகம் செட்டி தாக்கல் செய்தார். 1947ல் அவர் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டின் மொத்த மதிப்பு ரூ.171.15 கோடியாக இருந்தது. ஆனால் தற்போது தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டின் மதிப்பு என்பது ரூ.35 லட்சத்தை தாண்டும். 1947 நவம்பர் 26ல் ஆர் கே சண்முகம் செட்டி தாக்கல் செய்த முதல் பட்ஜெட் உணவு பற்றாக்குறையை போக்குவதை அடிப்படையாக கொண்டது. கடும் வறுமை, உணவு பற்றாக்குறை உள்ளிட்டவற்றை போக்குவதை மையமாக வைத்து தான் இந்த பட்ஜெட் தாக்கல் ஆனது. இந்த பட்ஜெட் ரூ.175.15 கோடி வருவாயை இலக்காக கொண்டு மொத்த செலவினத்தை ரூ.197.29 கோடியாகவும், பற்றாக்குறையை ரூ.26.24 கோடியாக மதிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் பாகிஸ்தானுடனான காஷ்மீர் பிரச்சனை காரணமாக மத்திய பாதுகாப்புத்துறைக்கு ரூ.92.74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவர் 1892 அக்டோபர் மாதம் கோவையில் வணிக ரீதியான குடும்பத்தில் பிறந்தார். 1944ல் பிரிட்டன் வூட்ஸில் நடந்த உலக நாணய மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதியாக இவர் செயல்பட்டார். 2ம் உலகப் போர் காலத்தில் பொருளாதார சீர்த்திருத்தத்துக்கான அடித்தளம் தேவைப்பட்ட சமயத்தில் இந்தியாவின் நிதி அமைச்சராக செயல்பட்டார். அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் விருப்பத்திற்கு மாறாக தேசப்பிதா காந்தியால் நிதியமைச்சராக அடையாளம் காணப்பட்டார். அதன்பிறகு நேருவுடன் ஏற்பட்ட மோதலால் சண்முக செட்டி தனது பொறுப்பை ராஜினாமா செய்தார்.
டி டி கிருஷ்ணமாச்சாரி
அதன்பிறகு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த 2வது தமிழர் என்ற பெருமை டிடி கிருஷ்ணமாச்சாரியை சேரும். சென்னையை சேர்ந்தவர். இவர் 1956-58 மற்றும் 1964-1966 வரை மத்திய அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தார். 6 முறை மத்திய பட்ஜெட்டை இவர் தாக்கல் செய்தார். 1957ல் கிருஷ்ணமாச்சாரியின் முதல் பட்ஜெட் வரி சீர்திருத்தங்களை அடிப்படையாக கொண்டிருந்தது. அதோடுஅந்நிய செலாவணி பற்றாக்குறையை எதிர்கொண்டதால், அவர் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை குறைத்தார். இவர் நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்க வழிவகுத்து கொடுத்தார். ஐடிபிஐ, ஐசிஐசிஐ மற்றும் யுடிஐ போன்ற நிதி நிறுவனங்களில் மூன்று பெரிய எஃகு ஆலைகள் மற்றும் பல நீர்-மின்சார திட்டங்களை துவங்க உதவினார். அதன்பிறகு டிடிகே குழுமத்தின் ஊழல் தொடர்பாக குற்றச்சாட்டுகளாக தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
சிதம்பரம் சுப்பிரமணியம்
சிதம்பரம் சுப்பிரமணியம் தமிழ்நாட்டின் பொள்ளாச்சியில் பிறந்தார். சுதந்திரப் போராட்ட வீரரான இவர் இந்தியாவின் பசுமைப் புரட்சியின் சிற்பி என அழைக்கப்பட்டார். 1975-76 மற்றும் 1976-77ல் இந்திரா காந்தி தலைமையில் 2 முறை மத்திய பட்ஜெட்டைதாக்கல் செய்தார். முதல் பட்ஜெட்டில் அதிக மகசூல் தரக்கூடிய நல்ல தரமான விதைகளை வழங்குவது உட்பட விவசாயத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். விளைச்சலை அதிகரிக்க உர உற்பத்தி திட்டங்களும் துவங்கப்பட்டன. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை பதப்படுத்தி சந்தைப்படுத்துவதை ஊக்குவிக்க கடன் வழங்குவதற்காக விவசாயிகள் கடன் சங்கங்கள் உருவாக்கப்பட்டன. இவருக்கு 1998ல் இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது.
ஆர் வெங்கட்ராமன்
தமிழ்நாட்டை சேர்ந்த ராமசாமி வெங்கடராமன் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ராஜமடம் கிராமத்தில் பிறந்தவர். மத்திய தொழில்துறை அமைச்சராகவும், நிதியமைச்சராகவும், பாதுகாப்பு அமைச்சராகவும், துணை ஜனாதிபதியாகவும் இருந்த இவர் ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார். இவர் நிதி அமைச்சராக 2 முழு பட்ஜெட்டையும், ஒரு இடைக்கால பட்ஜெட்டையும் தாக்கல் செய்தார். இவரது பட்ஜெட்டுகள் சமூக-பொருளாதார முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டிருந்தது. 1980ல் இந்திரா காந்தி வெற்றி பெற்று பிரதமரான போது வெங்கட்ராமன் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இவர் 1980, 1981 ஆகிய 2 ஆண்டுகள் மத்திய நிதி அமைச்சராக பணியாற்றி பட்ஜெட் தாக்கல் செய்தார்.
ப சிதம்பரம்
இதற்கு அடுத்து 5வது தமிழராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப சிதம்பரம் உள்ளார். சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த இவர் 1997ம் ஆண்டு முதல் முறையாக மத்திய நிதியமைச்சரானார். அந்த ஆண்டு கனவு பட்ஜெட் என அழைக்கப்பட்டது. பொருளாதார சீர்த்திருங்கள் மேற்கொள்ளப்பட்டன. வருமான வரி மற்றுமு் தொழில் நிறுவனங்களுக்கான வரி விகிதங்கள் குறைக்கப்பட்டது. வருமான வரியை 40 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாகக் குறைப்பதன் மூலம் வரிவிதிப்பு முறையில் நேரடி, மறைமுக வரி பிரிவுகளில் துணிச்சலாக முடிவுகள் எடுத்து இருந்தார். இது இந்திய பொருளாதாரத்துக்கு வலு சேர்த்தது. அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்தது. ஜப்பான், சீனா போன்ற வளர்ந்து ஆசிய நாடுகளுடன் இந்தியாவுக்கும் இடம் கிடைக்க வழிவகுத்தது. தற்போது வரை அவர் 9 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளார். அதிக பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த நபர் என்ற பட்டியலில் மொரார்ஜி தேசாய்க்கு அடுத்த இடத்தில் ப சிதம்பரம் உள்ளார். மொரார்ஜி தேசாய் மொத்தம் 10 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தார். மேலும் ப சிதம்பரத்தின் பட்ஜெட் உரைகளில் திருவள்ளூவரின் திருக்குறள்கள், ரவீந்திரநாத் தாகூர் மற்றும் சீனப் புரட்சியாளர் டெங் ஜியாவ் பெங்கின் மேற்கொள்கள் அடிக்கடி இடம்பெற்றன.
நிர்மலா சீதாராமன்
இதையடுத்து மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த 6வது நபர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றார். அதோடு முழுநேர முதல் பெண் நிதியமைச்சர் என்ற புகழையும் அவர் பெற்றார். தமிழ்நாட்டின் மதுரையில் பிறந்த நிர்மலா சீதாராமன் பிரதமர் நரேந்திர மோடியின் 2.0 ஆட்சியில் நிதி அமைச்சராக செயல்பட்டு வரும் நிலையில் 5 வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். மேலும் 2021ல் கொரோனா பரவலுக்கு நடுவே காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் முறையை அவர் கடைப்பிடித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமான டிஜிட்டல் இந்தியாவை ஊக்கப்படுத்தும் வகையில் டிஜிட்டல் முறையில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறையை நிர்மலா சீதாராமன் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படியே இன்றும் அவர் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். இவரும் திருக்குறளை தனது பட்ஜெட் உரையில் மேற்கொள் காட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளார் என்பது சிறப்பம்சமாகும்.