'10 மடங்கு அதிகம்..' இந்தியாவில் 40 லட்சம் பேர் கொரோனாவால் பலியாகியிருக்காம்.. ஷாக்கிங் ரிப்போர்ட்
டெல்லி: இந்தியாவில் உண்மையான கொரோனா உயிரிழப்புகள் என்பது பதிவு செய்யப்பட்டதைவிட 10 மடங்கு வரை அதிகமாக இருக்கும் என முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் தனது ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனாவால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக இதுவரை 4.14 லட்சம் கொரோனா உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சூப்பர்..! 5 ஆண்டுகளுக்கு பின் ஜெயலலிதா இருந்த.. அதே அப்பல்லோவில் இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய சசிகலா
நாட்டில் பதிவு செய்யப்பட்ட உயிரிழப்புகளைக் காட்டிலும் உண்மையில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும் என ஆய்வாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
கொரோனா உயிரிழப்பு
ஆனால், மத்திய அரசு இதனைத் தொடர்ந்து மறுத்து வருகிறது. கொரோனா உயிரிழப்புகள் அனைத்தும் முறையாகப் பதிவு செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், கொரோனா உயிரிழப்புகள் குறித்து நாட்டின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், உலகளாவிய மேம்பாட்டு மையம் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் இரண்டு ஆராய்ச்சியாளர்கள் இணைந்து ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அறிக்கை
அந்த அறிக்கையில், "இந்த ஆண்டு தொடக்கத்தில் நாட்டிலுள்ள அனைத்து மருத்துவமனைகளும் கொரோனா நோயாளிகளால் நிரம்ப தொடங்கியது. அப்போது மருத்துவமனைகளில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தவறவிடப் பட்டிருக்கலாம். கொரோனாவால் உண்மையில் ஏற்பட்ட உயிரிழப்புகள் பல லட்சங்கள் வரை கூடுதலாக இருக்கலாம்.
47 லட்சம் பேர்
பதிவு செய்யப்பட்ட மரணங்களைவிடக் கூடுதலாக 30 முதல் 47 லட்சம் வரையில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம். இது தற்போது பதிவு செய்யப்பட்ட கொரோனா உயிரிழப்புகளை விட 10 மடங்கு அதிகமாகும். விடுதலை மற்றும் பிரிவினைக்குப் பிறகு நாட்டில் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பாக இதுவே உள்ளது" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா பாகிஸ்தான் பிரிவினை சமயத்தில் சுமார் 10 லட்சம் பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியா
கொரோனா உயிரிழப்புகள் மற்ற நாடுகளிலும் பதிவு செய்யப்பட்டதைவிட அதிகமாகவே இருக்கும் என்பதை ஆய்வாளர்களின் கருத்து. ஆனால், இந்தியாவில் மிகக் குறைந்த அளவே கொரோனா உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 140 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவில், கொரோனாவுக்கு முன்னரே கூட, உயிரிழப்புகள் முறையாகப் பதிவு செய்யப்பட்டதில்லை என்ற ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
உறுதி செய்கிறது
அரவிந்த் சுப்பிரமணியனின் அறிக்கையில் முதல் அலையிலேயே சுமார் 20 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இது குறித்து வேலூரில் மருத்துவக் கல்லூரியின் டாக்டர் ஜேக்கப் ஜான் கூறுகையில், "இந்த அறிக்கை கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய பேரழிவு தாக்கத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. கொரோனா உயிரிழப்புகள் குறித்துப் பல செய்தியாளர்கள் அச்சமின்றி கூறியதை இந்த அறிக்கை உறுதி செய்கிறது" என்றார்.
மத்திய அரசு
ஏற்கனவே பல ஊடகங்கள் பதிவு செய்யப்பட்ட உயிரிழப்புகளை விட அதிக பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர் எனச் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், இவற்றைத் தொடர்ந்து மறுத்து வரும் மத்திய அரசு, அனைத்து கொரோனா உயிரிழப்புகளும் முறையாகப் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் விளக்கமளித்திருந்தது.
கொரோனா 2ஆம் அலை
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது. அப்போது நாட்டில் இருக்கும் மருத்துவமனைகள் முழுவதும் கொரோனா நோயாளிகளால் நிரம்பியன. கொரோனா பாதிப்பு ஒருபுறம் என்றால், மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் கிடைக்காமல் மறுபுறம் நோயாளிகள் திண்டாடினர். குறிப்பாகத் தலைநகர் டெல்லியில் பல வாரங்கள் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவியதை யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது.