கொரோனாவால் பலியாகும் உயிர்கள்..பகையை மறந்து மருந்துகளை வாங்குங்கள் - சீனாவுக்கு இந்தியா உதவிக்கரம்
டெல்லி: "அரசியல் பகையை மறந்துவிட்டு எங்கள் மருந்துகளை வாங்கிக் கொள்ளுங்கள்.. கொத்து கொத்தாக செத்து மடியும் உங்கள் மக்களை காப்பாற்றுங்கள்" என இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனமான சீரம் நிறுவனத்தின் தலைவர் அதார் பூனாவாலா சீனாவை வெளிப்படையாக கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆனால், சீரம் நிறுவனத்தின் இந்த கோரிக்கைக்கு சீன அரசு இதுவரை பதிலளிக்கவில்லை. ஓரிரு தினங்களில் பதில் கூறுகிறோம் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவில் கொரோனா தொற்றால் ஏற்படும் மரணங்கள் உலகையை உலுக்கி வரும் நிலையில், அந்நாட்டுக்கு வைரஸ் தடுப்பு மருந்துகளை வழங்க இந்தியா முன்வந்துள்ளது. அந்நாட்டில் கொரோனா தடுப்பு மருந்துகள் அனைத்தும் தீர்ந்துவிட்டதை அடுத்து இந்தியா உதவிக்கரம் நீட்டியுள்ளது.
என்னது நாங்க உண்மையை மறைக்கிறோமா..உலக சுகாதார அமைப்பு மீது பாய்ந்த சீனா..என்ன சொல்றாங்க பாருங்க
முதன்முறையாக அறிவித்த சீனா
சீனாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதலாக கொலைகார வைரஸான கொரோனாவின் பரவல் வேகம் எடுத்துள்ளது. 2019-ம் ஆண்டிலும் இதே காலக்கட்டத்தில்தான் அங்கு வைரஸ் பரவத் தொடங்கியதால் உலகமே மீண்டும் அச்சத்தில் ஆழ்ந்தது. அந்த அச்சத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக, அந்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் கொத்து கொத்தாக உயிரிழந்தனர். சராசரியாக நாளொன்றுக்கு 5000 பேர் உயிரிழந்து வருவதாக சர்வதேச சுகாதார அமைப்புகள் தெரிவித்தன. ஆனால், இந்த பலி எண்ணிக்கை குறித்து சீனா எப்போதும் போல மவுனம் சாதித்து வந்தது. இந்த சூழலில்தான், இரு தினங்களுக்கு முன்பு தங்கள் நாட்டில் கடந்த 30 நாட்களில் 60,000 பேர் வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்ததாக சீனா அறிவித்தது.
முழு உண்மையை கூறவில்லை
30 நாட்களில் 60,000 பேர் என்றால் நாளொன்றுக்கு 2,000 பேர் உயிரிழக்கிறார்கள் என சீனா கூறினாலும், சர்வதேச சுகாதார அமைப்புகளும், புலனாய்வு ஊடகங்களும் இதை ஏற்க மறுக்கின்றன. ஒரு நாளுக்கு 5,000-க்கும் மேற்பட்டோர் சீனாவில் இறந்து வருவதாகவும், எனவே அந்நாடு கூறுவது முழுமையான உண்மை இல்லை எனவும் அவை கூறி வருகின்றன. இருந்தபோதிலும், இதுவரை தங்கள் நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்து வாய் திறக்காத சீனா, இப்போது ஓரளவுக்காவது உண்மையை பேசியிருக்கிறதே என உலக நாடுகள் தெரிவித்துள்ளன.
ஒரு சொட்டு மருந்து கூட இல்லை
சீனாவில் இந்த அளவுக்கு உயிர்கள் பலியாவதற்கு கொரோனாவின் வீரியம் மட்டும் காரணம் அல்ல.. அங்கு கொரோனாவுக்கான எந்த மருந்துகளும் இல்லை எனக் கூறப்படுகிறது. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கொரோனா மருந்துகளுக்கு மட்டுமே சீனா அனுமதி வழங்கியிருந்தது. ஆனால் தற்போது அமெரிக்காவிலும் கொரோனா தனது ஆட்டத்தை காட்ட தொடங்கியுள்ளதால் சீனாவுக்கு மருந்துகள் வழங்குவதை அந்நாடு நிறுத்திக் கொண்டது. இதனால் வைரஸ் பாதிப்பை தடுப்பதற்கான தடுப்பு மருந்துகள், கொரோனா காய்ச்சலை போக்குவதற்கான மருந்துகள் என எதுவுமே சீனாவிடம் இப்போது இல்லை. கொரோனா நோயாளிகளுக்கு வெறும் இருமல் மருந்து மட்டுமே மருத்துவமனைகள் வழங்கி வருகின்றன.
"பகையை மறப்போம்".. இந்தியா உதவிக்கரம்
இந்த சூழலில்தான், சீனாவுடன் நிலவி வரும் மோதல் போக்கை புறந்தள்ளிவிட்டு அந்நாட்டுக்கு தாமாகவே முன்வந்து உதவிக்கரம் நீட்டியிருக்கிறது இந்தியா. இதுகுறித்து இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனமான சீரம் நிறுவனத்தின் தலைவர் அதார் பூனாவாலா தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். அவர் கூறுகையில், "சீனாவில் கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்துகள் ஏதுமில்லை என்ற விஷயம் மிகவும் வேதனையை தந்தது. எனவே, எங்களின் கொரோனா தடுப்பூசிகளான கோவோவாக்ஸ், கோவிஷீல்ட் ஆகிய இரண்டு மருந்துகளையும் சீனாவில் சந்தைப்படுத்த முயற்சித்து வருகிறோம். இதுகுறித்து சீன சுகாதாரத்துறையிடம் பேசியுள்ளோம். பழைய பகைகளை மறந்துவிட்டு, கொத்து கொத்தாக இறக்கும் உங்கள் மக்களை காப்பாற்றுங்கள். நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம் எனக் கூறினோம். ஆனால், அந்நாட்டில் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. ஓரிரு நாட்களில் சொல்கிறோம் என்று மட்டுமே தகவல் வந்தது" என்றார்.