பொருளாதார நெருக்கடியில் சிக்கி தத்தளிக்கும் இலங்கைக்கு மேலும் ரூ7,500 கோடி கடனுதவி வழங்கியது இந்தியா
டெல்லி: பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தத்தளிக்கும் இலங்கைக்கு மேலும் ரூ7,500 கோடி கடனுதவி வழங்கியுள்ளது இந்தியா.
கொரோனா தொற்று நெருக்கடி காலத்தில் இலங்கையில் அன்னியசெலாவணி கையிருப்பு மோசமான சரிவை சந்தித்தது. தற்போது இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.

இலங்கையில் அத்தியாவசியப் பொருட்கள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இலங்கையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏராளமான உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சமையல் எரிவாயு கப்பல்களுக்கு பணம் செலுத்த முடியாத நிலையும் இருக்கிறது. இலங்கையில் 1 கிலோ அரிசி விலை ரூ200 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு முட்டையின் விலை தற்போது ரூ30க்கு விற்பனை செய்யப்படுகிறது. தேங்காய் எண்ணெய் விலை 1 லிட்டர் ரூ900 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த நெருக்கடிக்கு தீர்வு காண வலியுறுத்தி தலைநகர் கொழும்பில் பல லட்சம் பேர் பங்கேற்ற பிரமாண்ட போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டம் வன்முறையாகவும் வெடித்தது.

இந்நிலையில் இந்தியாவிடம் மீண்டும் மீண்டும் கடனுதவி கேட்டு வருகிறது இலங்கை. அந்நாட்டுக்கு கடந்த மாதம் ரூ3,750 கோடி கடன் உதவி வழங்கியது இந்தியா. இதனைத் தொடர்ந்து இலங்கை அமைச்சர் பசில் ராஜபக்சே மீண்டும் டெல்லி வருகை தந்தார். பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து கடனுதவி குறித்து ஆலோசனை நடத்தினார் பசில் ராஜபக்சே. மேலும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் பசில் ராஜபக்சே சந்தித்தார்.
இந்த சந்திப்புகளை தொடர்ந்து இலங்கைக்கு ரூ7,500 கோடி கடனுதவி வழங்கப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஜெய்சங்கர், அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கை அடிப்படையில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாட்டைப் போக்க இலங்கைக்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர் கடனுதவி வழங்கப்படும். இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications