"ரைபிள் துப்பாக்கியால் அடி! கெஞ்சியும் காவலர்கள் அனுமதிக்கவில்லை.." தாயகம் திரும்பிய மாணவர்கள் வேதனை
டெல்லி: உக்ரைன் நாட்டில் இருந்து தாயகம் திரும்பிய இந்திய மாணவர்கள், உக்ரைன் ருமேனியா எல்லையில் இருக்கும் மோசமான நிலை குறித்து விவரித்துள்ளனர்.
உக்ரைன் நாட்டில் கடந்த வியாழக்கிழமை தொடங்கிய போர், 5 நாட்களைக் கடந்தும் தொடர்கிறது. தலைநகர் கீவ் தொடங்கிப் பல முக்கிய நகரங்களில் ரஷ்ய மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்று வருகிறது.
இரு நாடுகளுக்கும் இடையே திங்கள்கிழமை பெலராஸ் எல்லையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் இரு தரப்புக்கும் இடையே உடன்பாடு எட்டப்படாத நிலையில், போர் இன்று மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
உக்ரைன் லுபோவ் Weds ஹைதராபாத் பிரதீக்.. தேசம் கடந்த நேசம்!
மீட்புப் பணிகள்
உக்ரைன் நாட்டில் போர் தொங்கிய உடனேயே அந்நாட்டின் வான்வழி முற்றிலுமாக மூடப்பட்டது. அந்தச் சமயத்தில் அங்கு மாணவர்கள் உட்பட சுமார் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் இருக்கலாம் எனத் தகவல் வெளியானது. இதையடுத்து மாற்று வழிகளைப் பயன்படுத்தி இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. அதன்படி ருமேனியா மற்றும் ஹங்கேரி நாடுகளுக்குத் தரைவழியாக மாணவர்கள் அழைத்து வரப்பட்டு, அங்கிருந்து விமானம் மூலம் தாயகம் அழைத்து வரும் பணிகள் நடைபெற்று வருகிறது.
சிறப்பு விமானங்கள்
இதற்காக ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ சிறப்பு விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்றைய தினம் ருமேனியாவில் இருந்து இந்திய மாணவர்களை அழைத்துக் கொண்டு வந்த விமானம் டெல்லியில் பத்திரமாகத் தரையிறங்கியது. அதில் பயணித்த மாணவர்கள் சிலர், அங்குள்ள நிலை குறித்து சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். தாயகம் திரும்பிய சுபான்ஷு என்ற மாணவர் கூறுகையில், "அது ஒரு நரகம்.. உக்ரைன் இப்போது நரகம் போலத் தான் இருக்கிறது. எல்லைக்கு வரும் எங்கள் பயணம் மோசமாக இருந்தது.
கெஞ்சினார்கள்
எங்கள் ஒப்பந்ததாரர்கள் பேருந்துகளை ஏற்பாடு செய்தனர். அவர்கள் எல்லையில் இருந்து 12 கிமீ தூரத்தில் எங்களை இறக்கிவிட்டனர். அங்கிருந்து நாங்கள் நடந்து சென்று எல்லையைக் கடந்தோம். ருமேனிய எல்லைக்குள் நுழைவது பெரும் பிரச்சினையாகவே இருந்தது. எல்லையில் மாணவர்கள் அழுது கொண்டே இருந்தனர். எல்லையைக் கடக்க அனுமதிக்குமாறு அங்குள்ள காவலர்களிடம் கெஞ்சினர். சிலர் மயங்கி விழுந்தனர். ஒரு கட்டத்தில் சில மாணவர்கள் தங்களுக்குள் சண்டையிடவும் தொடங்கினர். நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது.
துப்பாக்கியால் தாக்குதல்
அங்கிருந்த காவலர்கள் சில மாணவர்களைத் துப்பாக்கியால் தாக்கினர். அவர்கள் எங்களை விரும்பவில்லை. எல்லைக் கதவுகள் திறக்கப்படும்போது, உக்ரைன் நாட்டை சேர்ந்தவர்களைத் தான் முதலில் அனுமதிப்பார்கள். இதனால் எங்களுக்கு பெரும் பிரச்சினை இருந்தது. ஆனால் எல்லையைத் தாண்டியவுடன் இந்தியத் தூதரகம் ஏற்பாடுகள் சிறப்பாக இருந்தது. அதன் பிறகு நாங்கள் எந்த பிரச்சனையும் சந்திக்கவில்லை. உணவு மற்றும் தண்ணீர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எல்லை கடந்த பின்னர் பிரச்சினை இல்லை. ஆனால் உக்ரைன் - ருமேனிய எல்லையில் நிலைமை மோசமாக இருக்கிறது" என்றார்.
எதுவும் இல்லை
அதேபோல டெல்லி திரும்பிய மற்றொரு மாணவி சிம்ரன் கூறுகையில், "ருமேனியா எல்லையில் பனிப்பொழிவும் இருந்தது. அங்கு வெப்பநிலை மைனஸ் 12 டிகிரி செல்சியஸாக இருந்தது. அங்கு உணவு மற்றும் தண்ணீர் என எதுவும் இல்லை. தங்குமிடம் கூட இல்லை. எல்லையில் நாங்கள் இப்படியே காத்திருக்க வேண்டி இருந்தது. எல்லையில் உக்ரைன் பக்கம் இந்தியத் தூதரக அதிகாரிகள் யாரும் இல்லை, அவர்கள் அனுமதிக்கப்படவில்லை என நினைக்கிறோம். ருமேனியாவுக்குச் சென்றபோது அங்கு அதிகாரிகள் இருந்தனர். அதன் பின்னர் பிரச்சினை ஏற்படவில்லை" என்றார்
பணிகள் தீவிரம்
உக்ரைன் நாட்டில் இன்னும் கூட குறைந்தது சுமார் 12 ஆயிரம் இந்தியர்கள் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களைத் தாயகம் அழைத்து வரும் பணிகளை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பான பணிகளைப் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாகக் கண்காணித்து வருவதாகவும் இதற்காகக் கடந்த 24 மணி நேரத்தில் 4ஆவது முறையாகப் பிரதமர் மோடி ஆலோசனையிலும் ஈடுபட்டார்.