'குஜராத்தில் கீழடி' - சிந்து சமவெளியின் சாட்சியம் தோலாவிரா பாரம்பரிய சின்னம்- அறிவித்தது யுனெஸ்கோ
டெல்லி: சிந்து சமவெளி நாகரிக மக்களின் வாழ்விடங்களில் ஒன்றான குஜராத்தின் தோலாவிரா தற்போது யுனெஸ்கோவினால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் ஒரு கீழடி என போற்றத்தகுந்த வகையில் தோலாவிராவின் கட்டுமானங்கள் நம் முன்னோர்களான சிந்துசமவெளி மக்களின் வாழ்வியலை இன்றளவும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.
உலகின் மிகப் பழமையான நாகரிகமாக சிந்துசமவெளி நாகரிகம் போற்றப்படுகிறது. இந்திய துணைக் கண்டம் முழுவதும் சிந்துசமவெளி மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள்; அவர்கள் பேசிய மொழி ஆதித் தமிழ் என்பதற்கு இன்றளவும் ஏராளமான சாட்சியங்கள் இருக்கின்றன. இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற ஆய்வாளர் பாலகிருஷ்ணன், சிந்துசமவெளி பரந்துவிரிந்த பகுதிகளின் இடப்பெயர்கள் இன்றளவும் தமிழகத்தின் ஊர்ப் பெயர்களைக் கொண்டதாகவே இருக்கிறது என்பதை விரிவாகவே எழுதி இருக்கிறார்.
சிந்து சமவெளிப் பகுதியிலும் அதற்கு அப்பாலும் வழங்கும் இடப்பெயர்கள் தற்போது தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் வழக்கிலுள்ள இடப்பெயர்களை அச்சு மாறாமல் அப்படியே நினைவுப்படுத்துகின்றன. அது மட்டுமன்றி, அவ்வடமேற்குப்புலத்தில், சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகிற ஊர்களின், ஆறுகளின், மலைகளின், துறைமுகங்களின், தலைநகரங்களின் பல்வேறு அரசுக்குடிகளின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளின் பெயர்களை மட்டுமன்றி பல்வேறு பழந்தமிழ்க் குடிகளின், மன்னர்களின் பெயர்களையும், குடிப்-பெயர்களையும், வேளிர், அதியர் மற்றும் பல குறுநிலக் குடிகளையும் குறுநிலத் தலைவர்களின் பெயர்களையும் அப்படியே நினைவுறுத்தும் இடப்பெயர்கள் இன்னும் வழக்கில் உள்ளன என்கிறார் முனைவர் பாலகிருஷ்ணன். ஐராவதம் மகாதேவன் போன்ற எண்ணற்ற ஆய்வாளர்கள் சிந்துவெளி நாகரிகம் என்பது திராவிடர் நாகரிகம் என்பதை ஆழமாகவே கருதுகின்றனர்.
அடப்பாவிகளா இப்படியுமா செய்வீங்க .. வீடு தேடிப்போய் பார்த்து.. மிரண்டு போன புதுச்சேரி போலீஸ்
குஜராத் தோலாவிரா
பாகிஸ்தானில் மட்டுமல்ல சிந்துசமவெளி நாகரிகத் தடங்கள், கைவிடப்பட்ட நகரங்கள் வட இந்தியாவில் பல இடங்களில் இருக்கின்றன. குறிப்பாக சொல்வது எனில் பாகிஸ்தான் எல்லையில் குஜராத் மாநிலத்தின் கட்ச் பிராந்தியத்தில் உள்ள தோலாவிரா மற்றும் அகமதாபாத் நகர் அருகே உள்ள லோத்தல் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இதில் மிக முக்கியமானதாக கருதப்படுவது தோலாவிராதான்.
பாலைவனத்துக்கு நடுவில் பிரமாண்டம்
தோலாவிரா என்பது சதுப்புநிலமாக பாலைவனமாக விரிந்து பரந்து கிடக்கும் குஜராத்தின் ரான் ஆப் கட்ச் என்ற பகுதியின் நடுவே இருக்கிறது. ஆமாம் சிந்துசமவெளி மக்கள், பாலைவனத்துக்குள் மிக செழிப்பான வாழ்க்கையை திட்டமிட்டு வாழ்ந்திருக்கிறார்கள். தோலாவிராவின் மிகப் பெரிய ஆச்சரியமே பிரமாண்ட நீர் சேமிப்பு கட்டமைப்புதான். தோலாவிரா நகரத்தின் கட்டமைப்பு இன்றைய நவீனத்தைவிட மிக அற்புதமானதாக திட்டமிட்டு கட்டப்பட்டிருக்கிறது. சிந்துசமவெளி மக்கள் எப்படியான உச்சநிலை பண்பாட்டில் வாழ்ந்தனர் என்பதை பாலைவனத்துக்கு நடுவே சாட்சியமாக நின்று சொல்கிறது இந்த தோலாவிரா.
நிலக்கீழ் நீர் கட்டமைப்புகள்
தோலாவிரா நகரத்தின் அருகே மழைக்காலங்களில் பெருக்கெடுத்து ஓடிய மான்சர், மான்கர் ஆற்று வெள்ளத்தை அப்படியே தங்கள் நகருக்குள் திசைதிருப்பி சேமித்து பயன்படுத்தி இருக்கின்றனர் தோலாவிராவில் வாழ்ந்த சிந்துசமவெளி மக்கள். இதற்கான மிக பிரமாண்டமான நீர் சேமிப்பு கட்டுமானங்கள் இன்றளவும் பிரமிப்பூட்டுகின்றன. கால்வாய், நிலக்கீழ் பெரும் நீர்த்தொட்டிகள் என தொலாவிராவின் ஒவ்வொரு தொன்மமும் நம்மை மிரட்சி அடைய வைக்கின்றன. தோலாவிராவில் கிடைத்த பொருட்களை பார்க்கும் போது அப்படியே நமது தமிழகத்தின் கீழடியிலும் கொற்கையிலும் ஆதிதமிழர்கள் பயன்படுத்தியதாகவே உள்ளன.
நாகர்களின் தாய்நிலம்
கீழடி, கொற்கை, ஆதிச்சநல்லூர், கொடுமணல் அகழாய்வு வரிசைகள் தமிழகம் என்ற மாநிலத்துடன் சுருங்கிப் போய்விடக் கூடாது ... இங்கேயும் வாருங்கள் என நம்மை அழைப்பது போலத்தான் தோலாவிராவும் கட்ச் பிராந்தியமும் இருக்கிறது. அதாவது சிந்து நதியின் இன்னொரு கரை நாகரிகம் இது. குஜராத்தின் கட்ச் பகுதியின் பூர்வீக மக்கள் பற்றிய சாதாரண விக்கிபீடியா குறிப்புகளிலேயே இது நாகர்களின் தாய்நிலம் என்றுதான் எழுதி வைத்திருக்கின்றனர். நாகர்கள், இந்திய துணைக் கண்டத்தில் வாழ்ந்த ஆதி தமிழர்கள். கட்ச் பகுதியின் தலைநகர் பூஜ். பூஜ் என்றால் நாகம் என்பதுதான் அர்த்தம். அங்கே நாக வழிபாடு இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அன்று பாய்ந்த சிந்துநதி
அதுமட்டுமல்ல கட்ச் பிராந்தியத்தில் தோலாவிராவுக்கு அருகே Lakhpat என்ற கைவிடப்பட்ட கோட்டை இருக்கிறது. Lakhpat கோட்டைக்கு செல்லும் பாதை ஆற்று மணல் பாதை.. ஆற்றின் அடிஆழத்தில் புதைந்துகிடந்த அத்தனை பொருட்களும் கண்ணுக்கு எட்டிய தொலைவில் சிதறிக்கிடக்கின்றன. அதாவது ஒரு பெரும்நதி ஒன்று மரணித்துப் போனதன் அடையாளம் அது. ஆம் Lakhpat கோட்டையில் இந்திய தொல்லியல் துறை ஒரு குறிப்பு வைத்திருக்கிறது. அந்த குறிப்புதான் நம்மை சில்லிடவும் வைக்கிறது. கி.பி.1819-ம் ஆண்டு ஏற்பட்ட மிகப் பெரிய நிலநடுக்கத்தால் அல்லாபந்த் என்ற இயற்கையான அணை உருவானது; அதனால் இந்த பகுதியில் பாய்ந்தோடிய சிந்து நதி திசை மாறி அரபிக் கடல் நோக்கி (அதாவது இன்றைய பாகிஸ்தானுக்கு) இடம்பெயர்ந்து போனது என்கிறது தொல்லியல்துறையின் குறிப்பு. அதன்பிறகு கைவிடப்பட்ட சூனிய பிரதேசமாகப் போனது Lakhpat பிராந்தியம்.
அகழாய்வு இணைப்பு அவசியம்
இப்படி ஆதி தமிழர்களான நாகர்கள், சிந்துசமவெளி மக்கள், சிந்துநதி என அத்தனையோடும் தொடர்பு கொண்டதாக குஜராத்தின் கட்ச் பிராந்தியத்தின் தோலாவிரா உள்ளது. இந்த தோலாவிராவை இப்போது யுனெஸ்கோ உலகின் பாரம்பரிய சின்னமாக அறிவித்திருப்பது போற்றுதலுக்குரியது. இதை வரவேற்கிற, கொண்டாடுகிற நாம், நம் தமிழகத்து அகழாய்வுப் பணிகளுடன் குஜராத்தின் லோத்தல், தோலாவிரா, சிந்துநதி பாய்ந்து மரணித்துப் போன Lakhpat ஆகியவற்றையும் இணைத்துக் கொண்டால் நாம் யார்? நமது பூர்வோத்திரம் என்ன? பூமிப்பந்தின் முதல் குடிமக்களாக எப்படி செழித்து வாழ்ந்தோம் என்பதை வருங்காலத்துக்கேனும் சொல்லி வைக்க முடியும்.