சூப்பர் சான்ஸ்! இந்திய விமான படையில் அக்னி வீரராக சேர இளைஞர்களுக்கு வாய்ப்பு.. தகுதி என்ன தெரியுமா?
டெல்லி: இந்திய விமானப் படையில் 'அக்னிபாத்' திட்டத்தின் கீழ் 'அக்னி வீரராக' பணியாற்ற இளைஞர்களுக்கு விமானப்படை அழைப்பு விடுத்துள்ளது.
இதில் பணியாற்ற விரும்புவோர்கள் இன்று தொடங்கி வரும் 23ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல விண்ணப்பிப்பவர்கள் 2002ம் ஆண்டு ஜூன் 27ம் தேதி முதல் 2005ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதிக்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது
நாடு முழுவதும் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு நடைபெற்று வருகிறது. அதே போல தற்போது விமானப் படைக்கும் ஆள் சேர்ப்பு நடைபெற்று வருகிறது. இதில் சேர விரும்புவோர்கள் இன்று மாலை 5 மணி முதல் agnipathvayu.cdac.in எனும் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று விமானப்படை தெரிவித்துள்ளது. இவ்வாறு விண்ணப்பிப்பதற்கு வரும் 23ம் தேதிதான் இறுதி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

+2 மதிப்பெண்
மேலும், இதில் திருமணமாகாத இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு விண்ணப்பிப்பவர்களுக்கு வரும் ஜூன் 23 அன்று தேர்வு நடைபெறும். இதில் தேர்வு செய்யப்பட்டால் அக்னி வீரராக பணியாற்றும் காலத்தில் அவர்களால் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கப்படமாட்டாது. அதேபோல விண்ணப்பிக்கும் போது 'திருமணமாகாதவர்' எனும் சான்றிதழை இணைக்க வேண்டும். கல்வி தகுதியை பொறுத்த அளவில், 12ம் வகுப்பில் அறிவியல், கணிதம், இயற்பியல் உள்ளிட்ட பாடங்களில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும். அதேபோல ஆங்கிலத்திலும் 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

பாலிடெக்னிக்
12ம் வகுப்பில் அறிவியல் தவிர இதர துறையை தேர்ந்தெடுத்தவர்கள் ஆங்கிலம் உட்பட எல்லா பாடங்களிலும் குறைந்தபட்சம் 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பாலிடெக்னிக் கல்வியை பொருத்த அளவில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாலிடெக்னிக் நிறுவனத்தில் மூன்றாண்டு டிப்ளமோ இன்ஜினியரிங் (மெக்கானிக்கல்/எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/ஆட்டோமொபைல்/கம்ப்யூட்டர் சயின்ஸ்/இன்ஸ்ட்ரூமென்டேஷன் டெக்னாலஜி/தகவல் தொழில்நுட்பம்) படிப்பில் 50% மதிப்பெண்களை பெற்று தேர்ச்சியடைந்திருக்க வேண்டும். இத்துடன் ஆங்கிலத்தில் 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

விமர்சனங்கள்
இது ஒருபுறம் இருக்க நாடு முழுவதும் ராணுவ வீரர்களுக்கான காலிப்பணியிடங்கள் அதிக அளவில் உள்ளதாகவும், ஆனால் தொடர்ந்து குறைவான ஆட்களே எடுக்கப்படுவதாகவும் மறுபுறம் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. சமீபத்தில் 40 அக்னி வீரர்கள் வேண்டும் என ராணுவம் விண்ணப்பித்திருந்த நிலையில், 35 லட்சம் இளைஞர்கள் இதற்காக விண்ணப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications