அன்று கபில் சிபல் வைத்த வாதம்.. உடனே ஏற்ற நீதிபதிகள்.. ப. சிதம்பரத்திற்கு எப்படி பெயில் கிடைத்தது?
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு பெயில் கிடைக்க அவரின் வழக்கறிஞர் கபில் சிபல் வைத்த முக்கியமான வாதம் ஒன்றுதான் காரணம் என்கிறார்கள்.
Recommended Video
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு பெயில் கிடைக்க அவரின் வழக்கறிஞர் கபில் சிபல் வைத்த முக்கியமான வாதம் ஒன்றுதான் காரணம் என்கிறார்கள்.
ஒரு வழியாக பெரும் சட்ட போராட்டத்திற்கு ப. சிதம்பரம் ஜாமீனில் வெளியே வருகிறார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
இன்று பிற்பகல் ப. சிதம்பரம் திகார் சிறையில் இருந்து வெளியே வருகிறார். உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர். பானுமதி மற்றும் நீதிபதிகள் ஏ எஸ் போபன்னா, ஹிரிஷிகேஷ் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. இதன் மூலம் 106 நாட்கள் கழித்து அவர் ஜாமீனில் வெளியே வருகிறார்.
உஸ்ஸப்பா!.. 106 நாட்கள் கழித்தாவது ஜாமீன் கிடைத்ததே.. பெருமூச்சுவிட்டு கார்த்தி சிதம்பரம் ட்வீட்!
ஜாமீன் மனு
இந்த வழக்கில் கடந்த நவம்பர் 28ம் தேதி ப. சிதம்பரம் சார்பாக கபில் சிபல் வைத்த வாதம்தான் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அவர் தனது கடைசி வாதத்தில், ப. சிதம்பரத்திற்கு ஜாமீன் அளிக்க வேண்டும். அவர் போதுமான நாட்கள் சிறையில் இருந்துவிட்டார். அவரிடம் அதிக நாட்கள் விசாரணை நடத்திவிட்டார்கள்.ஆனால் அவர் எந்த முறைகேடும் செய்யவில்லை. வேண்டுமென்றே அரசியல் ரீதியாக ப. சிதம்பரம் பழி வாங்கப்படுகிறார்.
அரசியல்
அமலாக்கத்துறை வேண்டுமென்றே அவருக்கு ஜாமீன் தர மறுக்கிறது அமலாக்கத் துறை தாக்கல் செய்த பதில் மனுவில் சிதம்பரம் சாட்சியங்களை கலைக்க முயற்சித்ததாக ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அதற்கான ஆதாரங்கள் ஒன்றை கூட அவர்கள் சமர்ப்பிக்கவில்லை.
வருடம்
அப்படி கலைக்க வேண்டும் என்று ப. சிதம்பரம் நினைத்து இருந்தால், இத்தனை வருடத்தில் அவர் அதை செய்யாமல் இருந்து இருப்பாரா?இது மிகவும் தவறானதாகும். அவர் எங்கும் தப்பிச் செல்லமாட்டார். அவருடைய பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க நாங்கள் தயாராக உள்ளோம்.
உடல் நிலை
அவர் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வருகிறார். இது குரோன்ஸ் நோய் என்று மருத்துவர்கள் கூறி உள்ளனர். இதனால் வயிற்றில் அலர்ஜி ஏற்பட்டு புண்கள் ஏற்பட்டுள்ளது. எனவே அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்.
என்ன காரணம்
பொதுவாக ஜாமீன் மறுக்க மூன்று காரணங்கள் சொல்லப்படும். தலை மறைவாகுதல், ஆதாரங்களை அழித்தல், சாட்சியங்களை மிரட்டுதல். ஆனால் இது மூன்றையும் ப. சிதம்பரம் செய்யவில்லை. ஆனால் அவருக்கு எதிராக வழக்கின் கனமும், தன்மையும் கணக்கில் கொள்ளப்படுகிறது.
குற்ற வழக்கு
ஆனால் இது போன்ற குற்ற வழக்குகளில் வழக்கின் தன்மையை கணக்கில் கொள்ள கூடாது. ஏனென்றால் வழக்கில் ப. சிதம்பரத்திற்கு எதிராக சரியான முறையான ஆதாரங்கள் இல்லை. அதனால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
உறுதி
இதில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர். பானுமதி, ஏ எஸ் போபன்னா, ஹிரிஷிகேஷ் ஆகியோர் தலை மறைவாகுதல், ஆதாரங்களை அழித்தல், சாட்சியங்களை மிரட்டுதல் என்று வாதத்தை ஏற்றுக்கொண்டனர். இது மூன்றையும் ப. சிதம்பரம் செய்ய வாய்ப்பில்லை என்று உறுதி அளிக்கப்பட்டது.
ஜாமீன் வழங்கினார்
இந்த உறுதியை ஏற்றுக்கொண்டு ப. சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் இது போன்ற குற்ற வழக்குகளில் வழக்கின் தன்மையை கணக்கில் கொள்ள வேண்டும். வழக்கின் கனம் இப்போதும் முக்கியம்தான் என்று நீதிபதிகள் ஜாமீன் வழங்கும் போது குறிப்பிட்டு இருக்கிறார்கள்.