குறைந்த பாஜகவின் பலம்.. துணை ஜனாதிபதி தேர்தலில் “ஜம்ப்” - காங்கிரஸுக்கு ஜார்க்கண்ட் ஆளுங்கட்சி ஆதரவு
டெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி வேட்பாளர் மார்க்ரெட் ஆல்வாவுக்கு ஆதரவு அளிப்பதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி அறிவித்து உள்ளது.
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிகாலம் நிறைவடைவதை தொடர்ந்து நேற்று புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.
அதேபோல் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவின் பதவிகாலமும் முடிவடைய இருப்பதால் வரும் ஆகஸ்டு 6 ஆம் தேதி குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
குடியரசு துணைத் தலைவர்.. யாருக்கும் ஆதரவில்லை.. திரிணாமுல் காங்கிரஸ் திடீர் அறிவிப்பு!
இன்று வேட்புமனுத் தாக்கல் நிறைவு
ஜூலை 6 ஆம் தேதி தொடங்கிய குடியரசுத் துணைத் தலைவருக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூலை 19 ஆம் தேதியான இன்றுடன் நிறைவடைய உள்ளது. இதனை தொடர்ந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும் தத்தமது வேட்பாளர்களை அறிவிக்க பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டனர்.
பாஜக வேட்பாளர்
பாஜக சார்பில் வெங்கய்யா நாயுடு அல்லது முன்னாள் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி உள்ளிட்டோர் நியமிக்கப்படலாம் என்ற பேச்சுக்கள் அடிபட்டு வந்தன. இந்த நிலையில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜெகதீப் தங்கர் அறிவிக்கப்பட்டு உள்ளார். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடன் தொடர் மோதல் போக்கை கடைபிடித்து வந்த ஜக்தீப் தங்கர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை யாரும் எதிர்பார்க்கவில்லை.
ஜக்தீப் தங்கார் வேட்புமனு
இதனை தொடர்ந்து நேற்று தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தங்கர் வேட்புமனுவை தாக்கல் செய்தார். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், மத்திய வேளாந்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்ளிட்டோர் வேட்புமனுத் தாக்கலின்போது உடன் இருந்தனர்.
எதிர்க்கட்சிகள்
குடியரசுத் தலைவர் தேர்தலின்போது எதிர்க்கட்சிகளின் அணி பலமற்ற நிலையில், அவர்களுடன் இருந்தவர்களே பாஜகவின் திரௌபதி முர்முவுக்கு ஆதரவளிப்பதாக கூறின. இதனால் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வேட்பாளரை நிறுத்துமா? என்பதே கேள்விக்குறியாக இருந்தது. ஆனால், இது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்துக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்தது. மறுபக்கம் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் வேறொரு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தது.
மார்க்கரெட் ஆல்வா வேட்புமனுத்தாக்கல்
இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் மார்க்கரெட் ஆல்வா நிறுத்தப்பட்டு இருக்கிறார். வேட்புமனுத் தாக்கலின் கடைசி நாளான இன்று அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் டி.ராஜா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திமுக எம்.பி. திருச்சி சிவா, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
திரிணாமூல் ஆதரவில்லை
ஆனால், முந்தைய குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவளித்த மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த யாரும் இதில் பங்கேற்கவில்லை. இதுகுறித்து பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் பங்கேற்கவில்லை என்று அறிவித்தது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா
இந்த நிலையில் காங்கிரஸ் கூட்டணியுடன் ஜார்க்கண்டில் ஆட்சி செய்து வரும் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மார்க்கரெட் ஆல்வாவுக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளார். நடந்து முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு அக்கட்சி ஆதரவளித்தது குறிப்பிடத்தக்கது.